வெளிப்படுத்தின விசேஷம் 9- விளக்கவுரை

அதிகாரம்- 9

‘ஏழு எக்காளங்கள் ஊதப்படுதல்’
(ஐந்தாம் ஆறாம் எக்காளங்கள்) 

‘Sounding of seven Trumpets (Fith and Sixth  Trumpets)

‘ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்;;; அப்பொழுது…’ (வச 1)

ஐந்தாம் ஆறாம் தூதர்கள் எக்காளங்களை ஊதும்போது இன்னமும் மகாகொடியதும் பெரிதுமான அழிவுகள் முன்னுரைக்கப்பட்டன.

வச- 1- 12 : ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்

யோவான் ஒரு பெரிய நட்சத்திரம் வானத்திலிருந்து விழக் கண்டான். அது பாதாள்குழியை திறந்தது. பாதாளத்திலிருந்து ஒரு பெருஞ்சூளையின் கரும்புகை எழுந்து சூரியனையும் ஆகாயத்தையும்கூட இருளடையச் செய்தது. மேலும், அந்தப் புகையிலிருந்து தேள்களின் கொடியவிஷததன்மைக்கொப்பான வல்லமைகொண்ட வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வந்தன.அவைகள் எந்தத் தாவரத்தையும் சேதப்படுத்தாமல் மனிதர்களை மாத்திரம் கொன்றது.
இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி பார்க்கும்போது, கரும்புகையானது எழுத்தின்படியான ஏதோ ஒரு சூளையிலிருந்து வருவது அல்ல. ஆனால், சமீபத்தில் ஐஸ்லாந்தில் எரிமலைவெடித்து கரும்புகை எழும்பி ஐரோப்பா முழுவதும் ஆகாயம் இருளைடந்து, அதனரல் விமான சேவைகளும் பல நாட்களுக்கு நிறுத்தப்பட்டு, உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததைப்போன்றவை, அதைவிட பெரிய அளவில் அந்நாட்களில் நடக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெரிய தேள்களின் விஷத்தைக்கொண்ட வெட்டுக்கிளிகள் என்பது எழுத்தின்படியாக பூதாகாரமான விஷப்பூச்சிகளல்ல. அவை பூமியிலுள்ள மனிதர்களை கொல்லும் அதிநவீன பயங்கரமான தாக்கும் சக்திகொண்ட யுத்த ஆயுதங்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
யோவேல் 2: 1- 11. இவற்றினுடைய முன்னனுபவம் இந்த காலங்களிலேயே யுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சீரியா நாடுகளிலும் நமது தேசத்தின் காஷ்மீர் பதியிலும் நடக்கும் அழிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ராணுவ ஹெலிகாப்டர்களை பார்க்கும்போது அவை பறக்கும் வெட்டுக்கிளிகளைப்போலவும் தேள்களின் கொட்டும் வால்களைக்கொண்டது போலவும் உள்ளதை நாம் காணமுடிகிறது.        

பாதாளத்திலிருந்து எழும்பிவந்தன என்று சொல்லப்படுவதின் அர்த்தம் இந்த கொடிய கொல்லும் சக்திகள் தற்போது மறைந்துள்ளன. அதாவது, வல்லரசு நாடுகளும், வல்லரசாகப்போகும் நாடுகளும் மறைமுகமாக அணு ஆயுதங்களையும், ரசாயன ஆயதங்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. சொல்லப்பட்ட அந்நாட்களில் நடக்கும் உலகப்போரில் இவை மறைககப்பட்ட இடங்களிலிருந்து திடீரென வெளிப்படும் என்ற கருத்துடையதாகும்.

பேரழிவை உண்டாக்கும் இந்த நிகழ்ச்சிகள் நவீன விஞ்ஞான அணுஆயுதப்போராகவும், இயற்கை சீற்றங்களாகிய காட்டுத்தீ, பெரு வெள்ளங்கள், புயல், பூமியதிர்ச்சிகளாக இருந்தாலும்,இவை அனேக காலங்களாக பெருங்குழியாகிய பாதாளத்தில் அந்தகாரச் சங்கிலிகளால் கட்டபபட்டு அந்த குறிப்பிட்ட காலத்தில் சர்வ வல்ல தேவனால் விடுவிக்கப்பட்ட அசுத்த ஆவிகளினில் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகின்றன. 2 பேதுரு 2: 4. ஆச்சரியவிதமாக, இவைகள் அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களை மாத்திரமே துன்புறுத்துகிறவைகளாகவும், தேவனால் நெற்றியில் முத்திரையிடப்பட்டவர்களை தொட தடுக்கப்பட்டவைகளாகவும் காணப்படுகின்றன. முத்திரையிடப்பட்டவர்களை எகிப்தில் நடந்ததுபோல தேவன் பாதுகாக்கிறார். யாத் 12: 12, 13.
எனவே, இந்த அசுத்த ஆவிகள் சாத்தான் கூட்டத்தை சேர்ந்தவைகள் அல்ல என்று காண்கிறது. மத் 12: 26. இவ்விதமாக, தெரிந்துகொள்ளப்பட்ட முத்திரையிடப்பட்டவர்கள் உபத்திரவகாலத்தில் ஜீவித்தாலும் உபத்திரவததிற்கு தப்புகிறார்கள்.

வச 13- 19 – ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்.

ஐப்பிராத்தென்னும் பெரிய நதி கீழ்படியாத இஸ்ரவேல் தேசத்தின் ஒருபகுதியின்மேல் கொடிய நாசத்தை விளைவிக்கும்படியாக கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த பகுதி மகாபாபிலோனிலும் அசீரியாவிலும் இருந்தது.சங்காரத்தூதர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டவுடனே, இயற்கை சீற்றங்களால் அழிவு துவங்குகிறது.மகாநதியாகிய ஐப்பிராத்தில் கட்டபடபட்ட தூதர்களை அவிழ்த்துவிடுவதென்பது, அவர்கள் சங்கிலிகளால் கட்டபபட்டு சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள் என்பதல்ல. ஆனால்,குறிக்கப்பட்ட காலம் வரைக்கும் சங்காரக் கிரியைகளை துவங்காமல் தடைசெய்யப்பட்டிருந்தார்கள் என்பதே பொருள்.(வச 14) மூன்றிலொருபங்கு மக்கள் அக்கினி புகை கந்தகம் இவற்றால் கொல்லப்பட்டதென்பது, உலகளாவிய போரில் ராணுவ குண்டு வீச்சுகளினால் உண்டாகிறது என்பது மிகத்தெளிவாகிறது. (வச 18). இராணுவங்களின் தொகை இருபது கோடியென்றும், அவைகள் கொல்லும்படியாக கொடுக்கப்பட்ட நேரம் ஒரு மணி, ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருஷம் என்பது தேவனுடைய மிக நுணுக்கமான திட்டமிடப்பட்ட செயலேயன்றி எதேச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.(வச 15, 16).

வச: 20,21 - இந்த வாதைகள் மிகக் கொடூரமாக இருந்தாலும், அவை தேவனை எப்போதும் எதிர்க்கும் புறஜாதி உலகத்தாரிடம் மனந்திரும்புதலைக் கொண்டுவரவில்லை. அவர்கள் தங்கள் விக்கிரக வழிபாட்டிலும் பொல்லாத செய்கைகளிலும் தொடர்ந்தே இரந்தார்கள்.எனவே, இப்படிப்பட்ட கொடிய உபத்திரவத்திற்கு அவர்கள் பாத்திரராக காணப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளால் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி அசைக்கப்படும். அவனுடைய ஆட்சியின் முடிவு சமீபமாகிவிட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐப்பிராத்து நதி வற்றிப்போகும். உலகப்போர் ஆரம்பமாகும். எருசலேம் எதிரிகளால் சூழப்படும். லூக்கா 21: 20- 27.

இவைகளை வாசிக்கிற தேவ ஜனமாகிய நாம் நாம் தேசங்கள் மனந்திரும்பும்படியாக ஜெபிக்க, சுவிசேஷம் அறிவிக்க அழைக்கப்படுகிறோம் நாமும் நம் இரட்சிப்பை காத்துக்கொள்வோம். ஏசாயா 40: 8,  2 கொரி 6: 2, எபி 2: 4.

 Author: Rev. Dr. R. Samuel 


வெளிப்படுத்தின விசேஷம் 9- விளக்கவுரை

9 ம் அதிகாரம் ஐந்தாம் ஆறாம் எக்காளங்கள்

அதி, 9 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொமுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

விழுந்தது நட்சத்திரமல்ல, ஒரு தூதன். அவனுக்கு என்று அடுத்து வருவதால் அது ஒரு நட்சத்திரமல்ல, சாத்தானோடு பூமியில் தள்ளப்பட்ட தூதர்களில் ஒருவன்,

பாதாளக்குழி:- அதற்குள் பிசாசின் தூதர்களின் ஆவிகள் அடைக்கப்பட்டிருந்தன. திறவுகோல் கொடுக்கப்பட்ட தூதன் குழியைத் திறந்த பொழுது பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று. அந்தக்குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. (சோதோம் கொமோராவை தேவன் அழித்த போது அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. ஆதி. 19:28.) அந்தப்புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின் மேல் வந்தன. பிசாசுகள் அசுத்த ஆவிகள். அவைகளுக்கு உடலோ, உருவமோ கிடையாது. அதனால்தான் லேகியோனுக்குள்ளிருந்த ஆயிரக்கணக்கான பிசாசுகள் தங்களுக்கு ஒரு உடல் வேண்டுமென்பதால்தான் இயேசுவிடம் பன்றிகளுக்குள் போக அனுமதி கேட்டன. ஆகவே இந்த குழியிலிருந்து திறந்துவிடப்பட்ட பிசாசின் ஆவிகளுக்கு வெட்டுக்கிளி போன்ற உருவம் கொடுக்கப்பட்டது. அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக் கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. (பிசாசுகளுக்கு ஒரு வல்லமையும் கிடையாது, அவைகளுக்கு வல்லமை கொடுக்கப்பட வேண்டும்) ஆனாலும் அவைகளின் வல்லமைக்கு ஒரு எல்லையை தேவன் நியமித்தார். (யோபு 1:12) பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும், எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. (பிசாசுகள் தேவனை மீறி ஒன்றும் செய்ய முடியாது, அவருடைய பாதுகாப்பில் உள்ள அவரது பிள்ளைகளை பிசாசு தானாகத் தொட முடியாது), பன்றிகளுக்குள் போகவும் பிசாசுக்கு தேவ அனுமதி வேண்டும்.

வ 5 மேலும் அவர்களைக் கொலை செய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப் படாமல், ஐந்து மாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஏன் கொலை செய்ய அனுமதிக்கவில்லை? கிறிஸ்துவைப் புறக்கணித்தவர்கள் வேதனையினின்று விடுபட்டு எளிதில் மரணமடைந்து விடாமல் வாதிக்கப்பட வேண்டும். ஐந்து மாதக்கால அளவு ஏன்? சாதாரண வெட்டுக்கிளிகள் ஐந்து மாதம் வாழ்ந்து மரித்து விடும். (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ஆகவே இவைகளுக்கும் 5 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கலாம், அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும் போது உண்டாகும் வேதனையைப் போலிருக்கும்.

வ 6 அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்; சாக வேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.

சாவை விரும்பும் அளவிற்கு வாழ்க்கை கசப்பாகும்; மனவேதனை தாங்க முடியாததாயிருக்கும். ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவிலே அணுகுண்டு போடப்பட்ட பொழுது, அங்கு பிழைத்தவர்கள் பலவித கொடிய வியாதிகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாயினர். சூம்பின உறுப்புகளோடும்,

வ 7-10 வெட்டுக்கிளிகளின் உருவம்

1) யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகள் போலிருந்தது; குதிரைகள் யுத்தத்திற்கு ஏற்றவை, பயப்படாதவை, பலமுள்ளவை.

2) அவைகளுடைய தலையின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன. அவன் ஜெயிப்பவனாக அனுப்பப்பட்டான்.

3) அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலிருந்தன .

மனுஷமுகம்: அறிவும் ஞானமுமுடையது. வெட்டுக்கிளிகளுக்கு அறிவும் ஞானமுமுண்டு.

4) அவைகளுடைய கூந்தல் ஸ்திரிகளுடைய கூந்தல் போலிருந்தது, கவர்ச்சியால் மயக்கி இழுப்பவை 
5) அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள் போலிருந்தன சிங்கங்களின் பற்கள் குண்டு துளைக்க முடியாத முதலையின் தோலையும் கடித்து, கிழிக்கும் பெலனுடையவை,

6) இருப்புக் கவசங்களைப் போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; மனிதர்களால் அவைகளை அழிக்க முடியாது!

7) அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தது.

 வெட்டுக்கிளிகள் வேகமாகப்பறக்கக்கூடியவை, அத்தனை வெட்டுக்கிளிகள் இருந்ததால் ரதங்கள் ஓடும் சத்தம் போன்ற ஓலியெழுப்பின. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், வால்களில்கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன.

8) தேள்களின் கொடுக்குகளையுடைய வால்கள் கொடிய சவுக்குகள்போல் வேதனை உண்டாக்கும் ஆயுதம், ஐந்து மாதமளவும் சேதப்படுத்தும் அதிகாரம் பெற்றவை.

வ 11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு. அவனுக்குப் பல பெயர்கள் உண்டு:

அபெத்தோன், அப்பொல்லியோன், பிசாசு, சாத்தான், சோதனைக்காரன், சாத்தானுக்கு ஒரு ராஜ்யம் உண்டு என்று இயேசுவே சொன்னார் (லூக். 11:18) அது நித்தியமானதல்ல. அழிந்து போகுமொன்று.

வ 12 முதலாம் ஆபத்து ஐந்து மாதங்களில் கடந்துபோயிற்று, இன்னும் இரண்டு ஆபத்துகள் வரவேண்டும். வ 13, 14, 15: ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்.

அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து ஒரு சத்தந்தோன்றி எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி; ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொரு பங்கைக் கொல்லும்படிக்கு ஒரு மணி நேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள். எக்காளம் தொனிக்க தொனிக்க நாசமும், அழிவும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

6 ம் அதிகாரத்தில் இயற்கையின்மேல்தான் அழிவு வந்தது வெட்டுக்கிளிகளுக்கு மனிதரை வாதிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டதே அல்லாமல் கொல்லுவதற்கு அல்ல. ஜபிராத்து நதி தூதர்களுக்கோ மனிதரில் மூன்றிலொரு பங்கைக் கொல்ல அனுமதி கிடைத்தது.

ஒரு சத்தம் யாருடைய சத்தம் என்று தெரியவில்லை. ஆனால் தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள். இந்த தூதர்கள் கட்டப்பட்டிருந்ததினால், அவர்கள் சாத்தானின் தூதர்களே. தேவதாதர்கள் ஒருக்காலும் கட்டப்பட்டதேயில்லை

ஐபிராத்து நதி:- ஏதேனில் பாய்ந்த பெரிய நதி, இதன் கரையில்தான் சாத்தான் ஏவாளை வஞ்சித்து தேவனைவிட்டுப் பிரித்தான். இந்த நதிக்கரையில்தான் காயீன் ஆபேலைக் கொன்றான். இந்த நதிக்கரையில்தான் நிம்ரோத் பாபிலோனைக் கட்டினான். இந்த பாபிலோனுக்குத்தான் இஸ்ரவேலர் 70 வருடங்கள் சிறைக் கைதிகளாகக் கொண்டு போகப்பட்டனர். இந்த பாபிலோன் மீண்டும் கட்டப்பட்டு, செழித்து அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிபீடமாகும் என்று கருதப்படுகிறது. அதனால்தான் இது “அருவருப்புகளின் தாய்” என்றழைக்கப்படுகிறது. (ஆனால் பாபிலோன் மறுபடியும் கட்டப்படப் போவதில்லையென்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருக்கிறார்கள்)

ஆதி, 15:18ல் தேவன் ஆபிரகாமுக்கு இஸ்ரவேலின் எல்லையாக இந்த நதியை வைத்தார்.
இன்றும் இந்நதி முக்கியம் வாய்ந்ததாகவே உள்ளது. 1991ல் ஈராக்கிடமிருந்து குவைட்டை மீட்ட அமெரிக்கப்படைகள், யூப்ரடீஸ் (ஐபிராத்து) நதிக்கரையில்தான் ஈராக் படைகளை முறியடித்து வெற்றி கண்டன. இந்நதிக்கரையில்தான் வெளி. 9:15 நிறைவேறும் ஏனென்றால் கட்டப்பட்டிருந்த தூதர்கள் (பிசாசுகள்) அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. 6ம் அதிகாரத்திலுள்ள 4ம் முத்திரை நியாயத்தீர்ப்பினால் பூமியின் காற்பங்கு மனிதர்கள் பஞ்சத்தினாலும் பட்டயத்தினாலும், துஷ்டமிருகங்களினாலும் கொல்லப்பட்டார்கள். வெளி. 8:11ன்படி கசப்பான (கதிர் வீச்சினால் மாசுபட்ட) தண்ணீரைக் குடித்து அநேகர் மாண்டார்கள்.

இதையெல்லாம் அறிந்த சகோதரனே! உன் பொறுப்பு என்ன? அநேகரிடம் இயேசுவையும், வரப்போகும் அழிவையும் கூறி ஆத்தும ஆதாயப்பணியில் தீவிரமாய் ஈடுபடும்.

வ 16. 17, 18 குதிரைச் சேனை கட்டவிழ்க்கப்பட்ட நான்கு தூதர்களுக்கு ஆதரவாக 20 கோடி பிசாசுகள் குதிரைகள் மேலேறி புறப்பட்டன. இன்றைய உலக ஜனத்தொகை 760 கோடி என்று வைத்துக்கொள்வோம். 200 கோடி ஏற்கனவே அழிக்கப்பட்டனர். மீதியுள்ள 560 கோடியில் மூன்றிலொரு பங்கு கிட்டத்தட்ட 185 கோடி. இவர்களை அழிக்க சாத்தான் 20 கோடி குதிரைமேலேறினவர்களை அனுப்பினான். இவர்களை யோவான் தரிசனத்தில் கண்டான். அவர்கள் அக்கினி நிறமும்,நீலநிறமும், கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடையதலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன: அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும், புகையும், கந்தகமும் புறப்பட்டன. அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொரு பங்கு கொல்லப்பட்டார்கள், இந்த மாதிரிக் குதிரைகள் பூமியிலெங்கும் கிடையவே கிடையாது. இவைகளின் தோற்றம் மனிதரை அச்சசுறுத்துவதாக இருந்தது, வாய்களிலிருந்து புறப்பட்டவைகளால் மூன்றிலொரு பங்கு கொல்லப்பட்டார்கள். இவை அணுகுண்டு விஷப்புகை, ரசாயனக்குண்டாக இருக்கலாம். (இவை மூன்றும் ஈரானிடம் இருப்பதாக சந்தேகப்படுகிறார்கள்), 20 கோடி குதிரைகளும் ஒரே நேரத்தில் வந்ததாகக் கருதாமல், நான்கு கட்டங்களில், (ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம்), மக்களை அழித்த குதிரைகளின் எண்ணிக்கையாக இருக்கலாம் என்று சுவி, ஜாண் வெஸ்லி தன் விளக்க உரையில் கூறியிருக்கிறார். அப்படியே கொலை செய்யப்பட்டவர்களும் நான்கு கட்டங்களில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்கிறார். துன்பக்காலத்தில் மனந்திரும்பாதவர்களே, ஆயிர வருட ஆட்சியில் காணப்படாதபடி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு.

வ 19 அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும், வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும் தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது. அவைகளாலே சேதப்படுத்துகிறது. இது அந்தக் குதிரைகள் முற்புறத்திலும், பின்புறத்திலும் கொல்ல வல்லமையுடையவைகளாக இருந்தன என்பது விளங்குகிறது.

வ 20, 21 இந்த மகா வாதையைக்கண்ட மற்றவர்களோ மனந்திரும்பவில்லை!

வழக்கம்போல வாழ்ந்து கொண்டிருந்தார்களேயொழிய, மனந்திரும்பவில்லை, இன்றும் அப்படி நிர்விசாரமாயிருக்கிற மக்களைப் பார்க்கிறோம். தினமும் விபத்துகளினால் மரணமடைந்தவர்களைக்குறித்து செய்தித்தாளில் வாசிக்கிறோம். இந்தச் செய்திகள் நாமும் எதிர்பாரா நேரத்தில் மரணமடையக் கூடும் என்று உணர்த்துகின்றன. யாராவது அதை எண்ணிப் பார்த்து மனந்திரும்பி பொருளாசை, இச்சைகள் மாம்சக் கிரியைகள் போன்றவற்றை விட்டு விலகி பரிசுத்தமடைய முயற்சிக்கிறோமா? இல்லையே! இன்னும் எத்தனைக் காலத்திற்கு இருபையின் ஆவியை நிந்தித்துக் கொண்டேயிருப்பீர்கள்?

Author: Rev. S.C. Edison



Topics: Tamil Reference Bible Revelation Tamil Reference Bible Revelation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download