கோடாரியைக் கூர்மையாக்குங்கள்

ஆபிரகாம் லிங்கன் இப்படியாக கூறினார்; “"ஒரு மரத்தை வெட்ட நான் ஆறு மணி நேரம் பெற்றால், முதல் நான்கு மணி நேரத்தைக் கோடாரியை கூர்மையாக்கத் தான் செலவிடுவேன்”. ஸ்டீபன் கோவி தனது மிகுந்த திறமையுள்ள மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு பழக்கங்கள் (The Seven Habits of Highly Effective People) என்ற புத்தகத்தில், ரம்பத்தைக் கூர்மையாக்குங்கள் எனக் குறிப்பிடுகிறார்.  வேதாகமும் இதைத்தான் போதிக்கிறது; “ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான்” (பிரசங்கி 10:10).

திட்டமிடுங்கள்: 
திறமையான மக்கள் தங்கள் பணிகளை எவ்வாறு செய்வது என்று திட்டமிடுவார்கள். செய்ய வேண்டிய பணியின் அளவையும் தேவையான வளங்களையும், அதற்கான நேரத்தையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு மனிதன் வீட்டை கட்டுவதற்கு முன், அல்லது ஒரு ராஜா போர்களத்திற்கு செல்லும் முன், முதலில் வளங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கற்பித்தார். "உங்களில் யாராவது ஒரு கோபுரத்தை கட்ட விரும்பினால், முதலில் செலவுகளை கணித்து, அதைக் நிறைவு செய்யத் தேவையான வளங்கள் உண்டா எனப் பார்ப்பாரல்லவா? இல்லையெனில் அடிக்கல் வைத்துவிட்டு முடிக்க முடியாமல் போனால், பார்த்தவர்கள் அனைவரும் அவனை நையாண்டி செய்து, ‘இந்த மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்களே" (லூக்கா 14:28-30). ஆம் வளங்கள் போதுமானதாக இல்லையென்றால், பணியை தொடங்கக்கூடாது; ராஜா போரை ஆரம்பிக்கக்கூடாது, மாறாக சமாதானத்தை நாடவேண்டும்.

முன்னுரிமை கொடுங்கள்:
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு ஒழுங்கு, முன்னுரிமை இருக்க வேண்டும். முதலில் செய்யவேண்டியது எது? அதற்குப் பிறகு எந்த செயல்கள் வர வேண்டும்? இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் செய்யப்பட வேண்டும்; இல்லையெனில், முன்னுரிமைகளை தீர்மானிக்கக் கடினமாகிவிடும். திட்டமிடல் என்பது வெறும் பணிகளை நிர்ணயிப்பதற்காக மட்டுமல்ல; இது மதிப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விசுவாசிகளுக்கு, எந்த ஒரு திட்டமும் அல்லது செயலும் தேவனுக்கு மகிமை சேர்க்கிறதா? தேவன் அரசாட்சியை வளர்க்கிறதா? தேவனின் நீதியை நிலைநாட்டுகிறதா? என்பதே முதன்மையான யோசனையாக இருக்க வேண்டும்.

ஆயத்தமாகுங்கள்:
ஆம், உண்மை தான்! சிலர் திட்டமிடுகிறார்கள், முன்னுரிமைகளை வகுக்கிறார்கள், ஆனால் ஆயத்தமாகுதலில் தோல்வியடைகிறார்கள். இதுவே முடிவை தீர்மானிக்கும் முக்கிய அம்சம். மத்தேயு 25:1-13யில் காணப்படும் புத்திசாலி மற்றும் முட்டாள் கன்னிகைகள் என்ற உவமை இதை மிகத் தெளிவாகக் காண்பிக்கிறது. இப்பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? முதலில், திட்டம் இருந்தது, அவர்கள் திருமணத்துக்குச் செல்வதை முன்பே அறிந்திருந்தார்கள். இரண்டாவதாக, சரியான குழுவில் இருந்தார்கள், அவர்கள் அழைக்கப்பட்டவர்களுடன் இருந்தார்கள். மூன்றாவதாக, அவர்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டார்கள், அவர்கள் வெளியே இருளாகும் என்பதையும் விளக்குகள் தேவை என்பதையும் புரிந்துகொண்டார்கள். நான்காவதாக, அவர்கள் நேரத்தில் சரியான இடத்தில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் ஆயத்தத்தில் தவறிவிட்டார்கள்!
அவர்கள் தேவையான அளவு எண்ணெய் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலேயே அவர்களுக்கு வாசல் மூடப்பட்டது. கடைசி நேரத்தில் எண்ணெயைக் கேட்டாலும், அது போதவில்லை.

செயல்படுத்துங்கள்: 
திட்டமிடுதல், முன்னுரிமை வகுத்தல், மற்றும் சரியான ஆயத்தம் என இல்லாமல் எந்த வேலையும் சரியாக முடிக்க முடியாது. இது செலவினங்களை கட்டுப்படுத்தவும், சரியான நேரத்தில் பணிகளை முடிக்கவும் உதவாது. அதனால், நம்மிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டவைகளுக்கு நாம் நல்ல உக்கிராணக்காரர்களாக இருக்க முடியவில்லை. மத்தேயு 25:14-30யில் காணப்படும் தலந்துகளின் உவமை இதை நமக்குப் புரியவைக்கிறது. ஐந்து தலந்துகள் பெற்றவர் இன்னும் ஐந்து தலந்துகள் சம்பாதித்தார். இரண்டு தலந்துகள் பெற்றவர் இன்னும் இரண்டு சம்பாதித்தார். ஆனால் ஒரு தலந்தை பெற்றவர் தன் பயத்தை காரணமாகக் காட்டி அல்லது இயலாமையினால் அதை புதைத்து வைத்துவிட்டார். சில நேரங்களில் நாமும் இரண்டு மூன்றோடே நின்று விடுகிறோம். 

 நான் திட்டமிடுதல், முன்னுரிமை அளித்தல், ஆயத்தமாகுதல் மற்றும் செயல்படுத்துவதில் ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரனா? 

Rev. Dr. J.N. Manokaran