சங்கீதம் 99- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - கர்த்தர் நீதி செய்யப் பிரியப்படும் பரிசுத்தமுள்ளவர்.
 - கர்த்தருடைய நாமத்தை பயபக்தியுடன் துதிக்கவேண்டும்.
 - கர்த்தர் தமது மக்களின் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர்.

1. கேரூபின்கள் மத்தியில் வீற்றிருந்து அரசாளும் கர்த்தர் (வச.1-5)

கர்த்தராகிய தேவன் மகத்துவமானவர், மிகவும் பயங்கரமான பெரிய வல்லமையுள்ளவர். அவருடைய குணாதிசயத்தில் மிக முக்கியமானது அவர் நீதி செய்ய பிரியப்படுகிறார் என்பதாகும். மேலும், அவர் ஒரு பரிசுத்தமான தேவன். கர்த்தருடைய சிங்காசனம் கேரூபின்கள் என்னும் பலமுள்ள தேவதூதர்களால் சூழப்பட்டுள்ளது என்பதும் அவருடைய மகா வல்லமையைக் காண்பிக்கிறது (வச.1).   யாத்திராகமம் 25:22, ஏசாயா 6:1-4, வெளிப்படுத்தல் 4:6-9
இந்த வசனங்கள் மகத்துவமான தேவனுடைய சிங்காசனம் கேரூபின்கள் சேராபீன்களால் சூழப்பட்டு எப்போதும் துதி ஏறெடுக்கப்படுவதை காட்டுகின்றன.

ஆகவே, நாமும் கூட கர்த்தருடைய நாமத்தை மிகுந்த மரியாதையுடன் துதிக்க வேண்டும், இந்த உலகத்தாரைப்போல அலட்சியம் செய்யக்கூடாது (வச.5). கர்த்தராகிய தேவன் யாக்கோபு என்னும் இஸ்ரவேலருக்கு நீதியை செய்து, சீயோனில் பெரியவராக அறியப்பட்டவர். முழு உலகத்திலும், எல்லா ஜனத்திலும் உயர்ந்தவராக அரசாளுகிறார் (வச.2).

2. ஜெபங்களுக்கு பதிலளித்த தேவன் (வச.6-9)

மோசே, ஆரோன், சாமுவேல் என்ற தேவதாசர்கள் மக்களுக்காக பரிந்துபேசி தேவ தயவை பெற்று, மக்களை அழிவிலிருந்து மீட்டனர். ஆகவே, அவர்கள் ஜெபத்திற்கு பதில் பெற்றவர்களில் முதன்மையானவர்களானார்கள் (வச.6).
யாத்.28:1, 32:30, 1 சாமுவேல் 7:5
இவர்களைப்போல விசுவாசிளளாகிய நாமும் கூட பல தேவைகளில் இருக்கும் மக்களுக்காகவும், பிரச்சனைகளிலும், பெலவீனங்களில் வருத்தப்படும் ஜனங்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கும் பல கோடி ஜனங்கள் மீட்கப்பட நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது, நம் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளித்து அவர்களை இரட்சிப்பார். "தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, ...' என்று  யாக்கோபு 5:19,20 வசனங்களில் வாசிக்கிறோம். இந்த ஊழியம் நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தேவ ஜனமாகிய நாம் இதைச் செய்வோமா?
நம்முடைய தேவன் நீதி செய்ய விரும்பும் பரிசுத்தமான தேவன். நீதியை சரிகட்டுகிற தேவன். ஆனாலும், மனந்திரும்பி வரும் பாவியை மன்னித்து இரட்சிக்கிற தேவன் (வச.8). நமது ஜெபத்தின் மூலம் பாவி மனந்திரும்பவும், தேவன் அவர்களை இரட்சிக்கவும் கூடுமானால் நாம் அந்த ஊழியத்தை வாஞ்சையாக செய்யவேண்டும்.

ஆகவே இப்படிப்பட்ட பரிசுத்தமான தேவனை நாம் உயர்த்தி, பயபக்தியாய் பணிந்துகொண்டு, அனேக ஜனங்களை அவருடைய பரிசுத்த பர்வதமாகிய மந்தையில் சேர்க்க உழைப்போம் வாரீர் (வச.9).

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download