ஆத்தும சோர்வு / சிதைவு விளைவிக்கும் வியாதி

ஆசைகள் மற்றும் விருப்பங்களை உடனே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. உடனடி திருப்தி, உடனடி புகழ், உடனடியாக வைரலாகும் வீடியோக்கள் இவையே இளைஞர்களின் முக்கியக் குறிக்கோளாக மாறியுள்ளது. இஸ்ரவேலர்கள் வனாந்தரப் பயணத்தில் இருந்தபோது, தேவன் அவர்களுக்கு பரலோகத்திலிருந்து தூதர்களின் அப்பமாகிய மன்னாவை அளித்தார். ஆனால் அவர்கள் அதில் திருப்தியடையவில்லை (சங்கீதம் 78:25). அடிமைத்தன காலத்தில் அவர்கள் சாப்பிட்ட உணவுகளை நினைவுகூர்ந்து, உடனடியாக மாமிசம் வேண்டும் என்று கேட்டார்கள். சங்கீதக்காரன் அவர்களுடைய கீழ்ப்படியாமைக்கு நான்கு காரணங்களைச் சொல்கிறான்; ஆசை மற்றும் அடங்காத விருப்பங்கள் (சங்கீதம் 106:13–15).

1) மறந்தார்கள்:
தேவன் செய்த செயல்களை அவர்கள் மறந்தார்கள். அவருடைய அன்பான பராமரிப்பு, இரக்கம், அடிமைத்தனத்திலிருந்து அளித்த விடுதலை ஆகியவற்றை நினைவில் கொள்ளவில்லை. எகிப்தின் மீது தேவன் செலுத்திய கொடுந்தண்டனைகள், அடையாளங்கள், அதிசயங்கள் மற்றும் வாதைகளின் நியாயத்தீர்ப்பு மூலம் இந்த விடுதலை என இவை தேவனுடைய மகத்தான வல்லமையின் வெளிப்பாடுகளாக இருந்தன.

2) காத்திருக்கவில்லை:
அவர்கள் எப்போதும் அவசரமாக இருந்தார்கள். அதனால் தேவனுடைய ஆலோசனையை எதிர்பார்க்காமல், தங்களின் எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகள், புரிதல்களையே பின்பற்றினார்கள். பாக்கியவான் துன்மார்க்கரின் ஆலோசனையிலும் நடப்பதில்லை, தன்னுடைய (சுய) ஆலோசனையிலும் நடப்பதில்லை (சங்கீதம் 1:1). மாறாக, மனதைப் புதுப்பித்து, தேவனுடைய இன்பகரமான, உத்தமமான, அவருக்குப் பிரியமான சித்தத்தை உணரச் செய்யும்படி தேவவசனத்தை தியானிப்பான் (ரோமர் 12:2).

3) அளவுக்கு மீறி ஆசைப்பட்டார்கள்:
தூதர்களால் அளிக்கப்பட்ட மன்னா அவர்களுக்கு இருந்தபோதிலும், அதில் அவர்கள் திருப்தியடையவில்லை. மாமிசத்தை வேண்டினர்; அந்த விருப்பம் ஒரு கட்டுப்பாடற்ற, தீவிர ஆசையாக இருந்தது. உண்மையில் அவர்கள் மிகுந்த அவசரத்திலிருந்தால், தங்களுக்கிருந்த மிருகங்களை அறுத்து உணவு சாப்பிட இயன்றதே. ஆனால் அவர்கள் தாம் பட்டினியால் மரிக்கப் போகிறவர்கள்போல (ஏசாவைப் போல) நடந்தார்கள் (ஆதியாகமம் 25:29–34). அதற்கு பதிலாக, அவர்கள் மோசேயுக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்து, கலகம் செய்தார்கள்.

4) தேவனைச் சோதித்தார்கள்:
“வனாந்தரத்தில் தேவன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்த கூடுமோ?” என்று அவர்கள் கேட்டார்கள் (சங்கீதம் 78:19). அவர்களின் வார்த்தைகளும் குரலும் சந்தேகத்தையும், அவிசுவாசத்தையும், தேவனையும் அவருடைய வல்லமையையும் அறியாமையையும் வெளிப்படுத்தின. தேவனால் கூடாதது ஒன்றுமில்லை (லூக்கா 1:37). மனிதனைச் சோதிக்கும் அதிகாரம் தேவனுக்கே உண்டு; ஆனால் தேவனைச் சோதிக்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் இல்லை.

பயங்கரமான விளைவு:
அவர்கள் மாமிசம் வேண்டும் என்று கேட்டார்கள்; தேவன் அதைத் தந்தார். ஆனால் அதோடு அவர்களுடைய ஆத்துமாவில் மெலிவு அல்லது நாசம் விளைவிக்கும் வியாதியும் வந்தது. கெட்ட குமாரன் தான் விரும்பியதைப் பெற்று ஒன்றுமில்லாமல் போனான்;  லோத்தும் அப்படியே; ஏசாவும் விதிவிலக்கல்ல; இறுதியில் அனைவருமே தங்களுடைய வாழ்வை நாசமாக்கிக் கொண்டார்கள்.

நான் கட்டுப்பாடற்ற ஆசைகளுக்கு இடம் கொடுக்கிறேனா? சிந்திப்போம்.‌

Rev. Dr. J.N. Manokaran