சிந்தனைச் சிறகுகள் பயணங்கள் முடிவதில்லை

என் வட இந்திய பணி நாளின் துவக்க காலம் அது. சிறிய குழுவாக, அலுவலகக் காலை தியான வேளை. உற்சாகமூட்டும் பாடல் வேளை முடிந்தது. உடனூழியர் செய்தி கொடுக்கத் துவங்கினார். அவர் பேசும் மொழி நமக்குப் புரியாவிட்டாலும் உடன் இருந்த அனைவரும் தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்ததால் நல்ல முறையில் செய்தியைக் கொடுக்கும் தாலந்து அவருக்கு இருக்கிறது என்று புரிந்து கொண்டு நானும் அவருக்கு என் காதுகளைக் கொடுத்தேன்.

செய்தியின் இடையிடையே, தாவூத், இப்ராஹிம், என்று காதில் விழுந்தது. என்னங்டா இது, தாவூத் இப்ராஹிம், மும்பையில் உள்ள கேங்ஸ்டார் மற்றும் தீவிரவாதி என்று என் மூளை ஞாபகப்படுத்தினதால், காலைத் தியானத்தில் தாவூத் இப்ராஹிமுக்கு என்ன வேலை என்று நினைத்துக் கொண்டாலும், உடன் இருப்பவர்கள் அனைவரும் தீவிரமாக அவரைக் கவனித்துக் கொண்டிருந்ததால்.  நாமும் பொறுமை காப்போம் என்றிருந்தேன். 

அடுத்த சில நிமிடங்களில் அவர் யூசுப் என்ற பெயரை அடிக்கடி உபயோகிக்கத் துவங்கினார். அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில், யோகன்னான் என்றும் எதற்கோ பயன்படுத்தினார். அப்போது மண்டையில் ஒன்று உதித்தது. பேசுகிறவர் குஜராத்காரர், மும்பையில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யோகன்னான் பற்றி பேசத் தொடங்கியுள்ளாரே, 'சரி, பாகிஸ்தான் குஜராத் எல்லையோர மாநிலம் என்பதால் ஏதோ எடுத்துக்காட்டு சொல்கிறார் என்று மீண்டும் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த நண்பர் சற்று நேரத்தில், சுலைமான் என்ற பெயரைக் குறிப்பிட எனக்குக் கிட்டத்தட்ட மூர்ச்சையாகிப் போனது. குஜராத் நண்பர், மும்பை, பாகிஸ்தானில் இருந்து திடீரென நம்ம மேலப்பாளையம் சுலைமான் சேட்டைப் பற்றிப் பேசுகிறாரே, என்னங்கடா இது, நமக்கு ஒண்ணும் புரியலையே' என்று அதிர்ச்சி அடைந்தேன். இருந்த போதிலும், அது தியான வேளை என்பதால் பேச முடியவில்லை ஆயினும், சத்தம் வராமல், மௌனமாக சிரித்துக் கொண்டேன். 

ஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. பிரசங்கம் முடிந்தவுடன் உடனூழியர்கள் தங்கள் சிந்தனைகள், மற்றும் அந்த பகுதியில்/செய்தியில் தேவன் தங்களோடு என்ன பேசினார் என்று ஓரிரு வார்த்தைகள் சொல்வது வழக்கமாக இருந்ததால், ஒரு சிலர் பாராட்டினர், ஒரு சிலர் அவர்களின் கருத்துக்களை சொன்னார்கள். 

எனது முறை வந்த போது, நான் சத்தமாக சிரித்து விட்டேன். பின்னர் "செய்தியில், தாவூத் இப்ராஹிம், யூசுப் யோகன்னான் மற்றும் சுலைமான் எனும் பெயர்களை பயன்படுத்தினீர்களே" என்றேன். செய்தி கொடுத்த நண்பர் "சார், மன்னித்து விடுங்கள், உங்களுக்கு இது முதல் நாள், ஹிந்தி தெரியும் என்றே நினைத்துக் கொண்டே பேசி விட்டேன். எல்லாப் பெயர்களும் வேதத்தில் உள்ள உதாரண புருஷர்கள் தான் சார்" என்றார். ஓ... அப்படியா, சொல்லுங்கள் என்றேன்.

தாவூத் - David
இப்ராஹிம் - Abraham
யூசுப் - Joseph
யோகன்னான் - John
சுலைமான் - Solomon

என்று சொல்ல, அவர், நான் உட்பட அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டோம். வேடிக்கையாகத் தெரிந்தாலும், உங்கள் புரிந்து கொள்ளலின் படியாக இதில் பல பாடங்கள் உண்டு... சில இங்கு..!

பாடம்_1: வேதாகமத்தில் உள்ள பெயர்களை நாம் வைத்து விட்டால் எல்லோரும் நல் உதாரணங்கள் ஆகி விடலாம் என்று ஒரு போதும் நினைத்து விடக்கூடாது. மாபாதக செயல்களை எந்தவொரு மனிதனும் செய்ய முடியும்.

பாடம்_2: பெயர்களால் ஒன்றும் இல்லை, வாழ்க்கையும், சாட்சியுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்து கொள்ள வேண்டும். 

பாடம்_3: இரட்சிப்பின் அனுபவம் பெற்று, கிறிஸ்துவுக்குள், நற்சான்றுடன் வாழும் சரவணன், சிவகுமார், முருகன் காமாட்சிகள் தான் ஆசீர்வாதமே தவிர, இரட்சிப்பை கேள்வி கேட்கும் எட்வர்ட், டேவிட், டேனியல் என்று எந்த வேதாகமப் பெயரைக் கொண்டிருந்தும், கிறிஸ்துவின் நாமத்திற்கு, அவமகிமை கொண்டு வந்து துற்சாட்சியுடன்  வாழ்வது சாபம்.

இப்படியாக பல பாடங்கள் உண்டு..

நெல்லை ஜெஸி மணாளன்.

 



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download