Fountain Trust அமைப்பின் நிறுவனர் தாமஸ் ஆலன் ஸ்மைல் (Thomas Allan Smail) அவர்கள் இப்படியாக எழுதுகிறார்; “சாத்தான், இயேசுவின் தேவகுமாரத்துவத்தை சந்தேகப்படுத்தச் செய்ய முயன்றான்; ஆனால் கர்த்தர், தேவவசனத்தின் மூலம் தமது குமாரத்துவத்தை உறுதிப்படுத்தினார்”. சாத்தான் தேவனுடைய மக்களை குற்றம் சாட்டுகிறவன் (வெளிப்படுத்தின விசேஷம் 12:10). கர்த்தர் இயேசு சோதிக்கப்பட்டதுபோல, இயேசுவை ஏற்றுக்கொண்ட சீஷர்களும் மூன்று முக்கிய பகுதிகளில் சோதிக்கப்படுவார்கள் (மத்தேயு 4:1–11; யோவான் 1:12).
1. குமாரத்துவத்தை தவறாக பயன்படுத்துதல் (Presume on Sonship):
சாத்தான், “நீ தேவகுமாரன் என்றால்” எனச் சொல்லி, குமாரத்துவத்தின் உரிமைகள் மற்றும் சலுகைகளைத் தன்னிச்சையாக, தனிப்பட்ட திருப்திக்காக பயன்படுத்தலாம் என கர்த்தரை சோதித்தான். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தமது சொந்த நன்மைக்காக ஒருபோதும் அதிசயங்களைச் செய்யவில்லை.
அவர் செய்த எல்லா அதிசயங்களும்
தேவனுடைய மகிமைக்காக,
தேவ ராஜ்யத்தின் விரிவுக்காக,
மக்களை தேவனுடைய குடும்பத்தில் சேர்ப்பதற்காகவே இருந்தன. இன்றைய நாட்களில், சில செல்வவளம் போதிக்கும் உபதேசகர்கள், “நான் ராஜாதிராஜனும் கர்த்தாதி கர்த்தனும் ஆனவரின் குமாரன்; ஆகவே நான் பேரரசர் போல வாழ்வேன்” என்று சொல்வது மிகவும் வருத்தத்துக்குரியது.
2. குமாரத்துவத்தை கைவிடுதல் (Abandon Sonship):
சாத்தானின் நிரந்தரமான, நிறைவேறாத ஆசை, தேவனுக்குரிய ஆராதனையைத் தன்னிடம் திருப்புவது ஆகும். ஆதாம் மற்றும் ஏவாள் படைக்கப்பட்டபோது, அவர்களை தேவனுடைய கட்டளையைப் புறக்கணிக்கச் செய்து, சாத்தான் அவர்களை வஞ்சித்தான். அதன் விளைவாக, மனிதகுலம் சிலை வழிபாடு, பணம், மற்றும் தற்காலிகமான பொருட்களின் வழியாக, மறைமுகமாக சாத்தானையே வழிபடுவோராக மாறினர். பாவிகளை மீட்கவே தேவகுமாரன் இந்த உலகிற்கு வந்தார். ஆனால் சாத்தான், உலகத்தை மீட்க ஒரு “சுருக்கமான வழி” என்று சொல்லி, “ஒரே முறை, தனிப்பட்ட முறையில் என்னை ஆராதி” என்று கர்த்தருக்கு ஆலோசனை கூறினான். இதே யுக்தியையே இன்று சாத்தான் பயன்படுத்துகிறான். கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தை கைவிட்டு,
உலகிய செல்வம், அதிகாரம், மதிப்பு, புகழ் ஆகியவற்றைப் பெறச் செய்ய விசுவாசிகளைச் சோதித்து வழிதவறச் செய்கிறான்.
3. குமாரத்துவத்தை நிரூபிக்கச் சொல்லுதல் (Prove Sonship):
சாத்தான், கர்த்தரை ஆலயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று,
தாம் தேவகுமாரன், மேசியா என்பதை நிரூபிக்கச் சொல்லி, கீழே குதிக்கும்படி சவால் விட்டான். தேவனுடைய வாக்குத்தத்தப்படி தூதர்கள் தம்மை தாங்குவார்கள் என்ற வாக்குத்தத்தைச் சோதிக்க அப்படி செய்தான். ஆனால் கர்த்தர்,
“கர்த்தராகிய உன் தேவனைச் சோதிக்க வேண்டாம்” என்று தெளிவாகப் பதிலளித்தார். இன்றும், பல சீஷர்கள் சுயநலமான, புத்தியில்லாத அல்லது ஆவிக்குரிய பக்குவமில்லாத விதத்தில் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பயன்படுத்தி, கர்த்தரைச் சோதிப்பது மிகவும் வருத்தத்துக்குரிய உண்மையாக உள்ளது.
கர்த்தர் இயேசு செய்ததுபோல், தேவவசனத்தின் மூலம் நானும் சாத்தானை ஜெயிக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran