மீன் விழுங்குதலும் வெளியேற்றுதலும்

சிலியின் தென்மேற்குப் பகுதியான பாட்டகோனியாவில் உள்ள ஸ்டிரெய்ட் ஆஃப் மேஜலனில், பஹியா எல் அக்விலா பகுதியில், சான் இசித்ரோ ஒளிவிளக்குக் குன்றம் அருகே ஒரு அதிசயமான சம்பவம் நிகழ்ந்தது. அத்ரியான் சிமாங்காஸ் தனது தந்தையான டெல்லுடன் கயாக் சவாரி செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் திடீரென மேலே வந்து, அத்ரியனையும் அவரது மஞ்சள் கயாக்கையும் சில விநாடிகள் முழுவதுமாக விழுங்கியது. பின்னர், அதிர்ஷ்டவசமாக, மீண்டும் அவரை வெளியே தள்ளிவிட்டது. “நான் இறந்து விட்டேன் என்று நினைத்தேன்,” என அத்ரியான் கூறினார் (APnews.com – 14 பிப்ரவரி 2025). வேதாகமத்திலும் இது போல ஒரு சம்பவம் காணப்படுகிறது. தீர்க்கதரிசி யோனாவிற்கும் இப்படி நடந்தது (யோனா 1-4).

பகுதி கீழ்ப்படிதலா?:
அசீரிய பேரரசின் தலைநகரான நினிவே, அந்நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாக இருந்தது. அந்த நகருக்கு சென்று, அவ்விடத்தின் பாவங்களை எதிர்த்து சாட்சியம் பேசுமாறு, தேவன் யோனாவை அழைத்தார். ஆனால் யோனா தயங்கினான். ஏனெனில்; முதலில், நினிவே என்பது பயமுறுத்தும் நகரமாக இருந்தது. இரண்டாவது, அந்தப் பொல்லாத நகரம் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது என்றும், மன்னிக்கப்படக் கூடாது என்றும் யோனா எண்ணினான். மூன்றாவதாக, அவன் செல்ல விரும்பினான், ஆனால் பிரசங்கிக்க விருப்பமில்லை. எனவே, யோனா யோப்பா துறைமுகத்திற்குச் சென்று, தொலைதூரத்தில் உள்ள தர்சீஷுக்கு செல்லும் கப்பலில் ஏறினான். தர்சீஷ் என்பது (இன்றைய ஸ்பெயினுக்கு அருகிலுள்ளது) அந்நாளில் உலகத்தின் முடிவெனக் கருதப்பட்டது.

டிக்கெட் பணம்:
யோனாவிடம் தர்சீஷுக்கான பயணத்திற்கு தேவையான பணம் இருந்தது; அது உயர்ந்த கட்டணம் கொண்ட பயணம். அதனால், தேவன் தர்ஷீசுக்குச் சுற்றுலா செல்ல தனக்குப் பணம் கொடுத்திருப்பதாக அவன் கருதினான்.

வலுவான காற்று: 
பயணம் ஆரம்பித்தவுடன் கடலில் கடும் காற்றும் புயலும் எழுந்தன. பயணிகள் ஒவ்வொருவரும் தத்தமது கடவுளை அழைத்தனர். ஆனால் யோனா மட்டும் தூங்கிக்கொண்டிருந்தான். கப்பலின் கேப்டன் அவனை எழுப்பி, “நீயும் உன் தேவனை அழைத்துக்கொள்!” என்று கூறினார்.

 ஒப்புதல்: 
தேவ பிரசன்னத்திலிருந்து ஓடிப்போனதாலும், தான் செய்த பாவத்தாலும் தான் பலத்த காற்று வீசியதாக யோனா கேப்டனிடம் ஒப்புக்கொண்டான். 

விழுங்குதலும் உமிழ்தலும்:
யோனாவை கடலில் எறிந்ததும், ஒரு பெரிய மீன் அவனை விழுங்கியது. அதில் உள்ளபோதுதான், யோனா தேவனைத் தேடினான்,  மனந்திரும்பினான், ஜெபித்தான். தேவன் அந்த மீனை, யோனாவை நினிவே கரையில் உமிழச் செய்தார். பின்னர் யோனா தேவனின் கட்டளையை முழுமையாகக்கேட்டு நினிவேயில் மனந்திரும்புதலின் செய்தியை அளித்தான். அந்த நகரம் முழுவதும் மூன்று நாட்கள் உபவாசம் இருந்து மனந்திருந்தியது.

யோனாவுக்குக் கீழ்ப்படிதலைக் கற்பிக்க தேவன் ஒரு மீனைப் பயன்படுத்த முடியும் என்பதை நான் புரிந்துகொள்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran