விலையேறப்பெற்ற குழந்தைகள்

பாப் பீல் ‘தசாப்தம் தசாப்தமாக (Decade by Decade)’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ஒன்பது வயதில் குழந்தைகள் எவ்வாறு முக்கியமானவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். அவர்கள் அந்த வயதில் வடிவமைக்கப்படுகிறார்கள், பெற்றோர்கள், ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களில் ஞானமாக சரியானவற்றைப் புகுத்த வேண்டும்.

கலங்கிய தாய்:
கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு ஒன்பது வயது பெண் குழந்தை  இருந்தாள். இந்தப் பெண் வளர வளர குறும்புகள் செய்பவளாகவும், கீழ்ப்படியாதவளாகவும், அடங்காதவளாகவும் மாறினாள். கலக்கமடைந்த தாயால் அவளைக் கையாள முடியவில்லை. அக்கம் பக்கத்தினருக்கு மற்றும் அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு  இந்தக் குழந்தை குறும்புக்காரப் பெண் என்று தெரியும். ஒரு பக்கத்து வீட்டுக்காரர், அந்த தாயாரிடம் குழந்தையை ஞாயிறு பள்ளிக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தார். ஞாயிறு பள்ளி என்றால் என்னவென்றே அந்தத் தாய்க்குத் தெரியாது. பின்னர் கிராமத்தில் உள்ள சபையில், குழந்தைகளுக்கான ஞாயிறு பள்ளி வகுப்புகள் நடத்தப்படுவதை அவள் அறிந்துக்கொண்டாள்.  ஒரு ஞாயிற்றுக்கிழமை, அந்த தாய் அவளை சபைக்கு அழைத்துச் சென்று ஞாயிறு பள்ளிக்கு அனுப்பினாள்.

மாற்றம்:
தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று அந்தத் தாய்க்கு உண்மையில் தெரியாது. அவள் முற்றிலும் மாற்றமடைந்தாள். குழந்தை இனி அடங்காதவளாகவோ அல்லது கீழ்ப்படியாதவளாகவோ இல்லை. தாய் மீண்டும் சபைக்குச் சென்று ஆராதனையில் கலந்து கொண்டாள். அவளும் கர்த்தரைப் பின்பற்றுபவளானாள். பின்னர், அந்தப் பெண் வளர்ந்தாள், தாயும் மகளும் பிரசங்கம், கற்பித்தல் மற்றும் ஆலோசனை போன்ற மகத்தான ஊழியத்தைச் செய்தார்கள்.

இயேசு குழந்தைகளை நேசிக்கிறார்:
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றனர் (மத்தேயு 19:13-15). சீஷர்கள் அவர்களைத் தடுத்தனர்; இருப்பினும், கர்த்தர் அவர்களைக் கடிந்துகொண்டார். பிள்ளைகள் தம்மிடம் வரட்டும் என்று அவர் தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி கர்த்தரிடம் கொண்டு வருவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். பெற்றோர்கள் கர்த்தரிடமிருந்து பரிசாக பிள்ளைகளைப் பெறுபவர்கள், மேலும் அவர்கள் குழந்தைகளை தேவ வார்த்தையின் அறிவில் வளர்க்கும் பொறுப்பாளர்கள் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.

 ஞாயிறு பள்ளி: 
சில திருச்சபைகளில் குழந்தைகளுக்கான ஊழியம் (ஞாயிறு பள்ளி) என்பதே இல்லை, மேலும் குழந்தைகளை கர்த்தரிடம் கொண்டு வருவதற்குப் பதிலாக திரும்ப அனுப்பி வைத்த அறியாமையுள்ள சீஷர்களைப் போல இருக்கிறார்கள். உள்ளூர் சபைகளும் போதகர்களும் குழந்தைகளுக்கு ஊழியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் கர்த்தருடைய சீஷர்களாகவும் மாற்றும் ஆற்றல்மிக்க ஊழியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். போதகர்கள் தங்கள் திருச்சபையில் பயனுள்ள ஞாயிறு பள்ளி இல்லாததால் குடும்பங்களைத் தவற விடுகிற சூழ்நிலையும் உருவாகிறது.

குழந்தைகளுக்கு வேதாகமத்தைக் கற்பிக்க வேண்டும் என்பதற்கு நான் முன்னுரிமை அளிக்கிறேனா?  

Rev. Dr. J.N. Manokaran