மோசேக்கு நியாயப்பிரமாண புத்தகத்தை சுருள்களில் எழுதும்படி தேவன் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 24:3-8). நாசரேத்தின் ஜெப ஆலயத்தில் வைத்து இயேசுவிற்கு ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளைக் கொடுத்தார்கள், அவர் அதைப் படித்து விளக்கினார் (லூக்கா 4:17-21). எத்தியோப்பிய மந்திரி தனது பயணத்தின் போது எருசலேமில் வாங்கியிருந்த ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளைப் படித்துக் கொண்டிருந்தான் (அப்போஸ்தலர். 8:32-33). பிலிப்பு அதை மேலும் விளக்க முடிந்தது, இதனால் அவன் சத்தியத்தை அறிந்து ஆண்டவரின் சீஷனானான்.
பழங்காலத்தில் எழுத்துக்கள் பப்பிரஸ் கண்டுபிடிக்கப்படும் வரை, கால்நடைகளின் தோல்களில் எழுதப்பட்டன, இத்தகைய சுருள்கள் மிகவும் விலையுயர்ந்தவை, ஏனெனில் தோல்களை எழுதக்கூடிய முறையில் தயாரிக்க வேண்டியிருந்தது. திறமையான எழுத்தாளர்கள் மட்டுமே அதில் எழுத முடியும். பெரும்பாலும் அரசர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பணக்காரர்களே இதைப் பெறமுடிந்தது.
தேவ பயம்:
அந்த புனித சுருள்கள், தேவனையும், அவருடைய நியாயப்பிரமாணத்தையும், தேவையான கட்டளைகளையும், மனிதனின் கடமைகளையும் புரிந்துகொள்ள உதவுவதற்காக எழுதப்பட்டன. வேதம், தேவனுக்கு பயப்படுகிற பயத்தை உருவாக்குகிறது, அது ஞானத்தையும் அறிவையும் தருகிறது; மேலும், பாவம், தீமை, மற்றும் பொல்லாப்பிற்கு எதிரான வெறுப்பையும் உருவாக்குகின்றன.
நவீன சுருள்:
இன்றைய திரை உலகில், ஸ்க்ரோலிங் என்பது கணினி திரை, ஐபேட், அல்லது ஸ்மார்ட்போனில் உரையை மேலே, கீழே, இடது, வலதுபுறம் நகர்த்துவதை குறிக்கிறது. திரைகள் மிகுந்தும், மலிவான விலையிலும் கிடைப்பதால், மக்கள் அவற்றிற்கே அடிமையாகி வருகின்றனர்.
வேடிக்கை:
பலரும் வேடிக்கைக்காக ஸ்க்ரோல் செய்கிறார்கள். இது நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்கவில்லை; முற்றிலும் வீணடிக்கிறார்கள். சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, மக்கள் தொலைபேசிகளில் மூழ்கி தங்களை பிஸியாகக் காட்டிக்கொள்ளலாம், ஆனால் இது உண்மையில் பயனற்ற செயல்.
கவர்ச்சிகரமான வதந்திகள்:
சிலர் கேளிக்கையான குட்டிக்கதைகளால் மயங்குகிறார்கள். பலருக்கு கிசுகிசுக்களை ஆர்வத்துடன் கேட்கும் பழக்கம் உள்ளது (நீதிமொழிகள் 18:8). ஆனால், இது மனதுக்கு உணவாகவும், ஆத்துமா வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இல்லை. மாறாக, தேவையற்ற, பிறரை குறைகூறும், தீங்கிழைக்கும் தகவல்களைப் பரப்பும் ஒரு தீங்காகும்.
அற்பமானது:
உருவாக்கப்பட்டும் பரப்பப்படுகின்ற தகவல், அறிவு அல்லது ஞானத்தில் வளர உதவுவதற்குப் பதிலாக, முக்கியத்துவமற்றதும் வீணானதுமானதாக இருக்கிறது.
பயனற்றது:
நோக்கமின்றி, காரணமின்றி திரையை ஸ்க்ரோல் செய்வது, பயனற்றதும் வீணானதுமான செயலாகும். டிஜிட்டல் உலகம் வசதியானதும் நட்புரீதியானதும் ஆகும். ஆனால் அது ஒரு வேலையாள் போல் இருக்க வேண்டும், அதற்கு மனிதன் அடிமையாகக் கூடாது. டிஜிட்டல் மீடியா மனித வாழ்க்கையை ஆளும் நிலைக்கு வந்துவிட்டால், அது முழுமையான மடமைதான்.
நான் வாசிக்கிறேனா, கற்றுக்கொள்கிறேனா, தியானிக்கிறேனா, அல்லது நோக்கமின்றி ஸ்க்ரோல் செய்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran