கூப்பிட்ட அழைப்புகள் எதுவும் பலனளிக்கவில்லை. பலமுறை முயற்சி செய்தும், தொடர்பு ஏற்படவில்லை. அவனுடைய நெருங்கிய நண்பர் அவனுடைய தொலைபேசி எண்ணை தடை செய்துவிட்டார். இது அவனை குழப்பமடையச் செய்தது; பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தன. ஆசாப் கூட இப்படிப்பட்ட ஒரு வறண்ட காலத்தைக் கடந்து சென்றார். நம்பிக்கையற்ற நேரங்களில் ஒரு விசுவாசி கேட்கக்கூடிய கேள்விகளையே, அவர் ஆறு வினாக்களாக எழுப்புகிறார் (சங்கீதம் 77:7–9). நம்பிக்கையின்மையிலிருந்து தன்னைத்தானே குணப்படுத்த ஆசாப் இந்தக் கேள்விகளைக் கேட்கிறாரா?
கர்த்தர் விலகி விட்டாரா?
தள்ளப்படுதல் அல்லது கைவிடப்பட்டதுபோல உணர்வது எவருக்கும் வந்துவிடக்கூடிய நிலை. ஜெபங்கள் விடையளிக்கப்படாமல் போனால், சூழ்நிலைகள் நன்மைக்கேற்ப இல்லையென்றால், ஆவிக்குரிய வேதனை கடுமையடைந்தால், தேவனுடைய பரிசுத்தவான்களுக்கு இத்தகைய கேள்விகளை கேட்பது சாதாரணமாகும். ஆனால், "நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்; ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்டேன்" (எபிரெயர் 13:5) என்று தேவன் வாக்களித்திருக்கிறாரே.
கர்த்தர் மீண்டும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
மீட்டெடுப்பு, புதுப்பிப்பு, உயிர்ப்பித்தல் ஆகியவை சாத்தியமா என்பதைப்பற்றி ஆசாப் குழப்பமடைந்தார். ஆசாப்பால் உயிர்த்தெழுதலை உணர முடியவில்லை. தேவன் ஏசேக்கியேலிடம் கேட்டார்: "இந்த உலர்ந்த எலும்புகள் உயிர் பெறுமா?" (எசேக்கியேல் 37:3). அதுபோலவே, தேவனிடத்தில் புதுப்பிப்பு சாத்தியமா என்பதைக் குறித்து ஆசாப் எண்ணினார்.
கர்த்தர் கொண்டிருந்த அன்பு விலகி விட்டதா?
பாபிலோனியர்கள் எருசலேம் நகரத்தை சூறையாடியபோது, தீர்க்கதரிசி எரேமியா அழுதார், புலம்பினார். அந்த பயங்கரமான காலத்திலும், அவர் பரிதாபத்துடன் சொல்லுகிறார்;
"கர்த்தரின் இரக்கங்களுக்கு முடிவில்லை; அவைகள் ஒவ்வொரு காலையிலும் புதியவையாக இருக்கின்றன" (புலம்பல் 3:23). ஆம், எல்லா சூழ்நிலைகளிலும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த நிச்சயமும் உறுதியும் தேவையானது: கர்த்தரின் அன்பு ஒருபோதும் முடிவுக்கு வராது.
கர்த்தர் தந்த வாக்குறுதிகள் முடிவுற்றதா?
தெய்வீக வாக்குறுதிகள் உண்மையானவை; அவை கிறிஸ்து இயேசுவில் எப்போதும் ஆம் என்றும் ஆமென் என்று நிலைத்தவை (2 கொரிந்தியர் 1:20). தேவனுக்கு பொய்யுரைக்க முடியாது, மேலும் அவருக்கு எதுவும் சாத்தியமற்றது என்பது இல்லை (எபிரெயர் 6:18; லூக்கா 1:37). ஆகையால், அவர் கொடுத்த வாக்குறுதிகள் ஒருபோதும் தோல்வியடையாது.
கர்த்தர் கிருபை காட்டுவதை மறந்துவிட்டாரா?
ஒரு தாய்க்கு கூட தன் பாசக் குழந்தையை அல்லது புதிதாக பிறந்த குழந்தையை மறந்துவிட முடியும். ஆனால், "நான் உன்னை மறக்கமாட்டேன்" என்று தேவன் உறுதியாகச் சொல்கிறார் (ஏசாயா 49:15–16). அவர் நம்மை நினைவில் வைத்துள்ளார், நமக்கு ஆசீர்வாதம் அளிப்பார் (சங்கீதம் 115:12–13).
தேவனுடைய பரிசுத்தவான்கள் செய்த அன்பின் சேவைகளை அவர் மறந்து விடுவதில்லை; அவர் நீதியற்றவரும் அல்லர் (எபிரெயர் 6:10). எனவே, தேவன் கிருபையைக் காட்ட மறந்துவிட்டார் என்ற எண்ணம் உண்மையல்ல.
கர்த்தரின் நீடிய பொறுமை கோபமாயிற்றா?
அவருடைய இரக்கம் ஒருபோதும் தவறுவதில்லை (புலம்பல் 3:22–23).
பரிசுத்தமான தேவனாகிய அவர், பாவத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்; பாவத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்; இருப்பினும், பாவியை இரக்கத்துடன் அணுகுகிறவர். தேவன் என்றைக்கும் கோபமாயிருக்கிறவரா?
இல்லை. ஆக, எப்போதும் நமக்கு நல்லதும் பாதுகாப்பானதுமான ஜெபம் இதுதான்; “கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்” (சங்கீதம் 38 :1). ஆம், அவருடைய இரக்கம் கோபத்தைக் கடந்து நிலைத்திருக்கிறது.
மரணத்தின் பள்ளத்தாக்குகளிலும் துயரங்களிலும் நான் அவரை எந்தளவு நம்புகிறேன்? உறுதியாய் நம்புவோம், அவர் அன்பு மாறாதது.
Rev. Dr. J.N. Manokaran