மற்றொருவரை குற்றம் சாட்டுவது எல்லோருக்கும் சாதாரணமானது. சிலர் பெண்களின் உடை, பேச்சு அல்லது பிற காரணங்களால் அவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று கூறி தங்கள் தவறான செயல்களை நியாயப்படுத்துகிறார்கள். இருப்பினும், ஒருவர் தூண்டுதலுக்கு இடங்கொடுத்தாலும், தேவன் அவரை பொறுப்புக்கூறச் செய்கிறார். மேரிபாவின் தண்ணீர், மோசே தூண்டப்பட்டு கோபமடைந்தார். இஸ்ரவேலர்கள் அவர்களது வாழ்க்கையை கஷ்டப்படுத்தினார்கள்; அதனால் அவர் அவசரமாக பேசிச் செயல்பட்டார்; அதன் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டார் (சங்கீதம் 106:32-33).
பொறுப்பு ஏற்றல்:
ஒவ்வொரு மனிதனும் தனது நடத்தை, எதிர்வினை, வார்த்தைகள் மற்றும் மனப்பான்மைக்குப் பொறுப்பானவன். மனிதர்கள் தேவனின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் பொறுப்புள்ளவர்கள். தங்களின் பொருத்தமற்ற நடத்தைக்காக அவர்கள் மற்றவர்கள் மீது பழி சுமத்த முடியாது. ஒவ்வொருவரும் தாங்கள் பரிபூரணமானவர்கள் என்றும் சரியானவர்கள் என்றும் எண்ணி நியாயப்படுத்துகிறார்கள், ஆனால் தேவன் எண்ணங்களை ஆராய்ந்து பார்க்கிறார் (நீதிமொழிகள் 21:2).
தூண்டப்படுதல்:
எல்லா மனிதர்களும் பாவிகள் என்பதால், தேவனுடைய பார்வையில் சரியில்லாத ஒன்றைச் செய்ய மற்றவர்கள் நம்மைத் தூண்டுவதற்கு எப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய பாவப் பொறிகளிலிருந்து தப்பிக்க, யாராலும் அல்லது எந்தச் சூழ்நிலையாலும் தூண்டப்படாமல் இருப்பதற்கான தீர்மானம் அவசியம். பாவத்தால் சபிக்கப்பட்ட உலகில், எந்தச் சூழ்நிலையிலிருந்தும், எந்த நேரத்திலும், யார் மூலமாகவும் தூண்டுதல்கள் வரக்கூடும். ஒரு சீஷன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மயக்கப்படுதல்:
ஒருவரைப் பாவத்திற்கு மயக்குவதற்குச் சாத்தான் பல காரியங்களைப் பயன்படுத்துகிறான். கண்கள் திறக்கப்பட்டு, தேவர்களைப் போல ஆவோம் என்ற பொய்யான வாக்குறுதியைப் பயன்படுத்தி, விலக்கப்பட்ட கனியை உண்ணும்படி ஏவாளை அவன் மயக்கினான் (ஆதியாகமம் 3:5). அவளை மயக்கி, பலியாக்கியதன் மூலம், அவன் முதல் தம்பதியரின் கண்களையும், முழு மனிதகுலத்தின் கண்களையும் குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:4). யோசேப்பு வஞ்சிக்கப்பட மறுத்து, போத்திபாரின் மனைவியை விட்டு ஓடிப்போனான் (ஆதியாகமம் 39:12).
வஞ்சிக்கப்படுதல்:
மற்றவர்கள் முகஸ்துதி, பொய், தவறான சாட்சி ஆகியவற்றைப் பயன்படுத்தியோ அல்லது உண்மைகளை மறைத்தோ வஞ்சித்தாலும், வஞ்சிக்கப்பட்ட நபரே அதற்குப் பொறுப்பாவார். கிபியோனியர்கள் யோசுவாவை வஞ்சித்து, தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க வைத்தார்கள். தேவனுடைய சித்தத்தை ஆராயாமல், அவரிடமிருந்து அறிவும் விவேகமும் பெறாமல், யோசுவா அந்த மனிதர்களை நம்பினான். அவர்களை அழிக்காமல் காப்பாற்றுவதாக தேவனுடைய நாமத்தில் சத்தியம் செய்தான் (யோசுவா 9:14–15). தேவனுடைய வரமாகிய பகுத்தறியும் திறன் அவனிடம் இல்லாததால் அவன் வஞ்சிக்கப்பட்டான். அவன் கர்த்தருடைய ஆலோசனையை நாடாமல், தன் சொந்த புத்தி, அனுபவம் மற்றும் பகுத்தறிவையே சார்ந்திருந்தான்.
நான் தூண்டப்படவோ, மயக்கப்படவோ, வஞ்சிக்கப்படவோ மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறேனா? என் தீர்மானமாக கொண்டுள்ளேனா?
Rev. Dr. J.N. Manokaran