கொரோனா CALLER ட்யூன், பரலோக CAUTION ட்யூன்(அடைபட்ட அக்கினி)

இதோ! அன்றாடம் நாம் கேட்கும் காலர் ட்யூன் இது தான்!

• வணக்கம்! கோவிட்19 அன்லாக் செயல்முறை இப்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டது.

• மிகவும் அவசியமெனில் மட்டுமே உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்.

• ஃபேஸ் கவர் மற்றும் மாஸ்க் அணியும் போது வாய் மற்றும் மூக்கு நன்றாக மூடி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

• பொதுஇடங்களில் குறைந்தது இரண்டு கெஜம் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.

• கை மற்றும் சுவாசப் பகுதியை தூய்மையாக வைத்திருங்கள்.

• நினைவிருக்கட்டும்! சிறிது கவனக்குறைவும் அதிக பாதிப்பைத் தரக்கூடும் 

• இருமல், காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மாநில ஹெல்ப் லைன் எண் 104 அல்லது தேசிய உதவி எண் 1075 ஐ தொடர்பு கொள்ளவும்.

இந்திய அரசின் ஒரு பொதுநலன் கருதிய வெளியீடு! இது பொது நலன் கருதி இந்திய அரசின் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு... இதைத் திரும்பத் திரும்ப நமது காதுகளில் ஒலிக்கச் செய்வது, நம்மைத் திரும்ப திரும்ப எச்சரித்து நம்மை நாமே காத்துக்கொள்ளச் செய்வதே!

ஆனால் இதை நாம் அடிக்கடி கேட்பதால், இதற்கு நாம் காது கொடுக்காதது மட்டுமல்ல..இது நமக்கு ஒரு எரிச்சலூட்டும் சத்தமாகவும், நமது பொறுமையை சோதிக்கும் வீண் நேரமுமாகவே நம்மை சலிப்படையச் செய்கிறது என்பது தான் பரவலான உண்மை!

ஒரு தேசத்துக்கே தனது பிரஜைகள் மேல் இவ்வளவு கவனமும் அக்கறையும் எச்சரிக்கையும் இருக்குமானால், பரலோக அரசு, இதே செய்தியை நமது காதுகளில் எச்சரிப்பின் சத்தமாய்த் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை கலந்த எச்சரிப்புக் கட்டுரை இது!

இதே காலர் ட்யூன் பரலோகத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனைக் கண்ணோட்டம்..

வாருங்கள்! வரி வரியாய்... ஒரு வரி விடாமல் கேட்போம்! 

• வணக்கம்! கோவிட்19 அன்லாக் செயல்முறை இப்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டது.

இதைப் பரலோகத்திலிருந்து தேவதூதன் ஒருவன் அறிவித்தால் எப்படி இருக்கும்?

• Praise Be to God

"கோவிட்-19 போன்ற பல பயங்கர பாவ வைரஸ்களும் கிருமிகளும் கண்ணுக்குப் புலப்படாத ஆவிகளும் வானத்துக்குக் கீழே திறந்துவிடப்பட்ட நிலையிலே, பாதுகாப்பு வளையங்கள் அகற்றப்பட்டு, அடைப்புகள் திறந்துவிடப்பட்டு அவரவர் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் நிலையில் விடப்பட்ட அன்லாக்கிங் செயல்முறை நாடு முழுவதும், உலகம் முழுவதும் தொடங்கிவிட்டது...”

காற்றிலே மாசு.. காற்றிலே கறுப்பு..

மற்றும் வெளியிலும் வீதியிலும் சந்துகள் தோறும் பதிவிருக்கும் பாவம் (நீதி 7:12)

இப்பொழுது சுவாசக் காற்றில் கலந்து விட்டது... தேசம் திறந்து விடப்பட்டுவிட்டது...

தடை ஏதுமில்லை..

“எங்கும் கிருமி! எதிலும் கிருமி! எங்கும் பாவம்! எங்கும் அசுத்தம்! எங்கும் மரணமே !”

"எச்சரிக்கையாய் இல்லாவிடில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யார் மூலமாக வேண்டுமானாலும் இந்த பாவத் தொற்றுநோய்க்கு ஆளாகலாம்! பாதிக்கப்படலாம்! எச்சரிக்கை! நாடு முழுவதும் திறந்துவிடப்பட்டுவிட்டது!" 

• மிகவும் அவசியமெனில் மட்டுமே உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்.. 

வீடு பாதுகாப்பான இடம். நாலாபக்கமும் சுவரும் கதவும் மட்டுமல்ல.. மேலே போடப்பட்ட தளமும், காற்று மழை வெயில் பனி மற்றும் குளிரிலிருந்து நம்மைப் பாதுகாக்கவே!

பரலோகம் சொல்லுகிறது...

"உங்கள் வீட்டைப் போலவே தேவனே உங்கள் பாதுகாப்பு! உன்னதமானவரின் உயர் மறைவில் "இருக்கிறவன்" மட்டுமே சர்வவல்லவரின் நிழலில் "தங்குவான்." கர்த்தருக்குள்ளும், அவரது வசனத்துக்குள்ளும், அவரது இரத்தத்தின் மறைவிலும், அவரது சிறகுகளின் நிழலிலும் இருக்கும் வரையில் மாத்திரமே உங்களுக்குப் பாதுகாப்பு!

வீட்டிலிருந்து வெளியில் வருவது என்பது உலகத்திற்குள் கால் வைப்பதற்கு சமம்..

"மிகவும் அவசியமெனில் மட்டுமே உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்" என்ற உங்கள் தேசிய அரசின் எச்சரிப்பை இந்தப் "பரலோக அரசு" அங்கீகரித்து அதை அப்படியே ஆவிக்குரியபடி எதிரொலிக்கிறது...”

உங்கள் காரியமாக, அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் முகக்கவசமும் மாஸ்க்கும் அணிந்து கொண்டு மட்டுமே செல்ல அறிவுறுத்தப்படுகிறீர்கள்..

எச்சரிக்கப் படுகிறீர்கள் ! உலகத்தின் காரியங்களுக்குள் உங்கள் அவசியமான வேலையாக மட்டுமே, அதுவும் கட்டாயத்தின் பேரில் செல்ல அனுமதி உண்டு..

"தீனாள் தேசத்துப் பெண்களைத்தான் பார்க்கப் புறப்பட்டுப் போனாள்... ஆனால் பட்டதோ அத்தேசத்தின் பிரபுவின் கண்களில்..." என்பது நீங்கள் அறிந்ததே... (ஆதி 34:1,2)

இன்று, திறந்துவிடப்பட்ட நாட்டில், உலகில், வீட்டிலிருந்து வெளியே கால் வைக்க வேண்டிய அவசியமேயின்றி உலகமே உங்கள் கைக்குள் வந்துவிட்ட நிலையில், அது பிரவுசிங் செய்து பார்க்கப் புறப்பட்டுப்போகும் கூகுளோ, யூ-டியூபோ, சோஷியல் மீடியாவோ, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆன்லைனில் உலகத்துக்குள் போக அனுமதிக்கப்படுகிறீர்கள்!

எச்சரிக்கை! பரலோகப் பாதுகாப்பு வளையத்துக்குள் நீங்கள் இருக்கும் வரை மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு! 

"அடைப்பைப் பிடுங்குகிறவனை பாம்பு கொத்துவது உறுதி!" (பிரசங்கி 10:8) 

• Face கவர் மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்...

நாடு திறந்து விடப்பட்ட நிலை ஒரு முதல் எச்சரிக்கை! காற்றில் கலந்து மிதந்து, தொட்ட இடம், பட்ட இடம், பார்த்த இடம், படுத்த இடம் பேச்சு மூச்செல்லாம் கிருமி! கிருமி! பாவக்கிருமி!

கூடவே ஒரு எச்சரிக்கை - "மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் முழுவதும் மூடிக்கொண்டு உலகத்துக்குள் கால் வையுங்கள்!”

அது ஃபேஸ்புக் ஆக இருந்தால் என்ன? சோஷியல் மீடியாவின் எந்த ஆழமாய் இருந்தாலென்ன?

ஜெபம் என்னும் கவசம் அணிந்து கொள்ளுங்கள்!”

"இயேசுவின் இரத்தம் என்ற பாதுகாப்பு எல்லைக்குள் எப்பொழுதும் இருங்கள்!”

"வசனம் என்ற வேலிக்குள் உங்களை அடைத்துக் கொள்ளுங்கள்!”

"அபிஷேகம் என்ற PPE Kit அணிந்து கொள்ளுங்கள்!

"ஆவிக்குரிய பல விபத்துக்களில் சிக்கி தங்கள் ஆவியை விட்டவர்களின் இரத்தத்தின் சிவப்பு விளக்கு எப்பொழுதும் உங்கள் தலைக்குள் எரிந்து கொண்டேயிருக்கட்டும்! 

• மாஸ்க் அணியும்போது வாய் மற்றும் மூக்கு நன்றாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

பரலோகம் சொல்லுகிறது...

கோவிடை விடக் கொடூர பாவ கோவிட் கிருமிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உங்கள் வாய் மற்றும் மூக்கு மட்டுமல்ல..

"எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிய சிறைப்பிடிக்கத்தக்கதாய், உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டு, உங்கள் இருதயங்களையும் சிந்தனை மண்டலத்தையும் மூடிக்கொண்டு, மூளையான தலைமைச் செயலகத்தையும் நன்றாகப் பாதுகாத்து, எல்லாக் காவலோடும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்..(2 கொரி 10:5/ பிலி 4:8/ நீதிமொழிகள் 4:23)

"உங்கள் கண்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு, கண்கள் நேராய் மாத்திரம் நோக்கத்தக்கதாயும், உங்கள் கண்ணிமைகள் செவ்வையாய்ப் பார்க்கத்தக்கதாயும் மிகக் கவனமாய் உறுதி செய்து கொள்ளுங்கள் !

"வாயின் தாறுமாறுகளை அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை தூரப்படுத்தி, வாய்க்குக் காவல் வைத்து, "நன்றாய்" மூடிக்கொள்ளுங்கள்!”

கால்நடையை சீர்தூக்கிப் பார்த்து வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாமல் சீராய் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்! (நீதி 4:23-27)

" பரிசுத்த வாசஸ்தலமும், பரிசுத்த பாத்திரங்களும், பரிசுத்த வஸ்துக்கள் மற்றும் பரிசுத்தமானவைகள் யாவும் "நன்றாய்" மூடப்பட்டிருக்க வேண்டும்" என்று வேதம் சொல்லுகிறதை (எண் 4:4-20) இந்தப் "பரலோக அரசு" உறுதி செய்து, ஜீவனுள்ள பரிசுத்த வாசஸ்தலமாகிய உங்கள் சரீரங்களின் அவயவங்கள் யாவும் நன்றாய் மூடப்பட்டுப் பாவக் கொரோனாவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளும்படி எச்சரிக்கிறது!

• பொது இடங்களில் குறைந்தது இரண்டு கெஜம் இடைவெளியைக் கடைபிடியுங்கள்.. பரலோகத்திலிருந்து வரும் அடுத்த எச்சரிக்கை! "போதிய இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.."

"எப்போதும் நெருக்கம், "உரசல்", "ஒட்டிப் பழகுதல்", "தொட்டுப் பேசுதல்", "அன்பின் அணைப்புகள்..."

"நானில்லாமல் அவளில்லை.. அவனில்லாமல் நானில்லை.." போன்ற இவைகளில் எதுவானாலும் அவைகளில் பாவக்கிருமிகளும் ஆத்தும infection இல்லாமல் போவதே இல்லை என்பதே தீர்மானமான முடிவு!

மட்டுமல்ல.. உறவுகளிலும், அது இரத்த உறவானாலும், எந்த பந்தபாசமானாலும், சிநேகித உறவுகளானாலும் எல்லாவற்றிலுமே ஒரு இடைவெளியும் மரியாதைக்கும் கனத்துக்கும் உரிய தூரமும் கடைபிடிக்க வேண்டியது பாவ ஆத்துமக்கொல்லிக் கிருமிகளிலிருந்து உங்களை நிச்சயம் பாதுகாக்கும்... 

"நிலவைப் பார்த்து வானமும் நிழலைப் பார்த்து பூமியுமே "என்னைத் தொடாதே" என்று சொல்லுமானால், இடைவெளியும், தொடாதிருத்தலும், தள்ளி நிற்தலும் கொரோனாலிருந்து மட்டுமல்ல, எத்தனை பெரிய பொல்லாங்குகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்காதோ?

நெருக்கமும் இறுக்கமும் கழுத்தைச் சுருக்கும் சுருக்குக் கயிறுகளே!

• கை மற்றும் சுவாசப் பகுதியைத் தூய்மையாக வைத்திருங்கள்!

உங்கள் தேசத்து சுகாதாரத்துறை உங்களைத் திரும்ப திரும்ப எச்சரிப்பது "கைகளை அடிக்கடி கழுவுங்கள்... கிருமிநாசினி கொண்டு அடிக்கடி உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்" என்பதே..

பரலோகம் செல்லுகிறது... 

"உங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தைத் தூய்மையாக வைத்திருக்க உங்களுக்கு உதவுவது எல்லா Sanitizer களுக்கும் மேலான இயேசு கிறிஸ்துவின் இரத்தமும், ஜீவ வசனமும், பரிசுத்த ஆவியும் அல்லவோ?" 

அடிக்கடி இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே உங்களை சுத்திகரித்துக் கொள்ளுங்கள்.. வசனத்தினால் உங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்..
உங்களைத் திரும்ப திரும்பத் தூய்மையாக வைத்துக் கொள்ளவே உங்களோடு எப்போதும் இருக்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறார்..

தேவனோடு உங்களுக்கு இருக்கும் இடைவிடா உறவும், ஐக்கியமும் ஜெபமுமே உங்கள் சுவாசம்! ஆகவே அந்த சுவாசப் பகுதியை தூய்மையாக வைத்திருங்கள்..

உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் பரிசுத்தமாய் பாதுகாக்கப்படுவதாக!

• நினைவிருக்கட்டும்! சிறிய கவனக்குறைவும் அதிக பாதிப்பைத் தரக்கூடும்! 

பரலோகம் சொல்கிறது...

"எப்போதும் ஒன்றே ஒன்று நினைவிருக்கட்டும்!
"கவனம்" "எச்சரிக்கை" என்ற வார்த்தைகள் "

"உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்..." என்பதே உங்கள் இருதயப் பலகைகளில் எழுதி வைக்கப்பட்ட மேல் வரிச்சட்டமாய் இருக்கட்டும்! உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்..." என்பதே உங்கள் இருதயப் பலகைகளில் எழுதி வைக்கப்பட்ட மேல் வரிச்சட்டமாய் இருக்கட்டும்!

சிறிது கவனக்குறைவு:

* தேவனின் இருதயத்திற்கு ஏற்ற தாவீதின் சிறிய கவனக்குறைவு!

* தேவனுக்குப் பிரியமான ஞானியின் சிறிய கவனக்குறைவு!

* தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்ட நசரேய சிம்சோனின் சிறிய கவனக்குறைவு!

எத்தனை வேத கதாபாத்திரங்களின் "சிறிய கவனக் குறைவுகள்" எத்தனை பெரிய விழுதலுக்கும் வீழ்ச்சிக்கும், அழிவுக்கும் அவர்களை இட்டுச் சென்றது என்பதை வேதம், இந்தக் கடைசி நாட்களில் வாழும் உங்களுக்கு எச்சரிப்பு உண்டாக்க எழுதிவைக்கவில்லையோ?

"கலந்து பழகுதல்" என்கிற கவனக் குறைவுகள்...

"கண்களை அலைபாய விடுதல்" என்கிற கவனக் குறைவுகள்...

"நாவை அடக்காமல் போதல்" என்கிற கவனக்குறைவுகள்..

"பாதுகாப்பு வேலியை விட்டு வெளியே வருதல்" என்கிற கவனக்குறைவுகள்..

"ஆவிக்குரிய பாதுகாப்புக் கவசங்கள் அணியாதல்" என்கிற கவனக்குறைவுகள்...

ஆகிய இந்த கவனக் குறைவுகள் "அதிக பாதிப்பை", நித்திய நித்தியமான பாதிப்பை நிச்சயமாகவே தரும்! 

கொரோனா நோய்க் கிருமியால் சரீரம் மட்டுமே மரிக்கும்..ஆனால் பாவத் தொற்று நோய்க் கோவிடால் ஆத்துமா யுகயுகமாய் அழியும்!

• இருமல், காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால்... 

இவைகள் கொரோனா தொற்றுக்கு அறிகுறிகள் அல்லவோ? பரலோகம் செல்லுகிறது...

"சரீர நோய்க்கு இவைகள் அறிகுறிகள் போலவே, உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் சுகவீனங்கள் பெலவீனங்கள் மற்றும் ஆத்தும உயிர்க்கொல்லி நோய்களின் அறிகுறிகள் உங்களில் காணப்படுகிறதோ என்று அவ்வப்போது கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!”

* ஜெபம் குறைவது அறிகுறி இல்லையோ?

* வேத வாசிப்பிலும் ஆவிக்குரிய காரியங்களிலும் நாட்டம் குறைவது அறிகுறி இல்லையோ?

* தேவ பிள்ளைகளோடு கூடும் ஐக்கியம் குறைந்து வேறு எங்கோ எதையோ மனம் நாடுவது அறிகுறிகளில் ஒன்று இல்லையோ?

* ஆத்தும ஆதாயத்தில் ஆர்வம் குறைவது அடுத்த அறிகுறி இல்லையோ?

* தரிசனக் கண்கள் மங்கலடைந்து, ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகள் மந்தமாகிப் போவது ஒரு முக்கிய அறிகுறி இல்லையோ?

தேவனோடு உள்ள இடைவிடா உறவே உங்கள் சுவாசமானால், அந்த "சுவாசிப்பில்" சிரமம் ஏற்படுமானால், அது எதில் கொண்டு போய் முடியும் அறிகுறியோ? 

இவ்வித அறிகுறிகள் (இருமல்,காய்ச்சல்,சுவாசிப்பதில் சிரமம்) காணப்பட்டால் உடனே மாநில ஹெல்ப்லைன் எண் 104 அல்லது தேசிய உதவி எண் 1075 ஐத் தொடர்பு கொள்ளவும்... 

பரலோகம் தொடர்கின்றது.."உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் இப்படிப்பட்ட ஆத்தும உயிர்கொல்லி நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் "உடனே"- "உடனே" தொடர்பு கொள்ளுங்கள்!

காலம் தாழ்த்த வேண்டாம்..”

உங்கள் மாநில ஹெல்ப்லைன் எண் - உங்களுடைய பாஸ்டரது மொபைல் அல்லது உங்கள் சபையின் மூப்பர்களின் நம்பரே உங்கள் மாநில ஹெல்ப்லைன் நம்பர்.. "உடனே" அதைத் தொடர்பு கொள்ளுங்கள்...

"உங்களில் ஒருவன் (பாவ)வியாதிப்பட்டால் அவன் "உடனே" சபையின் மூப்பர்களைத் தொடர்பு கொள்வானாக! அவர்கள் அவனுக்காக ஜெபம் பண்ணுவார்களாக! விசுவாசமுள்ள ஜெபம் பாவ நோயாளியை இரட்சிக்கும்! கர்த்தர் அவனை அவனது பாவப் படுக்கையிலிருந்து எழுப்புவார்! அவனது பாவங்கள் மன்னிக்கப்படும்! (யாக் 5:14,15)

தேசிய உதவி எண் :
இது பரலோக உதவி எண் 24 X 7

“என்னை நோக்கிக் கூப்பிடு..." என்ற எரேமியா 33:3, "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு..." என்ற சங்கீதம் 50:15, இன்னும் வேதத்தில் ஆங்காங்கே காணும் பரலோக எமர்ஜென்சி ஹெல்ப்லைன் நம்பர்களையோ "உடனே" தொடர்பு கொள்ளுங்கள்... 

"ஆபத்தில் நானே உன்னோடிருந்து உன்னைத் தப்புவித்து உன்னைக் கனப்படுத்துவேன்" என்று மறுமுனையிலிருந்து உங்களுக்குப் பதில் வரும்! 

'இந்திய அரசின் பொது நலன் கருதி ஒரு வெளியீடு...

“இந்த எச்சரிப்பின் வெளியீடு.. உங்கள் நித்திய நலன் கருதி.. உலக விசுவாச அன்பர்களின் ஆவிக்குரிய நலன் கருதி... ஊழியர்களின் ஊழிய நலன் கருதி... சபைகளின் நிகழ்கால, எதிர்கால நலன் கருதி வெளியிடப்படும் ஒரு "பரலோக அரசின்" வெளியீட்டு ஆணை!”

“என் மகனே! இவைகளினால் நீ புத்தியடைவாயாக!" (பிர 12:12)

Pr. Romilton



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download