நன்மைக்கான அடையாளம்

நம்புவதற்காக ஒரு அடையாளத்தை கேட்பது சரியா? கிதியோன் நம்பிக்கைக்காக இரண்டு முறை அடையாளம் கேட்டான் (நியாயாதிபதிகள் 6:33-40).
தோமா ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்புவதற்கு ஆதாரம் கோரினான் (யோவான் 20:25). தாவீதும், தேவனுடைய தயவுக்கான ஒரு அடையாளத்தை வேண்டி ஜெபித்தான் (சங்கீதம் 86:11). தாவீது முழு பதிலைப் பிடிவாதமாக கோரவில்லை; ஆனால் ஒரு மனிதன் ஒரு அடையாளத்தைக் கேட்பது போல மனத்தாழ்மையுடன் கேட்டான். சில சந்தர்ப்பங்களில், கர்த்தர் தன் ஜனங்களுக்கு அடையாளம் கேட்க அனுமதிக்கிறார். ஆனால், “நான் உம்மை நம்ப மாட்டேன்” என்று வலியுறுத்தி, அகங்காரத்தோடு ஒரு அடையாளத்தைக் கேட்பது தவறு; அது மூர்க்கத்தனமும் ஆகும். கீழே, தாவீது பெற்ற அடையாளங்களில் சில, பெரிதும் அதிசயமில்லாத போதிலும், நன்மையைக் காட்டும் வகையில் உள்ளன:

ஜெபத்திற்கு பதில்:
தாவீது, தான் பூமியில் இருப்பதாலும், தேவன் பரலோகத்தில் இருப்பதாலும்; “நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்” (சங்கீதம் 86:1) என வேண்டினான்.

பாதுகாப்பு:
கர்த்தர் தாவீதை எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாத்தார். அதிலும் முக்கியமாக, தன் எதிரிகளைப் பின்பற்றாதபடி, பாவத்திலும் தீமையிலும் விழாமல் தாவீதைக் காத்தார். அதனால் அவன் பரிசுத்தமானவனாக இருந்தான்; அது மிக அற்புதமான அடையாளம் (சங்கீதம் 86:2).

அர்ப்பணிப்பு:
கர்த்தர் தன் ஆத்துமாவை உயர்த்தியதினால் தாவீது மகிழ்ந்தான். ஆமாம், ஒரு மனிதன் முழுமையாக கர்த்தரிடம் அர்ப்பணிக்கும் போது, அவர் அந்த நபரை உயர்த்துவதற்கு வழியுண்டாகிறது (சங்கீதம் 86:4). தன் கையே தனக்கு உதவி என்று எண்ணுபவர்களுக்கு கர்த்தர் உதவி செய்யமாட்டார்; ஏனெனில் தன்னம்பிக்கையை உயர்ந்த உதவியாகக் கருதுவது தவறு.

மன்னிப்பு:
பெரும்பாலான மக்கள் மன்னிக்கத் தயங்குபவர்கள்.
சிலர், ஒருவர் பாவத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும்போது மட்டுமே மன்னிக்க விரும்புகிறார்கள்.
மனித மன்னிப்பு பல நேரங்களில் நிபந்தனைக்குட்பட்டது. ஆனால், மனிதரின் பலவீனத்தை நன்கு அறிந்த தேவன் எப்போதும் மன்னிக்கத் தயாரானவர் (சங்கீதம் 86:5).

நம்பிக்கை:
கர்த்தர் தன் ஜெபங்களுக்கு பதிலளிப்பார் என்பதில் தாவீதுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது (சங்கீதம் 86:14).
இத்தகைய நம்பிக்கை, தேவனுடைய தயவின் நல்ல அடையாளமும், ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் பக்குவத்தின் அறிகுறியும் ஆகும்.

அறிவு:
தேவனுடைய மகத்துவத்தையும், அவர் நன்மையையும் உலகுக்கு அறிவிப்பது அற்புதமானது (சங்கீதம் 86:10). கடினமான காலங்களில் தேவனை அனுபவத்தின்மூலம் அறிதல் என்பது அது தேவன் தரும் ஒரு விசேஷ அருளாகும்.

எதிரிகள்:
அகங்காரமும் கொடூரமும் நிறைந்தவர்கள் தாவீதுக்கு எதிராக எழும்பும்போது, அதுவும் ஒரு நற்சின்னமே (சங்கீதம் 86:14). ஏனெனில், அப்படி எழும்பும் சூழலில் தாவீதின் நீதி தெளிவாகத் தெரியவும், தேவன் அவரை நியாயப்படுத்தவும் செய்கிறார்.

என் வாழ்க்கையில் தேவனின் நன்மையையும் தயவையும் நான் உணர்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran