சங்கீதக்காரன் இவ்வாறாக சொல்லுகிறான்; “எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்” (சங்கீதம் 116 : 11). “All Marketers Are Liars” (எல்லா சந்தைப்படுத்துநரும் பொய்யர்கள்) என்றொரு புத்தகமும் உள்ளது. ஆனால், இது ஒருவேளை அவசரத்திலும் அழுத்தத்திலும் சொல்லப்பட்ட ஒரு வாசகமாகவோ, ஒரு உணர்ச்சிப்பூர்வமான செய்தியாகவோ இருக்கலாம். “அவசரமாகப் பேசுவது பொதுவாகக் கசப்பான மனந்திரும்புதலில் முடிகிறது. நம் ஆவி கலங்கியும் அவசரத்திலும் இருக்கும் போது அமைதியாக இருப்பது மிகச் சிறந்தது; ஏனென்றால் சொல்லாமல் இருப்பதை விட சொல்வது மிகவும் எளிதானது; நாம் சொன்ன வார்த்தைகளுக்காக மனந்திரும்பலாம்; ஆனால் அவற்றால் ஏற்பட்ட தீமையை நாம் திரும்பப் பெற முடியாது” (சி. எச். ஸ்பர்ஜன்).
அதிகமான நம்பிக்கை:
மனிதர்கள் தவறான ஜனங்களையும் அவர்களின் வார்த்தைகளையும் எளிதில் நம்பும் இயல்புடையவர்கள். ஆதாமும் ஏவாளும் சாத்தானை நம்பினர்; ஆனால் பின்னர் அவன் பொய்யன் என்றும், பொய்களின் பிதா என்றும் உணர்ந்தனர் (யோவான் 8:44).
தீர்க்கதரிசி மீகா இவ்வாறாக எச்சரிக்கிறார்: “உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள். உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள்” (மீகா 7:5). கண் மூடித்தனமான நம்பிக்கை பலரையும் ஆபத்து, அழிவு, மரணம் ஆகியவற்றிற்கு நேராக அழைத்துச் சென்றுள்ளது.
உண்மையின்மை:
சிலர் பொய் பேசுவது வழக்கமாகவே கொண்டுள்ளனர்; எனவே அவர்களை நம்ப முடியாது. பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத சூழலிலும், அவர்கள் பொய் சொல்லத் தயங்கமாட்டார்கள். சிலர் தாங்கள் சொல்வது உண்மையென்று நிரூபிக்க, தேவனுடைய நாமத்தையே வீணாகப் பயன்படுத்துகின்றனர். யாக்கோபு தன்னை ஏசாவாக காட்டிக்கொள்ள தேவனுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தினான். ஈசாக்கு, “இவ்வளவு விரைவாக எப்படி வேட்டையாடினாய்? மிருகம் எப்படி கிடைத்தது?” என்று கேட்டபோது, யாக்கோபு, “அதை கர்த்தர் எனக்குக் கொடுத்தார்” என்று சொன்னான்; உண்மையில் அதை ரெபெக்காள் தானே கொடுத்தாள் (ஆதியாகமம் 27:20).
தேவனுடைய சந்நிதி:
பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது; தேவனுடைய சந்நிதியில் நாம் அறிவில்லாதவர்கள்போல் நடந்து கொள்ளாமல், ஆணைகள் செய்து அவற்றை நிறைவேற்றாமல் விடாதபடி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் (பிரசங்கி 5:1).
உறுதி, நம்பிக்கை, துணிச்சலின்மை:
சிலருக்கு தங்களுடைய முடிவுகள், கருத்துகள், சிந்தனைகள், மற்றும் எண்ணங்களில் உறுதியும் நம்பிக்கையும் இல்லை. அதனால், அவர்கள் தாங்களே சொன்ன வார்த்தைகளிலிருந்தே எளிதில் பின்வாங்கி விடுகிறார்கள்.
கர்த்தர் கிருபையுள்ளவர்:
பேதுரு, மரணமட்டும் வந்தாலும் கர்த்தரை மறுக்கமாட்டேன் என்று வாக்களித்தான்; ஆனால் அவன் மூன்றுமுறை கர்த்தரை மறுதலித்தான் (மத்தேயு 26:35). இருந்தாலும், நல்லகர்த்தர் பேதுருவை பொய்யன் என்று தள்ளிவிடவில்லை; மாறாக, மனந்திரும்பவும், சமாதானப்படவும், சகோதரர்களைப் பலப்படுத்தவும் அவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தார்.
நான் அவசரமாக பேசுகின்ற ஒரு நபரா?
Rev. Dr. J.N. Manokaran