நீயின்றி நானில்லை

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொருவன் இருக்கிறான் வெளிப்பிரகாரமாய் இருக்கிற நம் சரீரம் நமது கண்கள் பார்க்கும் படியாக இறைவனால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது அதற்கு பெயர்தான் "வெளி மனிதன்" அல்லது "சரீர பிரகாரமான மனிதன்" என அழைக்கப்படுகிறான் 

இந்த சரீரமாகிய வெளிப்பிரகாரமான மனிதனை வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுலடியார் "பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு" என்கிறார் (2 கொரி5:1), அப்போஸ்தலனாகிய பேதுருவும் "என் கூடாரத்தை விட்டு போவது சீக்கிரத்தில் நேரிடும்"(2பேதுரு1:13)  என அவரும் சரீர மனிதனை கூடாரம் என்றே குறிப்பிடுகிறார், இன்னொரு இடத்தில் பவுல் "நீங்களே தேவனுடைய ஆலயம்"(1கொரி3:16) என்கிறார் 
 

 இன்னும் ஆழமாய் பார்ப்போமென்றால் நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் இம்மூன்றால் இணைந்த  முழு மனிதனாய் தேவனுடைய திருத்துவத்தைப் போல  உருவாக்கப்பட்டு இருக்கிறோம், எப்படி திரித்துவ தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக இருக்கிறாரோ அவ்வாறே நாமும்  உருவாக்கப்பட்டிருக்கிறோம், ஒன்றில் மூன்றாய் மூன்றில் ஒன்றாய் அவரைப்போல திருத்துவதில் இருக்கிறோம்
     நாம் அவரின் பிள்ளைகள் "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்  அதிகாரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்"(யோவான்  1:12)

சரி இனி இரு மனிதர்களை குறித்து பார்ப்போம்

1.வெளிப்பிரகாமான மனிதன்  (Outer man)
 
வெளிப்பிரகார மனிதனைதான் சரீர மனிதன் என்கிறோம் கூடாரம் இன்றி மனிதன் வசிக்க முடியாது கூடாரம்  பாதுகாப்பைத் தருகிறது கூடாரத்தை சரியாக கட்ட வேண்டும் அப்போதுதான் அதில் நாம் பிழைக்க முடியும் அஸ்திபாரம் சரியாக இல்லாவிட்டால் வீடு ஆட்டம் கண்டுவிடும்  அப்படிப்பட்ட வீட்டில் வசிப்பது ஆபத்தானது அதேபோல் நம்முடைய சரீரமாகிய வீட்டை சத்தான கனிகள், காய்கறிகள், கீரைகள், இறைச்சி, பால், தயிர் என பல வகையான ஊட்டச்சத்து மிக்க பானங்களையும் உணவுகளையும் அஸ்திவாரமாக உட்கொள்கிறோம். இறைவன் இவைகளை எல்லாம் படைத்ததின் நோக்கம் நாம் ருசிக்க வேண்டும் ரசிக்கவேண்டும் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆரோக்கிய சரீரத்தோடு அவரை அன்பினில் தொழுது கொள்ளவேண்டும், சினேகம் பாராட்ட வேண்டும், உறவில் திளைத்திருக்க வேண்டும் என்பதே இச்சரீரமாகிய கூடாரத்தை பேணிக்காக்க இவைகளை எல்லாம் நமக்கு அன்பின் பரிசாக இப்பூமியில் இறைவன் படைத்திருக்கிறார்.
ஆகவே நாம் நம் உடல் நலத்தை குறித்து  விழிப்புணர்வு உள்ளவர்களாக  இருக்க வேண்டும் எதை உட்கொள்ள வேண்டும் எதை உட்கொள்ளக்கூடாது எது சரீரத்திற்கு ஏதுவானது என புசிக்க திட்டமிட வேண்டும். இறைவனால் உண்டாக்கப்பட்டது தானே என எல்லாவற்றையும் ஸ்தோத்திரம் செய்து புசிக்கக் கூடாது, ராஜபோக விருந்து கிடைத்தாலும் ஒரு பிடி பிடித்துவிடலாம் என்று  மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது தானியேலை போல உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம் ராணுவத் துறை, காவல்துறையில் பணியாற்றிட ஹெல்த் பிட்னஸ் மிகவும் அவசியம் என்பார்கள் முடிந்தவரை நாமும் அவர்களைப் போல உடலை ஆரோக்கியமாக  வைத்துக் கொள்வது அவசியம், இதுவரை வெளிப் பிரகாரமான மனிதனின் வளர்ச்சியை குறித்து பார்த்தோம் 

2.உள்ளான மனிதன் (Inner man)

     இந்த உள்ளான மனிதனை ஆவிக்குரிய மனிதன் என்கிறோம் உள்ளான மனிதன் தேவா ஆவியோடு தொடர்பில் இருக்கும் மனிதன் ஆவான், இந்த உள்ளான மனிதனை நேசிக்கும் கடவுளுக்கு ஆத்துமநேசர் என்கிற பெயருண்டு தேவ ஆவி மனித ஆவியோடு இணைந்து அவனை  மறுரூபப்படுத்தும் தெய்வீக நிலை உள் மனிதனுக்கு அவசியமாகிறது, ஒரு மனிதனின் இருண்ட வெற்றிடத்தில் தேவனின் வெளிச்சமே புது வாழ்வை உண்டாக்குகிறது வாழ்வின் மீது புதிய அர்த்தத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வருகிறது
   வெளி மனது போலவே உள் மனிதனுக்கும் பசி, தாகமுண்டு அவனுக்கும் ஏற்ற உணவை அருள வேண்டும் அப்படி அருளினால்தான் உள்ளான மனுஷன் பெலப்பட இயலும், உள்ளான மனிதனை குறித்து பவுல் இப்படியாக கூறுகிறார்
  " நீங்கள் தேவனுடைய ஆவியினாலே உள்ளான மனுசனில் வல்லமையாய் பலப்படவும் "(எபேசியர்3:16)
    "மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (உபாகமம் 8:3)
    "என் ஆத்துமா தேவன்மேல் தாகமாய் இருக்கிறது" (சங்கீதம் 42:2)
      ஆகவே உள்ளான மனிதன் நாளுக்கு நாள் பலப்பட, புதிதாக்கப்பட, இறைவனின் மகிமை வெளிப்பட  உட்கொள்ள வேண்டிய உணவு இந்த வேத வசனமாகிய ஜீவ அப்பம்  ஆகும், வேதம் ஆத்துமாவுக்கு உணவாகவும்,ஆத்ம  தாகத்திற்கு ஜீவநதியாகவும் இருக்கிறது, வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான் வேத வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்கிறது நாளே என வேதம் சொல்கிறது  

    முடிவு

     இரு மனிதர்கள் சேர்ந்த இறைவனின் ஒரு மனிதனாய் இருக்க நாம் பாகுபாடின்றி இரு கண்களைப் போல சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதுகாத்து போஷித்து வாழ்வு பாதையில் பயணிக்க வேண்டும்,  " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"எனும்  இப்பழமொழி சரீரத்துக்கு மட்டுமல்ல ஆத்துமாவுக்கு உரியது 
    ஒன்று இன்னொன்றை பாதிக்கும் ஆகவே இனி  அனுதின வாழ்வில் இவ்விரண்டு மனிதர்களையும் போஷித்து பாதுகாத்து இறையன்பை உணர்ந்து  பகிர்ந்து வாழ்வோம் 

கவிமுகில் சுரேஷ் 
தருமபுரி 



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download