தகராறுகளும் விவாகரத்தும்

பல திருமணங்கள் இன்று விவாகரத்தில் முடிவடைகின்றன. சில நேரங்களில் அதன் காரணங்கள் மிகவும் சிறியதும் அற்பமானதும் ஆகும். குஜராத்தில், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது குறித்து ஏற்பட்ட தகராறு காரணமாக 23 ஆண்டுகள் நீண்ட திருமணம் முடிவடைந்ததாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தபோதும், அவர்கள் அடிமைகளாக இருந்தபோது சாப்பிட்ட உணவுகளை நினைத்து ஏங்கினார்கள். சுதந்திரத்தை விட வெங்காயமும் பூண்டும் அவர்களுக்கு முக்கியமானதாக தோன்றியது. “நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்” (எண்ணாகமம் 11:5).

விவாகரத்திற்கான காரணம்:
வேதாகமம் சொல்லுவதாவது, கணவன் மனைவி உறவில் விசுவாசமின்மை / உண்மைத்தன்மை ஏற்பட்டால் விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது (மத்தேயு 5:32). ஆனால் இன்று பல நாடுகளில், பொருந்தாமை, மனநிலை பிரச்சினைகள் மற்றும் பல காரணங்களுக்காக சட்டப்படி விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது.

அசுத்தமாக்கப்படுதல்:
சிலர் தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில், வெங்காயம் அல்லது பூண்டு சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று நினைக்கிறார்கள். சில மதக்குழுக்கள் உணவு ஒரு மனிதனை அசுத்தமாக்கும் என்று கற்பிக்கின்றன.

பரிசுத்தமாக்கப்படுதல்:
அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிச் சொல்லுகிறார்; “அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன” (1 கொரிந்தியர் 7:14). ஒரு விசுவாசி தேவனுடைய பிள்ளை; அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமானாகவும் பரிசுத்தமானவராகவும் ஆக்கப்பட்டவர். அதனால், அவிசுவாசியான துணையும் தேவன் செயல்படுவதற்காக ஒரு வகையில் தனியாகப் பிரிக்கப்பட்டவராக (பரிசுத்தப்படுத்தப்பட்டவராக) இருக்கிறார். அதுபோல பிள்ளைகளும் தேவனுடைய கிருபைக்குள் இருக்கிறார்கள்.
தேவன் பரிசுத்தமானவர். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் உலகினால் அசுத்தமாகப்படுவதில்லை; மாறாக அவர்கள் மற்றவர்களை பரிசுத்த தேவனை நோக்கி வழிநடத்துகிறார்கள்.

வெளிப்புறம் அல்ல, உள்ளம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தது: வாய்மூலம் உடலுக்குள் செல்லும் உணவு மனிதனை அசுத்தமாக்காது. ஆனால் மனிதனுடைய இருதயத்திலிருந்து வரும் தீய சிந்தனைகள், கொலை எண்ணங்கள், மோசடிகள் போன்றவை தான் அவனை அசுத்தமாக்குகின்றன (மாற்கு 7:15).

திருமண உறவுகள்:
திருமண உடன்படிக்கை அன்பை அடிப்படையாகக் கொண்டது என்று வேதாகமம் கற்பிக்கிறது. அது
தியாகமான அன்பு,
மன்னிக்கும் அன்பு,
ஏற்றுக்கொள்ளும் அன்பு,
பரிசுத்தப்படுத்தும் அன்பு. இத்தகைய அன்பின் பலனாக தான் துணையை ஏற்றுக்கொள்வதும், மாற்றங்களுக்கு இடமளிப்பதும் அல்லது சரிசெய்து கொள்வதும் நடைபெறும்.

 எனது உறவுகளில் ஏற்படும் சச்சரவுகளை நான் எவ்வாறு கையாளுகிறேன்? 

Rev. Dr. J.N. Manokaran