ஒரு கௌரவமான இருக்கை

பல்லாண்டுகளாக, பல சமூகங்களில் ஏழை, ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற, மற்றும் தாழ்ந்த சாதியினர், தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக்கொள்பவர்களின் முன்பு அமரக்கூட அனுமதி இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் ஒதுங்கி நிற்கும்படி வற்புறுத்தப்பட்டனர். ஆனால், 1 சாமுவேல்  இரண்டாவது அதிகாரம், எட்டாவது வசனத்தில், தேவனின் நீதியான செயல்களைப் பற்றி அன்னாள் பாடினாள்;
“குப்பையிலிருந்து எழும்பச் செய்து ஏழைகளை அவர் தூக்கி விடுகிறார்;
சாம்பல் மேட்டிலிருந்து எளியோரை அவர் உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு அமரச் செய்கிறார்;
மகிமையுள்ள அரியணையை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறும் செய்கிறார்.” இந்த வாக்குறுதி ஆண்டவரால் நிறைவேற்றப்படுகிறது.

பரலோக இடம்:
ஆண்டவரை நம்பிய சீஷர்கள் அவரோடு பரலோக மண்டலங்களில் அமர்ந்திருக்கிறார்கள் (எபேசியர் 2:6). ஒடுக்கப்பட்டவர்களையும், சுரண்டப்பட்டவர்களையும் தேவன் உயர்த்தி, அவர்களைப் பிரபுக்களோடு அமரச் செய்வார் என்று அன்னாள் குறிப்பிட்டார். தேவன் தம்முடைய குமாரனும், இரட்சகரும், ஆண்டவருமாகிய இயேசுவோடு அமர்ந்திருக்கும் சிலாக்கியத்தை அளிக்கிறார். பூமியில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்து பரலோக பகுதிக்கு உயர்த்தப்படுகிறோம்.

பரந்த இடம்:
தேவன் தமது மக்களைக் கொண்டுவரும் இடம் நெருக்கடியானதல்ல, அது ஒரு விசாலமான இடமாகும் (சங்கீதம் 18:19). விசாலமான இடம் என்பது பாதுகாப்பும் உறுதியும் உள்ள ஒரு இடத்தில் இருப்பதாகும். ஆண்டவரைப் பின்பற்றுபவர்களின் மனங்களும் புதுப்பிக்கப்பட்டு, விரிவடைகின்றன (ரோமர் 12:2). அவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவோ, இழிவான எண்ணம் கொண்டவர்களாகவோ இருக்க மாட்டார்கள். எனவே, ஒரு விசுவாசி பெருந்தன்மை உடையவனாக மாறுகிறான். ஆசீர்வாதங்களைச் சேகரித்து வைப்பதற்குப் பதிலாக அல்லது புதைத்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கஞ்சத்தனம் உள்ளவர்கள் அல்ல, மாறாக தேவனின் ஏற்பாடுகளை விநியோகிப்பவர்கள்.

பூரிப்புள்ள இடம்:
தேவன் தமது மக்களை பூரிப்புள்ள இடத்திற்கு கொண்டுவருகிறார் (சங்கீதம் 66:12). அங்கு தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல், நிறைவும் உண்டு. இது வெறும் உலக மற்றும் சரீரத் தேவைகள் மட்டுமல்ல, மன, உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய தேவைகளுக்கும் பொருந்தும். மேலும், தேவன் தமது மக்கள் மீது ஏராளமான அன்பையும், கிருபையையும், இரக்கத்தையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஞானத்தையும் பொழிகிறார்.

மனவருத்தமும் பொறாமையும்:
உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பை இழந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் பாவமெனும் சகதியில் ஆறுதல் கண்டார்கள், மரபு சார்ந்த பழக்கங்களால் மழுங்கடிக்கப்பட்டார்கள், இந்த உலகின் கவர்ச்சிகளால் மயக்கமடைந்தார்கள், செல்வத்தால் வஞ்சிக்கப்பட்டார்கள், நித்திய வாழ்வைவிட இப்போதைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துத் தங்களைத் தாங்களே சபித்துக் கொண்டார்கள். தேவன் அவர்களுக்கு அளித்த வாய்ப்பைத் தவறவிட்டதற்காக அவர்கள் வருத்தப்படுவார்கள். செல்வந்தன் தன் பயனற்ற உலக வாழ்க்கையைப் பற்றி வருந்தினான், ஆனால் அப்போது மனந்திரும்புதலுக்கும் மீட்புக்கும் வாய்ப்பு இருக்கவில்லை (லூக்கா 16:19-31).

நான் கிறிஸ்துவுடன் பரலோக ஆட்சியில் அமர்ந்திருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran