தேவனிடம் கிருபை பெற்ற நபரா?

நம்மில் பெரும்பாலோர் தேவ கிருபையைப் பெற விரும்புகிறோம்.  நாசரேத் நகரத்தில், பிரதான தூதனான காபிரியேல் மரியாளைச் சந்தித்து; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும், என்ற செய்தியை அவளுக்குத் தெரிவித்தார் (லூக்கா 1:26-35). அநுகூலமான வாழ்க்கை என்பது ரோஜாப் படுக்கை அல்ல, வாழ்க்கை என்பது முட்கள் நிறைந்த பாதை.‌

 1) அபாயகாரமான சூழல்:
மரியாள் யோசேப்புக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டாள்.  யூத பழக்கவழக்கங்களின்படி, அது திருமணத்தைப் போலவே பிணைக்கப்பட்டது. "அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்" (மத்தேயு 1:19). அப்படி நடந்திருந்தால், அவளும் கல்லெறிந்து கொல்லப்பட்டிருக்கலாம்.

 2) அலைச்சல்:
அகஸ்து இராயன் அனைத்து குடிமக்களும் தங்கள் சொந்த இடத்திற்கு சென்று குடியுரிமையை பதிவு செய்யுமாறு கட்டளையிட்டான். யோசேப்பும் மரியாளும் எருசலேமிலிருந்து பெத்லகேமுக்குச் செல்ல வேண்டியிருந்தது.  நிச்சயமாக, மரியாள், அரச குடும்பத்தாரைப் போன்று, அடிமைகளைக்‌ கொண்டு பல்லக்குகளில் சுமக்கப்படவில்லை.  தூரம் ஏறக்குறைய 100 மைல்கள், மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி இருக்கும்.  அதில் மரியாள் கர்ப்பமாக இருந்ததால், குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்ததால், அவர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 20 மைல்கள் மட்டுமே பயணித்திருக்க முடியும் (லூக்கா 2:1).

 3) அகதி:
கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் மூலம் யூதர்களின் அரசன் பெத்லகேமில் பிறந்ததை அறிந்த ஏரோது, கர்த்தராகிய இயேசுவைக் கொல்ல விரும்பினான்.  மரியாளும் யோசேப்பும் கைக்குழந்தையாகிய இயேசுவை சுமந்துகொண்டு எகிப்துக்குத் தப்பிச் செல்ல வேண்டியிருந்தது (மத்தேயு 2:13-23). அவர்கள் சுமார் ஆறு வருடங்கள் அகதிகளாக இருந்ததாக நம்பப்படுகிறது.

 4) ஆதரவற்ற விதவை:
 கர்த்தராகிய இயேசுவுக்கு பன்னிரெண்டு வயதாகி, அவர்கள் எருசலேமுக்கு திரும்ப வந்த காலக்கட்டத்தில் தான் யோசேப்பு இறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.  கர்த்தராகிய இயேசு தனது முப்பது வயது வரை குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது, இளைய உடன்பிறப்புகளுக்கு உதவினார்.

5) அகால மரணம்:
ஆண்டவராகிய இயேசுவின் மரணத்தை ஒரு தாயாகப் பார்ப்பது உலகில் எந்தப் பெண்ணும் தாங்காத மிகப்பெரிய சோகமாக இருந்திருக்கும்.  கர்த்தராகிய இயேசு தீய மனிதர்களின் கைகளில் ஒரு கொடுமையான மரணத்தை அனுபவிக்க வேண்டியிருந்தபோது அவள் உதவியற்றவளாக காணப்பட்டாள் (யோவான் 19:25-27).

மாபெரும் இன்னல்கள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் தங்கள் நம்பிக்கையிலும் அர்ப்பணிப்பிலும் உறுதியாக இருப்பவர்களுக்கே தேவ கிருபை உண்டு.

 அவருடைய விருப்பமான நபராக நான் இருப்பேனா?

 

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download