சங்கீதகாரன் எழுதுகையில், தேவனுடைய வார்த்தை தூய்மையானதாகவும், பரிசுத்தமானதாகவும் மற்றும் குற்றமற்றதாகவும் இருக்கின்றதென்றும்; அதனால் தான் அதை நேசிப்பதாகவும் கூறுகிறார் (சங்கீதம் 119:140).
பிதாவாகிய தேவனின் வார்த்தை:
வேதாகமம் என்பது பரலோகத்திற்கும் பூமிக்குமான அதிகாரம் உள்ள பிதாவின் வார்த்தையாகும் (ஆதியாகமம் 15:1).
கர்த்தரின் வார்த்தை:
வேதாகமம் என்பது படைத்தவரும், மீட்பவரும், இரட்சகருமான தேவனின் வார்த்தையாகும் (லூக்கா 8:11)
ராஜ்யத்தின் வார்த்தை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜா மற்றும் கர்த்தாதி கர்த்தருமாவார். அவருடைய ராஜ்யம் என்றும் முடிவில்லாதது (மத்தேயு 13:19).
ராஜாவின் வார்த்தைக்கு அதிகாரமும் வல்லமையும் உண்டு (பிரசங்கி 8:4).
இரட்சிப்பின் வார்த்தை:
மனிதகுலத்திற்கு இரட்சிப்பு எனும் மகத்தான செய்தியை தேவனுடைய வார்த்தை அளிக்கின்றது (அப்போஸ்தலர் 13:26).
கிருபையின் வார்த்தை:
அனைவரும் பாவம் செய்துள்ளார்கள்; அவர்கள் தேவனுடைய மகிமையை அடையவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் ஆகும் (ரோமர் 3:23; 6:23).
இருப்பினும், நரகத்திற்கே தகுதியான பாவிகளுக்கு தேவன் அளிக்கும் கிருபையை வேதாகமம் வெளிப்படுத்துகிறது (அப்போஸ்தலர் 14:3).
சுவிசேஷத்தின் வார்த்தை:
மக்கள் மத்தியில் நடைபெறும் செய்திகள், சமூக ஊடக ஒளிபரப்புகள், மற்றும் முடிவில்லாத துயரச் செய்திகள் அனைத்தும் மனதை வருத்தப்படுத்தக்கூடியவை. அனைத்து மனிதருக்கும் உகந்த நல்ல செய்தி, நற்செய்தி என்பதை வேதாகமம் மட்டுமே வழங்குகிறது (அப்போஸ்தலர் 15:7).
விசுவாசத்தின் வார்த்தை:
வேதாகமம் என்பது விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வார்த்தையாகும். அதை கேட்பவர்கள், இரட்சிப்புக்குத் தூண்டும் விசுவாசத்தைப் பெறுகின்றனர் (ரோமர் 10:8).
சிலுவையின் வார்த்தை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் பாவிகளுக்காக பாவமன்னிப்பைப் பெறும் பாதையைக் கண்டடையச் செய்தது; மேலும், அவர்கள் தேவனால் நீதிமான்களாக அறிவிக்கப்படுவதற்கும் வழி வகுத்தது.
அந்த சிலுவை வேதாகமத்தில் அறிவிக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 1:18).
ஒப்புரவாக்கும் வார்த்தை:
வீழ்ச்சியடைந்த மனிதகுலம் ஒரே மத்தியஸ்தரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவனுடன் ஒப்புரவாக்கப்படுகிறது, சமாதானம் பெறுகின்றனர் (2 கொரிந்தியர் 5:19).
சத்திய வார்த்தை:
தேவன் சத்தியம், அவருடைய வார்த்தை சத்தியம், அவருடைய குமாரன் சத்தியம், சபை சத்தியத்தின் தூண். வேதாகமம் ஒரே, முழுமையான, மாறாத நித்திய சத்தியத்தை அறிவிக்கிறது (2 கொரிந்தியர் 6:7).
ஜீவ வார்த்தை:
முறைமையற்றும், குற்றச்செயல்களாலும் நிரம்பிய தலைமுறையின் நடுவிலும், தேவ ஜனங்கள் ஜீவன் கொடுக்கும் வார்த்தையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள் (பிலிப்பியர் 2:16)
கிறிஸ்துவின் வார்த்தை:
வேதாகமம் என்பது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தையாகும் (கொலோசெயர் 3:16).
வல்லமையின் வார்த்தை:
தேவன் தனது வல்லமையுள்ள வார்த்தையால் முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கினார் (எபிரெயர் 1:3).
நான் வேதாகமத்தை முழுமையாக நேசிக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran