சிலருக்கு அதிகமான வைராக்கியம் இருக்கும்; ஆனால் அவர்கள் கீழ்ப்படிவதில்லை. செய்யக் கூடாதவற்றையும் அளவுக்கு மீறி செய்கிறார்கள். அதற்கான ஒரு உதாரணம் ராஜா சவுல். தேவன் அமலேக்கியர்களுக்கு நீதித்தீர்ப்பு செய்யும்படி கட்டளையிட்டார்; ஆனால் சவுல் அதை முழுமையாக அல்ல, பகுதியளவில் மட்டுமே செய்தான் (I சாமுவேல் 15). கிபியோனியரை தாக்கும்படி தேவன் கட்டளையிடவில்லை; அவர்கள் ஒரு உடன்படிக்கையால் பாதுகாக்கப்பட்டிருந்தனர். இருந்தும் சவுல் அவர்களை அழித்தான் (2 சாமுவேல் 21). தவறான வைராக்கியமும், அரைமனதான கீழ்ப்படிதலும் அல்லது வசதிக்கேற்ப கீழ்ப்படிதலும் ஆபத்தானவை. அதனால் தான் சவுல் தனது ராஜ்யத்தை இழந்தான்.
பரிசுத்த உடன்படிக்கையும் தவறான வைராக்கியமும்:
இஸ்ரவேலரின் தாக்குதலில் இருந்தும் அழிவில் இருந்தும் தப்பிப்பதற்காக, கிபியோனியர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். கிபியோனியர்களின் உயிரைக் காப்பாற்றுவதாக யோசுவா அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்; சுமார் 400 ஆண்டுகள் அந்த உடன்படிக்கை மதிக்கப்பட்டு வந்தது (யோசுவா 9:15). மாம்சத்திற்குரிய ஊக்கத்தினாலோ அல்லது தேசமக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவோ, யோசுவா செய்த உடன்படிக்கையை மீறி, சவுல் அவர்களை முற்றிலுமாக அழித்துப்போட முயன்றார். இவ்வாறு சிந்தப்பட்ட நிரபராதிகளின் இரத்தம் காரணமாக, தாவீதின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேலில் பஞ்சம் ஏற்பட்டது (2 சாமுவேல் 21:1). கிபியோனியரில் எஞ்சியிருந்த ஒரு பகுதியினர், சவுலின் ஏழு மகன்களை மரணதண்டனைக்கு உட்படுத்துமாறு கோரியதால், தாவீது அந்தச் சீரமைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
பரிசுத்த கட்டளையும் கீழ்ப்படியாமையும்:
அமலேக்கியரை முற்றிலும் அழிக்கும்படி தேவன் சவுலை அனுப்பினார். அவர்கள் தேவனுக்கும், அவருடைய நியாயப்பிரமாணத்திற்கும், அவருடைய ஜனங்களுக்கும் விரோதமானவர்கள். சவுல் அவர்களைத் தாக்கினான்; ஆனால் ராஜா ஆகாகையும் சிறந்த மாடுகளையும் உயிரோடு விட்டான். சாமுவேல் அவனை எதிர்கொண்டபோது, “பலியிடுவதற்காக மக்கள் வேண்டியதால் மிருகங்களை விட்டோம்” என்று காரணம் அல்லது சாக்கு போக்கு கூறினான்.
சவுலின் தோல்வி:
யோசுவா கிபியோனியரோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் நிமித்தம், தேவனுடைய பாதுகாப்பின் கீழ் இருந்த கிபியோனியரை சவுல் அரசர் தாக்கினார். இது உடன்படிக்கையின் நீதிக்கு எதிரான ஒரு மீறுதலாகும். அமலேக்கியரை முற்றிலுமாக அழித்துப்போடுமாறு தேவன் கட்டளையிட்டிருந்தார்; ஆனால் சவுலோ அந்த அரசனையும் ஆடுமாடுகளையும் விட்டுவைத்தார். தேவனின் தெய்வீக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் அவர் தவறிவிட்டார். வருந்தத்தக்க வகையில், தேவனின் பாதுகாப்பிற்குரிய மக்களுக்கு அவர் இரக்கம் காட்டவில்லை; மாறாக, நியாயத்தீர்ப்பிற்குத் தகுதியானவர்களுக்கே அவர் இரக்கம் காட்டினார்.
அறிவில்லாத வைராக்கியம்:
அறிவில்லாத வைராக்கியம் குறித்து பவுல் விசுவாசிகளை எச்சரிக்கிறார் (ரோமர் 10:2). ஞானம் இல்லாமல், வெறும் உணர்ச்சிவேகத்தாலோ அல்லது வைராக்கியத்தாலோ உந்தப்படுபவர்கள் இலக்கைத் தவறவிடுவார்கள்; அதாவது, அவர்கள் பாவம் செய்வார்கள் (நீதிமொழிகள் 19:2). ஒரு அரசனாக, சவுல் இஸ்ரவேலின் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்; ஆனால் அவர் அறிந்திருக்கவில்லை.
எனது வைராக்கியம், தேவனுடைய வார்த்தையின் ஞானத்தால் வழிநடத்தப்படுகிறதா?
Rev. Dr. J.N. Manokaran