ஆட்டு வாசல்!

இந்திய மண்ணின் சுட்டெரிக்கப்பட்ட வாசல்களுக்கு உயிர்கொடுப்போம் வாருங்கள்!

(தேசத்தின் நாலாபக்க வாசல்களையும் கட்டியெழுப்ப வேதத்தின் மாதிரி)

நிஜவாழ்க்கைக்கும் யதார்த்தங்களின் நடைமுறைக்கும் எக்காலத்துக்கும் நமக்குக் கையேடாகத் திகழ்வது வேத புத்தகம் மாத்திரமே!

பாழான எருசலேமின் அலங்கத்தையும் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பழுதுபார்த்து, வெறும் ஐம்பத்திரண்டே நாட்களில் ஒரு மனிதனின் தலைமையில் ஒன்றுபட்ட மீதியான பாரப்பட்ட ஜனம் கட்டி முடித்தது சாத்தியமானால், இன்றைக்கும் இதோ சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும் இந்த இந்திய மண்ணின் நாலாபக்க வாசல்களுக்கும் அதின் மண்மேடுகளான கற்களுக்கும் உயிர்கொடுக்க அதே நெகேமியா மிஷனே இன்றைக்கும் நமக்கு வழிகாட்டி நிற்கிறது.

எருசலேமுக்கு பன்னிரண்டு வாசல்கள் உண்டானால் நமது இந்திய தேசத்திற்கும் அதே வாசல்களும் அதன் அர்த்தங்களும் பொருந்துமே! அப்படியே நம் தேசத்தில் இடிந்து கிடக்கும் இந்தப் பன்னிரண்டு வகையான வாசல்களை எழுந்து கட்டுவோம் வாருங்கள்!

ஆட்டுவாசல்

"நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்..நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்" என்றார் இயேசு. (யோ 10:7, 9)

எருசலேமின் இந்த ஆட்டுவாசல் ஆடுகளை மேய்ச்சல்களுக்கு வெளியே இட்டுச்செல்வதற்கும், மாலையில் உள்ளே கொண்டுவருவதற்குமாக உபயோகப்படுத்தப்பட்டது. 

ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசிக்காமல் வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்ற வார்த்தையின்படி இந்திய தேச இரட்சிப்புக்கும், தேசத்தின் ஜனமாகிய ஆடுகளுக்கும் இரட்சிப்பின் வாசலாயிருப்பவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமல்லவோ? அவர் வழியான இரட்சிப்பைக் கண்டடையாமல், முக்திக்கு வழியென்று எதையெதையோ கண்டுபிடித்து, இயேசு என்னும் வாசல் வழியாய்ப் பரலோக மந்தைக்குள் சேராமல், வெவ்வேறு வழியில் ஏறிவரும் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிற சத்துருவுக்கு பலியாகிப்போன ஆடுகள் தான் எத்தனை எத்தனை கோடிகள் ! இந்தத் தேசத்தின் ஆடுகளைத் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வந்த திருடர்கள்தான் எத்தனை எத்தனை! ஆடுகளைப் பீறி அவைகளைச் சிதறடிக்கும் ஓநாய்கள் தான் இம்மண்ணில் எத்தனை எத்தனை!

தேசத்திலே ஆட்டு வாசலாம் இயேசுவின் மெய்யான இரட்சிப்பின் வாசல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடப்பதாலேயே நாலாபக்க வழியிலும் சத்துருவின் உட்புகுதலும் குடியோடிப் போகுதலும் இங்கே இல்லையோ? சிதறி அலையும் காணாமல் போன ஆடுகளைத் தேடி இயேசு என்னும் இரட்சிப்பின் வாசலாம் ஆட்டுவாசல் வழியே உள்ளே கொண்டுவர நமது தேசத்தின் ஆட்டுவாசலைப் பழுதுபார்த்துக் கட்டுவோம் வாருங்கள்!

முதல் தேவை தேசத்து ஜனங்களுக்கு இரட்சிப்பு ! அது இயேசுவினால் மாத்திரமே! இங்கே உள்நுழைந்து ஆடுகளைப் பட்சிக்கும், சிதறப் பண்ணும் கொள்ளைக்காரரும் திருடரும் கொலைகாரருமான தேசத்துப் பூசாரிகளையும், மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிறவர்களையும், மதவாதிகளையும், நவீன பாபாக்களையும், சடங்காச்சாரம் செய்பவர்களையும் அவர்களைப் பின்னிருந்து இயக்கும் ஆவிகளையும் ஜெபத்திலே கட்டி, ஆட்டுவாசலாம் இரட்சிப்பின் வாசலைப் பழுதுபார்த்துக்கட்டி உயர்ந்து நிற்கச் செய்வோம்!

ஜெபம்:

ஆடுகளுக்காக :

- காணாமல் போன ஆடுகள்

- சிதறுண்டு அலையும் ஆடுகள்

- பீறிப்போடப்பட்ட ஆடுகள்

- கொலையுண்ணப்போகிற ஆடுகள்

- மேய்ப்பனில்லாத ஆடுகள்

- அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படும் ஆடுகள்

- குழியிலே விழுந்த ஆடுகள்

வாசல்களுக்காக :

கிரியைகளினாலே அல்ல, கிருபையினாலேயே இரட்சிப்பு என்கிறது பரிசுத்த வேதாகமம். ஆனால்  கிரியைகளினாலேயே முக்தி என்கிறது இந்திய மதம்.  இந்தக் கிரியைகளினாலே மாத்திரமே முக்தியையும் சமாதானத்தையும் அடையும்படி இந்திய ஜனம் ஈடுபட்டிருக்கும் கணக்கற்ற காரியங்கள்தான் எத்தனை எத்தனை!

திறந்து கிடக்கும் இப்படிப்பட்ட வாசல்கள் மூலம் உள் நுழைந்து ஆடுகளைக் கொள்ளை கொண்டுபோகும் பிசாசின் வஞ்சகங்களைக் கட்டி, இப்படிப்பட்ட வாசல்களை மூடிப்போட்டு, மெய்யான ஆட்டுவாசலைப் பழுதுபார்த்து மறுபடி திறக்கும்படியாக ஜெபிப்போம்.

Author: Pr. Romilton



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download