வார்த்தை, சாட்சி, ஆராதனை

ஒரு இளைஞன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் இருந்தான். கூகுளில் தேடியபோது ஒரு திருச்சபை அவனுக்கு கிடைத்தது. அந்த இடத்திற்கு செல்வற்கு முடிவு செய்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, மனதில் சிறிது தயக்கத்தோடு அவன் அங்கே வந்தான். தன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியவுடன், உள்ளே இருந்து வரும் கூச்சலான இசை அவனுடைய காதில் விழுந்தது. அவன் மெதுவாக நுழைவாயிலுக்கு நடந்துசென்றான். உள்ளே நுழைந்தவுடன், அவன் அதிர்ச்சி அடைந்தான். மேடை முழுவதும் விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தது; மேகம்போல் புகை பரவியிருந்தது. மேடையில் சிலர் பாடியும் ஆடியும் கொண்டிருந்தனர். கூட்டம் முழுவதும் கைத்தட்டி ஆடிக் கொண்டிருந்தது. இசை அதிதீவிரமாக ஒலித்ததால், யாராவது பேசினாலும் அது கேட்கவில்லை. “இது திருச்சபையா? அல்லது கச்சேரிக்கூடமா?” என்ற கேள்வி மனதில் எழுந்தது. அச்சமடைந்த அவன் வெளியேற முயன்றான். ஆனால், அதிர்ஷ்டவசமாக, சில ஊழியர்கள் அவனை வழிநடத்தி ஒரு இருக்கையில் அமரவைத்தனர்.

கிறிஸ்தவ ஐக்கியம்: 
இஸ்ரவேலருக்கு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று சாபாத்தைப் பின்பற்றும்படி தேவன் ஆணையிட்டார். அதைப் போல, தெய்வீகமான கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றாகச் சேர்ந்து தேவனுக்கு மகிமை செலுத்துவதை அலட்சியம் செய்ய மாட்டார்கள் (எபிரெயர் 10:25). ஆரம்பக்கால கிறிஸ்தவர்களின் சந்திப்பிலேயே சீஷர்களின் கூட்டத்தின் சாரம் தெளிவாக வெளிப்படுகிறது (அப்போஸ்தலர் 2:42). சாட்சியம், வசனம், ஆராதனை இந்த மூன்றும் சமமான முக்கியத்துவத்துடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்.

சாட்சி:
மேல் அறையில், ஆண்டவர் தமது சீஷர்களுக்குப் புதிய உடன்படிக்கையை அளித்தார். அதையே நாம் இறுதி இராப்போஜனம் என்று அழைக்கிறோம். ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் அடிக்கடி கூடுகைகளில் அப்பம் பிட்டனர். பவுல் எழுதுகிறதாவது, பரிசுத்த இராப்போஜனத்தை விசுவாசிகள் கொண்டாடுவது ஒரு கட்டளையாகும்; அது அவருடைய பலியை நினைவுகூரவும், அவர் வருகையை எதிர்பார்க்கவும் செய்யப்பட வேண்டும் (1 கொரிந்தியர் 11:27-32). ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில், நற்கருணை (பூசை) ஒவ்வொரு நாளும்  நடத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சத்தியத்தைப் பற்றிய புரிதலும், அதன் தனிப்பட்ட வாழ்வில் தாக்கங்களும் இல்லாத காரணத்தால், அந்த கொண்டாட்டம் வெறும் தினசரி சடங்காக மாறி விட்டது.

வார்த்தையாகிய வசனம்:
புராட்டஸ்டண்ட் இயக்கம் ஆரம்பமானபோது, ஞாயிறு சந்திப்புகளில் மேடையில் சொல்லப்படும் செய்தியே மிக முக்கியமானதாக அமைந்தது. சீர்திருத்தவாதிகள், ஜனங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தேவவசனத்தைப் பிரசங்கிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். பவுல் அறிவுறுத்துகிறதுபோல், சுவிசேஷத்தை அறிவித்தல், அவருடைய வசனத்தை போதித்தல், அதன் சத்தியங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை அவர்களின் முதன்மையான பணியாக இருந்தது (2 தீமோத்தேயு 4:2).

ஆராதனை:
பெந்தேகோஸ்தே இயக்கம், ஆராதனைக்கு சிறப்பாக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. அதாவது பெரும்பாலும் மகிழ்ச்சியோடு பாடுதல், உற்சாகத்துடன் கைத்தட்டுதல், மேலும் தாவீது செய்ததுபோல் ஆடுதலும் அடங்கும். ஆராதனையின் ஓர் அங்கமாக கொடுப்பதும் வலியுறுத்தப்பட்டது (நீதிமொழிகள் 3:9).

ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் வார்த்தை, சாட்சி மற்றும் ஆராதனை சமநிலையில் உள்ளதா? 

Rev. Dr. J.N. Manokaran