சங்கீதம் 78- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - கர்த்தருடைய பலத்தையும் அவர் செய்த அதிசய கிரியைகளையும் பின்வரும் சந்ததிக்கு அறிவிக்கவேண்டும்.
 - முற்பிதாக்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் கலகம் செய்து வீழ்ச்சியடைந்ததையும் பின்வரும் சந்ததிக்கு தெரிவிக்கவேண்டும்.
 - இவற்றின் மூலம் பின்வரும் சந்ததி எச்சரிப்படைந்து தேவனை உறுதியாய்ப்பற்றி உண்மையாய் பின்பற்றி நித்திய ஆசீர் பெறவேண்டும்.

1. ஆசாபின் போதனை (வச.1-7)

ஆசாப் பின்வரும் சந்ததிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த சங்கீதத்தை எழுதியிருப்பதாக தெரிகிறது. விசுவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களில் தங்கள் பிள்ளைகள் தேவபக்தியில் வளர பல உவமைகளாலும், தேவனுடைய அற்புத செயல்களையும் விவரித்து சொல்லி உபதேசிக்கவேண்டும்.
"இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் ... உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, ...'  என்று உபா.6:6,7 வசனத்திலும்,
"பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் ... கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை  வளர்ப்பீர்களாக' என்று எபேசியர் 6:4 வசனங்களிலும், பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் தேவ மக்களுக்குக் கட்டளையிடுகிறதை காண்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் உதித்து, பல உவமைகள் மூலம் தேவனுடைய ராஜ்ஜியத்தைப்பற்றிய சத்தியங்களை வெளிப்படுத்தி பின்வரும சந்ததிகள் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி போதிப்பார் என்பதையும்கூட ஆசாப் தீர்க்கதரிசனமாக (வச.2) இல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
"இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; ...'  என்று மத்தேயு 13:34,35 இல் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியதைப்பற்றி எழுதியிருக்கிறது. பின்வரும் சந்ததி, தேவனுடைய செயல்களை மறவாமல் நம்பிக்கை வைத்து அவர் கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே இந்த உபதேசத்தின் முக்கிய நோக்கம் (வச.7).

2. முற்பிதாக்கள் வனாந்திரத்தில் தேவன் செய்த அற்புத செயல்களை மறந்து தேவ கோபத்திற்கு ஆளானார்கள் 
(வச.8-33)

தேவனாகிய கர்த்தர் தமது தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலரை அடிமைத்தனத்தின் எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வனாந்திர வழியாய் வழிநடத்திக்கொண்டு வந்தபோது செய்த அற்புத கிரியைகளாகிய செங்கடலைப் பிளந்தது (வச.13), தண்ணீரற்ற பாலைவனத்தில் கன்மலையைப் பிளந்து திரளான தண்ணீர் புரண்டு வரச்செய்தது (வச.16,20)
வனாந்திரத்தில் வானத்துப் பலகணிகளைத் திறந்து தூதர்களின் அப்பத்தாலும், மன்னாவினாலும் போஷித்தது (23-25) வனாந்திரத்தில் அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப இறைச்சியின் உணவைக் கொடுத்தது (26-29) போன்ற மனிதர்கள் 
கண்டிராத அதிசய அற்புதங்களை மீண்டும் மீண்டும் மறந்து தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணி, முறுமுறுத்து, கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனதில்லாமல் பாவம் செய்தார்கள் (10,11,21,22,31,32,33). இந்த சரித்திரத்தை யாத்திராகமம் 14-17 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.
தூதர்களின் அப்பம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது (25) தூதர்கள் அப்பம் புசிப்பார்களா? புசித்தார்கள் என்பதற்கு வேதத்தில் அத்தாட்சி உண்டு ஆதியாகமம் 18:1-8 இந்த வசனங்களில் நாம் வாசித்து இதை அறிந்துகொள்ளலாம்.
பின்வரும் சந்ததியாகிய நாம் இவற்றையெல்லாம் வாசித்து, எச்சரிப்படைந்து கர்த்தருçடைய வழிகளிலிருந்து வழுவிப்போகக்கூடாது என்று வேதவசனங்கள் மூலம் நம்மை எச்சரிக்கிறார்.

"ஆகையால், பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: ... வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், ... போல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்' (எபிரெயர் 3:7,8).

3. மன்னிக்கும் தேவன் (வச.34-40)

ஆனாலும், கிருபையுள்ள தேவன் இந்த வணங்காக் கழுத்துள்ள ஜனத்தை முற்றிலும் அழிக்காமல், அவர்களை விசாரித்து மன்னித்தார். ஏன் மன்னித்தார்? அவருடைய தாசனாகிய மோசே மன்றாடினான். தேவன் கிருபையாய் மன்னித்தார் என்று எண்ணாகமம் 14:11-20 வசனங்களில் வாசிக்கிறோம்.நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நமக்காக தேவனிடம் மத்தியஸ்தராக நம் பாவங்களை மன்னிக்க பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

"... ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்' (1 யோவான் 2:1).

4. எகிப்தில் தேவன் செய்த அற்புதங்கள் (வச.41-51)

வேத புத்தகத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ள விசேஷம் இன்றும் பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் தியானிக்கப்பட்டு வருகிறது. காரணம், தேவன் தமது ஜனங்களை மீட்க எகிப்தியர் மத்தியில் செய்த வல்ல செயல்கள், இன்றைக்கும் தம்மை நோக்கிக் கூப்பிடும் தம் பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்க ஆயத்தமாயிருக்கிறார் என்பதையும், "கர்த்தரே பெரியவர்' அவருக்கு மேலான வல்லமையோ சக்தியோ இநத் உலகத்தில் இல்லை என்பதை நிரூபிக்கவும் நினைவுபடுத்தவுமே என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்க தேவன் பத்து வாதைகளினால் பார்வோனையும், எகிப்தியரையும் தண்டித்தது (வச.44-51) வரை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு ஆசாப் நினைவுபடுத்துகிறான். ஆனாலும், இஸ்ரவேலர் செங்கடல் கரையை அடைந்தபோது, பார்வோன் சேனை பின்தொடருவதைப் பார்த்து, வல்லமையான தேவனுடைய கிரியைகளை மறந்து, அவரை மட்டுப்படுத்தினார்கள் (41) என்று ஆசாப் எழுதுகிறான்.
"... வனாந்தரத்தில் சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்?...'  என்று யாத்.14:11 வசனத்தில் மோசேயை நோக்கி இஸ்ரவேலர் கேட்கிறார்கள்.

5. வாக்குத்தத்த கானான் தேசம் (வச.52-64)

இஸ்ரவேலின் தேவன், தமது ஜனத்தை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்து, பயங்கரமான வனாந்தர பாதை வழியிலே பத்திரமாக நடத்திக்கொண்டுவந்து, பாலும் தேனும் ஒடுகிற செழிப்பான கானான் தேசத்திற்கு 
கொண்டு வந்து சேர்த்தார் (52-54). முற்பிதாக்களுக்கு வாக்குப்பண்ணின இந்த செழிப்பான தேசத்தை இஸ்ரவேலர் முற்றிலும் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக, இந்த தேசத்தில் குடியிருந்த பொல்லாத ஜாதிகளாகிய ஏத்தியர், எபூசியர், எமோரியர், கிர்காசியர், ஏவியர், பெரிசியர், கானானியர் என்ற பலத்த ஜாதிகளை சங்காரம் பண்ணவும் துரத்திவிடவும் பெலன் கொடுத்து தமது ஜனத்தோடே இருந்து யுத்தம் செய்தார் (உபா.7:1) (வச.55). இந்தப் பொல்லாத ஜாதிகளின் விக்கிரகங்களையும் தேவர்களையும் சேவிக்காமல், தேவனாகிய தம்மை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கட்டளை கொடுத்திருந்தார் (உபா.7:2-6). ஆனாலும் இஸ்ரவேல் மக்களோ தேவனுக்கு துரோகம் செய்து அந்நிய தெய்வங்களை வழிபட்டு வழிவிலகிப் போனார்கள். ஆகவே, கர்த்தர் தமது ஜனத்தின் மேல் கோபமூண்டு அவர்களை முற்றிலும் அவர்களுடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுத்து பாபிலோனிய அரசனாகிய நேபுகாத்நேச்சாரிடம் சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுத்தார் (56-64). இந்த நிகழ்ச்சிகளை 2 இராஜாக்கள் 25, 2 நாளாகமம் 36 என்ற வசனங்களில் வாசிக்கலாம்.

6. தெரிந்துகொள்ளப்பட்ட யூதா கோத்திரம் (வச.65-72)

ஆனாலும், தேவன் தமது வைராக்கியத்தினாலும், முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தினாலும் தமது ஜனத்தின் சத்துருக்களை அடித்து நித்திய நிந்தையை வரப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்கள் அனைவற்றையுமே புறக்கணியாமல் தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களை நினைவுகூர்ந்து இவர்களுடைய கோத்திரங்களில் தமக்கு உண்மையாயிருந்த யூதா கோத்திரத்தையும் சீயோன் நகரத்தையும் தமக்கென தெரிந்துகொண்டார் (68). காரணம், 
யூதா கோத்திரத்தானாகிய தாவீது தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்து, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக நடந்துகொண்டதினிமித்தம் (1 சாமுவேல் 13:14). இந்த யூதா கோத்திரத்தைத் தெரிந்துகொண்டார் ஆதி.49:1,9,10. மேலும், தேவனுக்குப் பிரியமான இந்த தாவீது ராஜா சீயோன் கோட்டையை எபூசியரிடமிருந்து கைப்பற்றி தனது தேசத்தின் தலைநகரமாக்கி "தாவீதின் நகரம்' என்றும் பெயர் சூட்டி தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அங்கே வைத்தான் 2 சாமுவேல் 5:7, 6:12. இந்த யூதா கோத்திரத்தில் தானே "தாவீதின் குமாரன்' என்ற பெயரில் "தேவகுமாரனாகிய' உலக இரட்சகர், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் பிறந்தார் மத்தேயு 1:1,21, மாற்கு 1:1.
இந்த தாவீது தேவனுக்கு உண்மையுள்ளவனாக மாத்திரமல்ல, தனது எல்லாத் திறமைகளையும் தேவனுடைய ஜனத்தை நடத்தப் பயன்படுத்தினான்.
விசுவாசிகளாகிய நாமும்கூட தேவனுக்கு உண்மையாயிருந்தால் நம்மை ஒரு போதும் புறக்கணியாமல் நம்மை உயர்த்துவார். நம்முடைய முழு திறமைகளையும் கர்த்தருக்காகப் பயன்படுத்தவேண்டும் என்று வேதவசனத்தில் இயேசு கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார்.
"... உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் 
அன்புகூருவாயாக;'
(மத்தேயு 22:37).

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download