வாழ்க்கை பயணத்தில் நம்முடன்…

கிலெயோப்பாவும் மற்றொரு சீஷனும் எம்மாவு என்னும் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அவர்களுடன் உயிர்த்தெழுந்த இரட்சகரும் கூட நடந்து போனார்.  ஆனால் சீஷர்கள் அவரை அடையாளம் காணவில்லை, அவர்கள் ஏதோ ஒரு வழிப்போக்கர் என்று நினைத்தார்கள்; அதனால் அவரிடம் எருசலேமில் நடந்த சம்பவங்கள் மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் நம்பமுடியாத உயிர்த்தெழுதல் தொடர்பான நிகழ்வுகளைக் குறித்து பகிர்ந்து கொண்டனர் (லூக்கா 24:13-35). கர்த்தர் அவர்களை "புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" என்று கடிந்துகொண்டார், பின்பு வேதாகமத்திலிருந்து; மோசேயின் பிரமாணம், தீர்க்கதரிசிகள் உரைத்தது மற்றும் மேசியாவைப் பற்றிய சங்கீதங்கள் எல்லாவற்றையும் விவரித்துக் கூறினார். அக்கிராமத்தை அடைந்ததும் அந்த சீஷர்கள் அவரை இரவு உணவில் தங்களோடு இருக்கும் படி அவரை வற்புறுத்தினார்கள், அவரும் சம்மதித்து வீட்டினுள் நுழைந்தார், பின்பு அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்; உடனே சீஷர்களின் கண்கள் திறக்கப்பட்டது, அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டபோது, ​​கர்த்தர்  அவர்களை விட்டு மறைந்தார்.

 வாழ்க்கை பயணத்தில் ஒரு துணை:
கர்த்தராகிய இயேசு இரண்டு சீஷர்களின் பயணத்தில் இணைந்தார்.  உயிர்த்தெழுந்த தேவன் நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்குத் துணையாக இருக்கிறார்.  சீஷர்கள் அடையாளம் காணத் தவறியது போல், இன்றும் பெரும்பாலான விசுவாசிகள் அவருடைய பிரசன்னத்தை அங்கீகரிக்கவோ அல்லது அடையாளம் காணவோ தவறிவிட்டனர்.  சீஷர்களாகிய நாம் அவர் சத்தத்திற்கு செவிசாய்க்கத் தயாராக இருந்தால், நம்  வாழ்க்கைப் பயணம் முழுவதிலும் உடன் இருந்து வழி நடத்த உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை மறக்காதிருப்போம்.

இம்மானுவேல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயர் இம்மானுவேல், அதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம் (மத்தேயு 1:22-23). அதாவது தேவன் நம்மோடு இருந்தார் என்று கடந்த காலத்தை சொல்லவில்லை; தேவன் நம்முடன் இருப்பார் என்று எதிர்காலத்தையும் சொல்லவில்லை.   அவர்மீது விசுவாசம் வைத்த தம்முடைய மக்களோடு அவர் நித்திய நித்தியமாக இருக்கிறார் என்ற நிகழ்காலத்தை அதாவது அநுதின வாழ்வைக் குறிக்கிறது.  உயிர்த்தெழுதலுக்குப் பிந்தைய கிலெயோப்பா மற்றும் மற்றொரு சீஷருடன் நடந்த பயணம் இந்த சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் அருகில் இருக்கிறார், எங்கேயோ தொலைதூரத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.

மரணப் பள்ளத்தாக்கு:
தேவன் தன்னுடன் இருந்தபடியால், மரணப் பள்ளத்தாக்கின் வழியாக நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படாமல் இருந்தானே தாவீது. ஆம், உயிர்த்தெழுந்த இரட்சகர் தம்மை விசுவாசிக்கும் மக்களோடு அவர்களின் கடினமான, மோசமான, அவமானமான, எல்லாராலும் கைவிடப்பட்ட சூழ்நிலையிலும், இக்கட்டான காலங்களிலும், கொந்தளிப்பான காலங்களிலும் மற்றும் கண்ணீரின் பாதையைக் கடக்க வேண்டியிருந்தாலும் கூட அவர் கூடவே இருக்கிறார், விட்டு விலகிடவே மாட்டார் என்பதை விசுவாசிப்போம்.

இரண்டு அல்லது மூன்று:
(மத்தேயு 18:20)ல் கூறப்பட்டது போல, இரண்டுபேராவது மூன்றுபேராவது அவருடைய நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே ​​உயிர்த்தெழுந்த கர்த்தர் நிச்சயம் இருக்கிறார். பரிசுத்தமானவரும், நம்முடைய எல்லா துதி ஆராதனைக்கும் தகுதியானவருமான அவரை நம் நடுவில் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய மரியாதை மற்றும் சிலாக்கியம் என்பதை உணர்வோம்.

கிறிஸ்து சமீபமாய் இருக்கிறார்:
"கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக" (ரோமர் 10:6‭-‬8) என பவுல் எழுதுகிறார். ஏனென்றால் அவர் நம் இதயத்தில் இருக்கிறார் (ரோமர் 10:6-8) என்பதை மறவாதிருப்போம்.

 என் வாழ்க்கைப் பயணத்தில் அவருடைய பிரசன்னத்தை நான் அனுபவிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download