கன்னி பிறப்பு

ஆண் மற்றும் பெண் இன்றி கடவுளே ஆதாமை ஈன்றெடுத்தார். அவனுடைய உடலை மண்ணில் உருவாக்கி, தன் உயிரையும் உணர்வையும் ஊதி அதனை ஆண் என்றார். அவன் மனிதனானான். அவனிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அதனை மண்ணால் மூடி மீண்டும் அவ்வுடலில் அவருடைய உயிரையும் உணர்வையும் ஊதி அதனை பெண் என்றார். முதலில் ஈன்றெடுத்த மனித உடலில் இருந்து அதன் எதிர்ப்பண்பை நீக்கிய பின்பு அம்மனிதனுக்கு ஆண் என்றும் நீக்கப்பட்ட எலும்பில் உருவான மனிதர்க்கு பெண் என்றும் பெயரிட்டார். அவ்விருவரையும் ஒன்றாகவும் இரண்டாகவும் ஈன்றவர் கடவுள். அவர்கள் இருவரின் இணைப்பிலிருந்து மனித இனங்கள் தொடர ஆரம்பித்தது. ஆண் பெண் இணைப்பால் மட்டுமே புதிய மனித பிறப்பு சாத்தியம் என்ற நிலையில், மனிதர்கள் மத்தியில் இறைமகன் என்ற பெயரில் ஒரு மனிதர் மாற்று வழியில் பிறக்கிறார். அவர் ஒரு ஆண் துணையின்றி பிறந்தார்.

கன்னி பிறப்பு என்றால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானவள் என்ற பொருள் அல்ல. அத்துடன் முதல் பிள்ளையை ஒவ்வொரு பெண்ணும் கன்னிப்பெண்ணாகவே இருந்துதான் கர்ப்பம் தரிக்கப்படுகிறாள். மரியாள் திருமணம் ஆகாதவள். எந்த ஆணுடனும் பாலுறவில் ஈடுபடாதவள். திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டும் இன்னும் அவள் கன்னிப்பெண்ணாகவே இருக்கிறாள். பாலுறவுக்குள் அவள் ஈடுபடவில்லை ஆனால் அதற்குள் கர்ப்பமாயிருக்கிறாள். அவளுடைய கர்ப்பம் வரப்போகும் கணவனால் சந்தேகிக்கப்படப்படுகிறது. காரணம் ஒரு ஆண் துணையின்றி ஒரு பெண் கர்ப்பமாவது விஞ்ஞானத்தில் சாத்தியமில்லை என்று யோசேப்பு அறிந்திருந்தான். ஆனாலும் விஞ்ஞானத்தை அஞ்ஞானமாய் மாற்றுகிற கடவுளுக்கு இவை சாத்தியமே. 

கன்னி பிறப்பு என்றால் ஒரு பெண் கன்னித்தன்மையை இழக்காமலே கர்ப்பமாவது என்று பொருள். ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை இழப்பதற்கு ஒரு ஆண் தேவை. ஒரு ஆண்தான் பெண்ணின் கன்னித்தன்மையை பாலுறவின் மூலம் இழக்கச்செய்கிறான். அதனால்தான் இன்றும் கிராமப்புறங்களில் திருமணமாகி முதல் இரவில் சென்று திரும்பும் பெண் இன்றுதான் அவள் கண்ணித்தன்மையை இழந்தாளா அல்லது ஏற்கனவே இழந்தவளா என்று அவளுடைய உடை மற்றும் படுக்கையில் இரத்தம் சிந்தப்பட்ட அடையாளம் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி இரத்த அடையாளம் இல்லை என்றால் அப்பெண்ணை சற்று சந்தேகமாகப் பார்க்கும் பார்வை இன்றும் மறையவில்லை. ஆனால் நீதிமன்றம் இப்படிப்பட்ட பரிசோதனை செய்வதை சட்டப்பூர்வமாக்க சம்மதிக்கவில்லை. அதற்கு காரணம் மருத்துவ ரீதியாக இவை நிருபிக்கப்படவில்லை அத்துடன் பாலுறவு என்பது ஒரு தனிமனித உரிமை என்பதால் அதனை திருமணம் என்னும் பந்தத்திற்குள் மாத்திரம் அடக்கிவிடமுடியாது என்றும் திருமணம் என்பது பெயரிவர்கள் உறவினர்கள் சமய முறைப்படி நடத்தவேண்டிய அவசியம் இல்லை, திருமண வயதை எட்டியவர்கள் தங்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ்ந்தாலே அவர்களை குடும்பமாக கருதலாம் என்று சட்டமாக்கிவிட்டார்கள்.

பரிசுத்தஆவி உன்மேல் வரும்@ உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்: அதனால் நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் ஈன்றெடுப்பாய் என்று மரியாளுக்கு சொல்லப்பட்டது. பரிசுத்தஆவி அவளுடைய சரீர கர்ப்பத்தைத் தொடாமலேயே அவளுடைய கர்ப்பப்பையில் கர்ப்பத்தை ஏற்படுத்தினார். அதனால்தான் யோசேப்பிடம் உன் மனைவிக்கான உன்னுடைய கர்ப்பை கடவுள் தொடவில்லை அவள் இப்போதும் உனக்கு கர்ப்புடையவளாகவே இருக்கிறாள் என்று தேவதூதன் அறிவித்தான். அவள் கடவுளின் குழந்தையைப் ஈன்றெடுத்தப்பின்பும் அவள் கர்ப்புள்ளவள்தான் என்று உறுதியாக சொன்னதை யோசேப்பு ஏற்று மரியாள் இயேசுவை ஈன்றெடுக்கும்வரை அவளுடன் பாலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்று பைபிள் சொல்கிறது: அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத்தேயு 1:25). ஆனால் இன்றைய காலங்களில் திருமண நிச்சயம் முடிந்தபின்பு அல்லது அதற்கு முன்பே பாலுறவு பரிட்ச்சயத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் மரியாளும் யோசேப்பும் பாலுறவு கட்டுப்பாட்டை இருவரும் ஒன்றாக இருந்தும், திருமண பந்தத்திற்குள் நுழைந்தபின்பும் கடவுள் குழந்தையை ஈன்றெடுக்கும்வரை தங்கள் பாலுறவு ஆசைகளை ஒதுக்கிவைத்தார்கள்.

கன்னி பிறப்பு என்பதன் பொருள் என்னவென்றால் கடவுள் மனித உடலில் உள்ள எந்த பாகத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமலே எந்த உடல் பாகத்திலும் அவர் வைக்கவேண்டியதை வைக்கவும் எடுக்கவேண்டியதை எடுக்கவும் ஆற்றலும் அறிவும் பெற்றவராயிருக்கிறார். அதுதான் இறைஞானம். மனித உடலில் உள்ள எந்த பாகங்களையும் அவருடைய சித்தம் நிறைவேற எந்த பாதிப்பும் இல்லாமலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியும் செயல்படும் வல்லமை கொண்டவரே கடவுள். அவருடைய நிழலாட்டத்தால் மரியாள் கர்ப்பமானது இறைஞானம், இறைத்திட்டம்: இதனை கடவுளுடைய அற்புதம் என்றோ கடவுளுடைய ஆற்றல் என்றோ அல்லது கடவுளின் ஞானம் என்றோ சொல்லலாம். மரியாள் இறைமகனை ஈன்றெடுத்த பின்பும் அவள் உடல் பிள்ளைப் பெற்ற அடையாளமோ அல்லது கர்ப்பை இழந்த அடையாளமோ அவளிடம் இல்லை என்பதே கன்னி பிறப்பின் சிறப்பாக இருக்கிறது. 

இறை அவதாரத்தின் தனித்துத்தில் கன்னி பிறப்பு முதல் தனித்துவமாக இருக்கிறது. உலக வரலாற்றில் கன்னி பிறப்பு முதலும் கடைசியுமாக நடந்தேறியது மரியாளின் வாழ்வில் மட்டும்தான் அதனால்தான் அவள் கிருபைப்பெற்றவள் என்று அழைக்கப்பட்டாள். அவளைப் போன்ற கிருபைப் பெற்றவர்கள் அவளுக்கு முன்போ அவளுக்குப்பின்போ இருந்ததில்லை, இருக்கப்போவதில்லை. ஆனாலும் அவள் பெற்ற கிருபையைப் போலவே நமக்கும் உண்டு என்பதையே நாம் கடவுளின் குமாரனை விசுவாசிப்பதால் அவர் நம்மில் பிறந்து காலம் முழுவதும் வாழ்கிறார். மரியாளின் கர்ப்பப்பையில் ஒன்பது மாதங்கள் வாழ்ந்த இறைமகன் இன்று நம் இருதயத்திலும் மற்றும் எல்லா அங்கங்களிலும் சகல நாட்களிலும் வாழ்கிறார், ஆள்கிறார். இந்த கிறிஸ்மஸ் காலங்களில் நம் சரீர அங்கங்களை கடவுள் ஆள்வதற்கும் அதனுள் வாழ்வதற்கும் அர்ப்பணிப்பதே மெய்யான கிறிஸ்மஸ் வழிபாடாக இருக்கமுடியும். நாமும் இந்த உலகில் கறைபடாமல் கடவுளுக்குள் தூய கர்ப்புள்ளவர்களாக இருக்க பரிசுத்தஆவி நம் சரீரத்தின் அனைத்து அவயவங்களிலும் ஊடுருவி நம்மில் அவருடைய தூய்மை, வாய்மை, திட்டம் வெளிப்பட ஒப்புக்கொடுப்போம். மரியாளைப் போல நாமும் இறைமகனை தூய்மையாக வெளிப்படுத்த கர்ப்புள்ள கிறிஸ்மஸ் கொண்டாடுவோம். 

Author. Rev. Dr. C. Rajasekaran



Topics: Rev. Dr. C. Rajasekaran Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download