ஆண்டவர் பாதத்தில் அரும்பு (மகிழம் பூ) உண்மைச் சம்பவம்

தொடர் - 1

பழமை பூத்துக் குலுங்கும் பெரிய ஒட்டு வீடு. “அந்த வீட்டின் வாசலில் போடப்பட்ட பந்தலில் வைலட் நிற பெரிய பூக்கள், பசுமை இழைகளோடு போட்டியிடுவது போல் நிறைந்திருக்கும் அழகே தனிதான். காலைக் கதிரவனுக்கு வாழ்த்துப்பாடி வரவேற்பது போல் இதழ் மலர்ந்து சிரித்தன அப்பூக்கள். வீட்டினுள்ளே அந்த பெரிய ஹாலில் துடிக்கும் நெஞ்சுடன் நடுத்தர வயது ஆடவர் ஜோசப் அமர்ந்திருந்தார். கட்டிலில் அமர்ந்திருந்த அவரின் இருபுறமும் அவருடைய இரு பிள்ளைகள் 8 வயது சத்யப் பிரியாவும், 4-வயது பையன் கிப்ட்சனும் நடப்பது என்னவென்று சரியாகத் தெரியாவிட்டாலும் ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்தவர்கள் போல் அமைதியாகக் கொட்ட, கொட்ட விழித்தபடி அமர்ந்திருந்தனர்.

ஆம், அந்த வீடு புதிய தொரு ஜீவனின் வரவுக்கு காத்திருந்தது. உள் வீட்டில் தாதியர் ஒருவருடன் இவ்விரு குழந்தைகளின் தாய் கிறிஸ்டி இருந்தாள். வாழ்வுக்கும், சாவுக்குமிடையே நடக்கும் போராட்டத்தைப் போல், தனது மூன்றாவது குழந்தையை ஈன்றெடுக்கப் போராடிக் கொண்டிருந்தாள்..

ஆதியிலே தேவ கட்டளையை மீறிய ஏவாளுக்கு தேவன் இட்ட சாபம் அவள் வழித்தோன்றல்கள் தலையில் சுமந்து விட்டதே. என்ன செய்வது? ஜோசப் தன் மகனைப் பார்த்துக் கேட்டார். “உனக்குத் தம்பி வேணுமா? பாப்பா வேணுமா?”

“பாப்பாதான் வேணும்” கிப்ட்சன் பதில் கூற வேகமாக இடைமறித்தாள் சத்யப்பிரியா. “தம்பிதான் வேணும்”.

அவள் உள்ளம் ஓலமிட்டது, “தம்பிதான்,தம்பிதான், தம்பிதான் வேணும்.”

கடந்த சில தினங்களுக்கு முன் அவளுடன் படிக்கும் மாணவிகள் அவளைச் சுற்றி நின்று பேசியது படமாகியது.

“சத்யா! உங்க அம்மாவுக்குப் பாப்பா பிறந்துச்சுன்னா உன்னப் பிரியமாவே வைச்சிருக்க மாட்டாங்க. தம்பி பிறந்தாத்தான் உன்ன நேசிப்பாங்க.'”

ஏன் அப்படி அவர்கள் கூறினார்கள்?

சத்யாவுடன் படிப்பவர்கள் எல்லாம் அவளை விட வயதில் மூத்தவர்கள். உலகின் நடப்பை பார்த்ததால் கூறினார்களா? அல்லது சுகவீனமான அவன் தம்பியின் மீது பெற்றோர் சற்று அதிக அக்கறை காட்டுவதைக் கவனித்து அவளிடம் அப்படிக் கூறினார்களோ? தன் பெற்றோர் பாசத்தில் ஊறிய இளம் குருத்து வேதனையடைந்தது. தன் பெற்றோரின் பாசத்தை இழக்க அவள் மனம் ஒப்பவில்லை. அன்றிலிருந்து அவள் இதய ஏக்கமெல்லாம் அம்மாவிற்கு தம்பி பிறக்கட்டும் என்பதுதான். அவள் ஜெபித்தாளா? ஏங்கினாளா? அது அவளுக்கே தெரியாது.

“அம்மா” அடிவயிற்றைக் கிழித்து வரும் ஓலம். அனைவர் இதயமும் “பட பட” என வேகமாகத் துடித்தது. அடுத்த விநாடி 'குவா, குவா' என தொடர்ந்து ஒலித்தது பிஞ்சுக் குழந்தையின் அழுகை ஒலி; தாயின் இருண்ட கர்ப்பப்பையிலிருந்த குழந்தை உலகைக் கண்ட ஆனந்தத்தில் எழுந்த ஆனந்த அழுகையா? நிம்மதியான இடத்தைவிட்டு வந்திருக்கிறேனே என்ற பயத்தில். கூறிய கதறலா?

கதவைத் திறந்து '*ஆண்குழந்தை'' என்ற தகவலைத் தந்தார் தாதி. மழை கண்ட பயிர் என மனம் மகிழ்ந்தாள் சத்யப்பிரியா. விசுவாச வித்து அவள் உள்ளத்தே விழுந்து முளைத்தது. எல்லாக் காரியத்துக்கும் தேவனைச் சார்ந்திருக்க ஆரம்பித்தாள். எந்தப் பொருளையாவது எங்காவது வைத்துவிட்டால் உடனே ஜெபிப்பாள். “இயேசுவே! என் பென்சிலைக் காணோம். எடுத்துத் தாங்க இயேசப்பா'” என ஜெபிப்பாள். உடனே பென்சில் உள்ள இடம் கண்ணில் படும். எது தவறு? எது சரி? என்பதைக் பிரித்தறியா பருவம். பள்ளிப்பாடம் படிக்கவில்லை என்றால் “இயேசுவே! இந்த டீச்சர் இன்றைக்குப் பள்ளிக்கு வரக்கூடாது.” என்று எல்லாவற்றிருக்கும் ஜெபிக்க ஆரம்பித்தாள். அவளைப் பொறுத்தவரை, “இந்த உலகில் அவள் என்ன கேட்டாலும் அதைக் தருவதற்கு ஒருவர் உண்டு. அவர்தான் இயேசு என்ற ஆழ்ந்த நம்பிக்கையிலே வாழ்ந்து வந்தாள். பலருக்கு ஆசீர்வாதத்தின் அப்பமாகப் பயன்படுத்த சித்தங் கொண்ட தேவனும் அவள் கேட்டதையெல்லாம், ஏன் நினைத்ததற்கும் வேண்டிக் கொள்வதற்கும் மிகவும் அதிகமாய்க் கொடுத்தார்.

பள்ளியிறுதித்தேர்வு! சமூகவியல் வினாத்தாள் அவள் முன் கோலியாத் போல் நின்றது. பல வினாக்களுக்கு விடை தெரியவில்லை. என்ன செய்வது? ஒரு கணம் கலங்கினாள். மறுகணம் அவளுக்கு உதவத்தான் அருகிலேயே இருக்கிறாரே பரம தகப்பன். ஒரு நிமிட பிரார்த்தனை. யாரோ அவளை வழிநடத்துவது போல் உணர்ந்தாள். தனக்குத் தெரிந்த வினாக்களை “பகுதி ௮' வில் அழகாக எழுதினாள். பின் அதே போல் நன்கு தெரிந்தவற்றை பகுதி ஆ வில் எழுதினாள். பின் அரைகுறையாய்த் தெரிந்தவற்றையும் முடித்தாள். தேசப்படத்தில் நேர்த்தியாய்த் தெரிந்த இடங்களை மட்டும் குறித்து வண்ணமிட்டாள்.

“தமிழ், தமிழ்” என நேசித்த அவளால் ஹிந்தி பாடத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. அதே சமயம் தனது சான்றிதழில் அந்தப் பாடத்தில் மட்டும் தோல்வியான மதிப்பெண்களைப் பெறவும் விரும்பவில்லை. அதற்கும் வேண்டுதல் ஹிந்திப் பாடத்தில் 40 மதிப்பெண்கள் தரும் இயேசுவே. “என்ன நடந்தது? அரசுத்தேர்வில் நன்மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றாள். ஹிந்திப்பாடத்தில் அவள் கேட்டபடி 40 மதிப்பெண்கள். சமூகவியல் பாடத்தில் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவியை விட 10 மதிப்பெண்கள் அதிகமாக எடுத்திருந்தாள். அவள் நம்பிக்கை தீபம் இன்னும் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது.

வளர்ந்தாள். வனப்புமிகு வாலிபப்பிராயம். உலகம் அவளை மயக்கியது. திசை தெரியாது திகைத்தாள். “எது வைரம்? எது கண்ணாடி?” அவளால் பிரித்தறிய முடியவில்லை. அழகை ஆராதித்தாள். “என்றும் பதினாறாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' இதுவே அவள் இதய ஏக்கம்.

இதன் தொடர்ச்சி கல்லூரிக் கன்னி  என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download