கர்த்தராகிய இயேசுவை நிராகரித்தல்

ஒவ்வொரு தலைமுறையிலும் அதிகமான மக்கள் கர்த்தரையும், நற்செய்தியையும், சத்தியத்தையும் நிராகரிக்கின்றனர். அவரது சொந்த ஊரான நாசரேத் நகரத்திலும் கூட, அவர் நிராகரிக்கப்பட்டார்  (மாற்கு 6:1-6).  

தச்சனிலிருந்து ரபியாக: 
நாசரேத்தில், அந்த நகரத்து மக்கள் அவரை ஒரு தச்சராக அறிவார்கள்; அவர் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக அந்தப் பணியை செய்திருப்பார். அவர் எவ்வாறு வார்த்தைகளிலும் செயல்களிலும் அதிகாரமிக்கவராக மாறினார் என்று அவர்கள் வியந்தார்கள். அவருக்கு முறையான இறையியல் பயிற்சி இல்லை, அல்லது பவுல் கமாலியேலின் கீழ் கல்வி கற்றது போல, ஒரு பிரபல ரபியின் கீழ் பயின்றதுமில்லை என்பதால், அவரை ஒரு ரபியாக அங்கீகரிக்கவில்லை. பேரரசன் ஜூலியனின் கீழ், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். பேரரசன் ஜூலியனிடம் பணியாற்றிய ஒரு தத்துவஞானி கிறிஸ்தவர்களை கேலி செய்தான்; "உங்கள் தச்சரின் மகன் இப்போது என்ன செய்கிறான்?" என்பதாக.. அதற்கு உபத்திரவப்பட்ட கிறிஸ்தவர்கள் புத்திசாலித்தனமாக: "அவர் ஜூலியனுக்காக சவப்பெட்டியை (அடக்கம் செய்யும் பெட்டி) தயாரித்து கொண்டிருக்கிறார்" என பதிலளித்தனர். இந்தியாவில், தச்சர்களை அடிமைச் சாதியினராகக் கருதக்கூடும். ஆனால், உண்மையில் தச்சர்கள் கட்டுமானத்திற்கான சிறந்த கருவிகள். அவர்கள் மரத்தின் தரத்தைக் கண்டறிந்து, அதை பயனுள்ளதாக்க மிகவும் அதிகமான நேரம் செலவிடுகின்றனர். மிகவும் கடினமான மரத்திலிருந்து மிகவும் நேர்த்தியான மரச்சாமான்கள் உருவாகின்றன.

மரியாளின் மகன்:
பொதுவாக இஸ்ரவேலில், ஒருவரை அவரின் தந்தையின் பெயரால் அழைப்பது வழக்கம், மேலும் தாயார் விதவை ஆனபோதுகூட இது தொடரும். ஆனால், நாசரேத்தில், இந்த சொற்றொடரை ஆண்டவரை அவமதித்து, அவரை திருமணத்திற்கு முன்பான பிள்ளை என்று சொல்லி கிண்டலடிக்கவும், மரியாளை கேலி செய்யவும் பயன்படுத்தினர். அவரைக் குறை கூறியவர்கள், ஆண்டவரின் வளர்ப்பு சகோதரர்களையும் சகோதரிகளையும் பற்றியும் கேலி செய்தனர். அவர்கள் அவரை ஒரு சாதாரண மனிதனாக மட்டுமே கருதி, தேவனின் மகனாக ஏற்க மறுத்தார்கள்.

தீர்க்கதரிசிக்கான மரியாதை: 
ஒரு தீர்க்கதரிசி தன் குடும்பத்தினரால், உறவினர்களால், சொந்தக்காரர்களால் மற்றும் அண்டை நாட்டவர்களால் அங்கீகரிக்கப்படமாட்டார் அல்லது மதிப்பளிக்கப்படமாட்டார் என ஆண்டவர் விளக்கமாகக் கூறினார்.

ஆச்சரியம்: 
ஆண்டவர் அவர்களின் நம்பிக்கையின்மையை குறித்து ஆச்சரியப்பட்டார். ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில், அவர் நூற்றுக்கு அதிபதியின் மகத்தான விசுவாசத்தையும், அவரின் அங்கிக்கோட்டையைத் தொடுவதன் மூலம் சுகம் பெற்ற பெண்ணையும், கானானிய ஸ்திரியின் விசுவாசத்தையும் கண்டுப் புகழ்ந்தார் (மத்தேயு 9:20-22; 15:22-28). ஆனால் நாசரேத்தில், மக்களின் நம்பிக்கையின்மையின் காரணமாக, அவர் அங்கே எதுவும் அதிசயங்களைச் செய்யவில்லை.

அவிசுவாசம்:  
இது ஒரு ஆபத்தான பாவம். அவிசுவாசம் என்பது உயிருள்ள உண்மையான தேவனையும், அவருடைய பரிசுத்த வார்த்தையையும் நம்ப மறுப்பதாகும். இன்றும், பலர் தங்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறார்கள், எப்படியென்றால், கிறிஸ்துவை நிராகரிப்பதன் மூலம், வேதாகமத்தை மறுப்பதன் மூலம், சுவிசேஷத்தை ஒழிக்க முயல்வதன் மூலம், அதிசயங்களையும், நேரடி சாட்சி கூறியவர்களையும் மறுப்பதன் மூலம், தேவனுடைய வல்லமையைப் பற்றி சந்தேகிக்கின்றனர். பிசாசு பிடித்ததினால் செவிடாகவும், பேச முடியாமலும் இருந்த பையனின் தந்தை தேவனை நோக்கி; “நான் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றார்.

அவிசுவாசம் என்னை கிறிஸ்துவிடமிருந்தும் நித்திய ஆசீர்வாதங்களிலிருந்தும் விலக்கி வைக்கிறதா?  

Rev. Dr. J.N. Manokaran