சங்கீதம் 62- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - மேன்மக்கள், கீழ்மக்கள், ஐசுவரியம் எதையுமே நம்பவேண்டாம்.
 - கன்மலை போன்ற தேவனையே நம்பவேண்டும்.

1. தேவமனிதனைத் தள்ளி அவனுக்குத் தீங்கு செய்யும்படி இந்த உலகத்தில் பலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் 
முயற்சி பலனளிக்காமல் அவர்களே சாய்ந்து போவார்கள் என்பது தாவீதின் நம்பிக்கை.
 "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; ... 
இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்திரம்...' என்று ஏசாயா 54:17 ஆம் வசனம் கூறுகிறது.
இந்த மனுஷர் தங்கள் வாயினால் ஆசீர்வதித்து உள்ளத்தில் சபிப்பதால் அபத்தம் பேசுகிறார்கள் (வச.4). "உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்' என்று ஒரு தமிழ்ப்புலவர் கூறி இருப்பது நமக்கு நினைவு இருக்கலாம்.

2. தேவமனிதனை இந்த உலகத்தில் எந்த சக்தியும் கஷ்டங்களும், பிரச்சனைகளும், தாக்குதல்களும் அசைக்கமுடியாததற்குக் காரணம் தேவ மனிதன் தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதால்தான். கன்மலைபோன்ற கர்த்தர் மகாபெலனும் அசைக்கப்படாதவருமாயிருக்கிறபடியால் அவரை அடைக்கலமாகவும், இரட்சிப்பாகவும் கொண்டு இருப்பதால் நாம் நம்புவது அவரிடத்திலிருந்து வரும் (வச.1,2,5,6,7).

3. ஆகவே, தாவீது மிகத் தெளிவாக நமக்கு அறிவிப்பது என்னவென்றால், தெய்வ பயமில்லாத கீழ்மக்கள் மாயையானவர்கள். உலகத்தில் எவ்வளவு பணபலம் படைத்த மேன்மக்களாக தங்களைக் கருதினாலும் அவர்கள் பொய்யரே. கொடுமை செய்வதையும், கொள்ளையிடுவதையும் நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக நம்பக்கூடாது. அவை தீமையானது.மேலும், மிகுதியான ஐசுவரியமும் நம்பத்தகுந்ததல்ல. தேவன் ஒருவரே சர்வ வல்லமை பொருந்தியவர். அவர் ஒருமுறை தமது வார்த்தையில் அந்த சத்தியத்தை விளம்பினார். அவருடைய உத்தம ஊழியர்கள் மூலம் இரண்டாம் விசையும் அந்த சத்தியத்தைக் கேட்டேன் என்று தாவீது (வசனங்கள் 9,10,11) இவற்றில் மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

4. வல்லமையும் கிருபையும் உடைய ஆண்டவர் மனிதனுடைய செய்கைகளுக்குத்தக்கதாக நிச்சயம் பலனளிப்பார். 
ஆகவே நாம் தேவனுக்கு பயந்து அவரை அடைக்கலமாகக் கொள்ளவேண்டும் (வச.12).
"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' என்று வெளிப்படுத்தல் 22:12 ஆம் வசனத்தில் என்று கர்த்தர் யோவான் சுவிசேஷகனுக்கு 
வெளிப்படுத்திக் கூறியிருக்கிறார்
தூக்கனாங் குருவி ஒன்று, மகா சக்தி வாய்ந்த புயல் அடித்துக் கொண்டிருந்த சமயம், தனது கூட்டிலே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்ததாம். புயலின் சீற்றம் பெரிய மரங்களையும் கட்டிடங்களையும் சாய்த்துக் கொண்டிருந்தாலும் இக்குருவியின் கூட்டை சேதப்படுத்த முடியவில்லை. காரணம், இக்குருவி தன் கூட்டை ஒரு கன்மலைக்குள் கட்டியிருந்தது.

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download