சங்கீதம் 19- விளக்கவுரை

முக்கியக் கருத்து :

 - சகல சிருஷ்டிப்பும் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது.
 - கர்த்தருடைய வேதம் மேன்மையானது.
 - கர்த்தருடைய வேதம் மனிதனுக்கு பலன் தருகிறது.

1.  சர்வ சிருஷ்டிப்பும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது (வச.1-6)

எல்லாப் படைப்புகளும் பேச்சில்லாமல் சத்தமிடாமல் தேவனுடைய மகிமையைத் தங்களுடைய அற்புதமான தன்மையினால் வெளிப்படுத்துகிறது. மேலும், தேவனே இவற்றைப் படைத்தார் என்ற உண்மையை தெரியப்படுத்துகிறது.'வானங்கள்' என்று சொல்லப்பட்ட வார்த்தை, பல வான மண்டலங்கள் இருப்பதையும்   தெரிவிக்கிறது. மேக மண்டலம், நட்சத்திர மண்டலம், காற்று நீர் நிறைந்த மண்டலங்கள் என்றும் பற்பல    கோளங்கள் கொண்ட மண்டலம், இவைகளை அடுத்து நாம் அறியாத பல வான மண்டலங்களும் இருப்பதாக தெரிவிக்கிறது. கர்த்தரை நம்புகிற விசுவாசிகள் இவையெல்லாம் தேவனால் படைக்கப்பட்டதென்று காண்கிறார்கள். அவிசுவாசிகளே இந்த சிருஷ்டிப்புகளைத் தெய்வமாகவும் தெய்வீக சக்தியாகவும் கண்டு அவற்றை தொழுதுகொள்ள முற்படுகிறார்கள். இது தவறு என்று சத்திய வேதம் கூறுகிறது.

"... வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்'  என்று உபாகமம் 4:19 ஆம் வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.

தேவன் படைத்த சூரியன் பராக்கிரமசாலியைப்போல இருக்கிறது என்றும் அது தன் பாதையில் ஓடுகிறது என்றும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. சூரியன் பூமியை சுற்றி வருவதும், அது தன் வெப்பத்தாலும் வெளிச்சத்தாலும் ஜீவராசிகளுக்கு மிகுந்த பலனைத் தடையின்றி அளிப்பதையும் தெரிவிக்கிறது. அநேகர் இந்த சிருஷ்டிகள் தானாக வந்ததாக நினைக்கிறார்கள். சத்திய வேதம், அது தவறான கருத்து என்பதை இந்த சங்கீத அதிகாரம் உணர்த்துகிறது. மேலும், இப்படி இந்த சிருஷ்டிப்புகள் எல்லாம் தேவனுடைய மகிமையை பகலும் இரவும் தெரிவிக்க, மனிதர்கள் எவ்வளவு அதிகம் தெரிவிக்கவேண்டும் என்றும் உணர்த்தப்படுகிறோம்.

2.  கர்த்தருடைய வேதவசனத்தின் மேன்மை (வச.7-11)

கர்த்தருடைய வேதம் நியாயங்கள், கற்பனை, சாட்சி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. இவற்றின் தன்மை  குறைவற்றது, தூய்மையானது, உண்மையானது, நீதியானது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பலன்  ஆத்துமாவை உயிர்ப்பிக்கவல்லது. பேதையை ஞானியாக்கும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கும், கண்களை தெளிவாக்கும்.

கர்த்தருடைய வேதம் விலையேறப்பெற்ற பொருளாகிய பொன்னைக்காட்டிலும் அதிக மதிப்புள்ளதும், மிகவும் இனிமையான தேனைவிட ருசியுள்ளதுமாக இருக்கிறது.

இந்த கர்த்தருடைய வேதம் குற்றங்கள், பிழைகள் நிறைந்த பாவ ஜீவியத்தில் வாழும் மனிதனை எச்சரித்து கர்த்தருக்கு பயந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளபோதிக்கிறது. 
""தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும்....இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' எபிரேயர் 4: 12.
இந்தக் கட்டளைகளை கைக்கொள்வதால் மனிதனுக்கு மிகுந்த பலன் உண்டு என்பதையும் தெரிவிக்கிறது.

3.  தேவனுடைய கிருபைக்காக வேண்டுதல் (வச.12-14)

இப்படிப்பட்ட மகா மேன்மையான, மிகுதியான பலன்தரும் கர்த்தருடைய வேதத்தின்மூலம் தனது மறைவான குற்றங்களுக்கு தன்னை நீங்கலாக்கி, துணிகரமான பாவங்களிலிருந்து விலகி, பெரும்பாதகமான செயல்களிலிருந்து தன்னை நீக்கிக்காத்துக்கொள்ள தேவனுடைய கிருபைக்காக தாவீது வேண்டுகிறார்.

தன்னுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளும், இருதயத்தில் செய்யும் தியானமும் கர்த்தருக்குப் பிரியமாக இருக்க தாவீது ஜெபிக்கிறான். கர்த்தருடைய வேதத்தின் பரிசுத்தத்தையும், வல்லமையையும் மகா  மேன்மையையும் உணர்ந்து அவற்றிற்கு பயந்து தேவ கட்டளைக்கு பயந்து கீழ்ப்படிய நினைக்கும் ஒரு மனிதனுடைய சொல்லும், செயலும் தியானமும் நிச்சயமாக கர்த்தர் சந்நிதியில் பிரியமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download