ஒரு சில சந்தர்ப்பங்களில், கர்த்தர் சீஷர்களை அவர்கள் கொண்டிருக்கும் குறைந்த விசுவாசத்திற்காக கண்டித்தார். பயம், கவலை, மற்றும் சந்தேகம் ஆகியவை விசுவாசத்திற்கு எதிரியானவை என்பதைக் காணலாம் (மத்தேயு 8:26; மத்தேயு 6:30; மத்தேயு 14:31). விசுவாசம் அதிகரிக்க விரும்பினால், ஒருவர் இந்த மூன்று எதிரிகளை வெல்ல வேண்டும். பயம் இல்லாமல் நிலைத்திருப்பது, தேவன் அருள்வாரென்று உறுதியாக நம்பி கவலையின்றி இருப்பது மற்றும் சந்தேகங்களை நீக்கி முழுமையாக அவர்மேல் சார்ந்திருப்பது விசுவாசத்தை வலுப்படுத்தும்.
உண்மையான விசுவாசம்:
விசுவாசம் கடுகு விதையைப் போல சிறியதாக இருந்தாலும், விசுவாசம் உண்மையானது. விசுவாசமில்லாமல் இருப்பதை விட அல்லது விசுவாசமற்றவராக இருப்பதை விட இது சிறந்தது.
சூழ்நிலைகள்:
குறைந்த விசுவாசம் நிலைமைகளைப் பொருத்தே ஏற்படுகிறது. தன்னம்பிக்கையுடன் நடந்திருந்த பேதுரு, இயேசுவை பார்த்தபடி கடலின் மேல் நடந்தார். ஆனால், கொந்தளிக்கும் கடலைக் கவனித்தவுடன், அவர் மூழ்கத் தொடங்கினார். அதேபோல, ஆண்டவராகிய இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனபோது, பேதுரு மறுபடியும் தளர்ந்தார். கோழி இரண்டாவது முறை கூவுவதற்கு முன்பே, அவர் மூன்று முறை கர்த்தரை மறுதலித்தார் (மத்தேயு 26:69-75).
மிகைப்படுத்தல்:
குறைந்த விசுவாசம், எதிர்மறையான சூழ்நிலையையும் எதிரிகளின் பலத்தையும் மிகைப்படுத்தி காட்டுகிறது. பத்து உளவாளிகளும் நிலைமையை மிகைப்படுத்தி, எதிரிகளை பெரிதாக மதிப்பீடு செய்ததால், அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் செல்ல முடியவில்லை.
அடையாளங்கள்:
குறைந்த விசுவாசமுள்ளவர்கள் அடையாளங்களைக் (சிக்னல்கள்) காண விரும்புகிறார்கள். அவர்கள் கூடுதல் உறுதியையும் உத்திரவாதத்தையும் தேடுகிறார்கள். தேவன் நேரடியாகப் பேசினாலும், கிதியோன் ஒரு அடையாளத்தைக் கேட்டான் (நியாயாதிபதிகள் 6:17-18). சில நேரங்களில், தேவன் அடையாளங்களை கொடுக்க கிருபையுள்ளவர். ஆனால், விசுவாசமில்லாதவர்களுக்கும், எதிர்ப்பு கொண்ட பரிசேயர்களுக்கும், ஏரோது போன்ற விசுவாசமற்றவர்களுக்கும் தேவன் அடையாளம் தர மறுத்தார் (மத்தேயு 16:4; லூக்கா 23:8).
பாதுகாப்பானது:
சிறிய விசுவாசம் என்பது பாதுகாப்பான விசுவாசம், ஏனெனில் ஒரு நபர் கர்த்தரை உதவிக்கு அழைக்க அறிந்திருக்கிறார். மேலும் கர்த்தர் அருகில் இருக்கிறார். கர்த்தர் பலவீனமான நாணலை முறிக்காதவர் அல்லது மங்கி எரியும் திரியை அணைப்பதில்லை (ஏசாயா 42:3). குறைந்த விசுவாசமுள்ளவர்கள் ஜெபிப்பதிலும் தேவனைச் சார்ந்திருப்பதிலும் வலிமையானவர்கள்.
கீழ்ப்படிதல்:
குறைந்த விசுவாசமுள்ளவர்கள் கீழ்ப்படிதலுடன் இருப்பார்கள், ஆனால் கர்த்தருடன் நிலைத்திருக்க போராடுவார்கள். பேதுரு கர்த்தரின் அழைப்புக்குச் செவிசாய்த்து, படகில் இருந்து வெளிவந்து நீரின் மீது நடக்கத் தொடங்கினார். ஆனால், கவனம் திசை திரும்பியவுடன், அவர் மூழ்கத் தொடங்கினார். நிலைத்துக் கவனம் செலுத்துவதும், தொடர்ந்து தேவனின் குரலை கேட்பதும், முழுமையான கீழ்ப்படிதலுக்கான முக்கியத்துவமான விசைகள் அல்லது திறவுகோல்கள் என்றே சொல்லலாம். அவை வெற்றிக்கு வழிவகுக்கும்.
சாதனை:
சிறிய நம்பிக்கை பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். பேதுரு சிறிது நம்பிக்கையுடன் தண்ணீரில் நடந்தார். கடுகு விதை அளவு நம்பிக்கையுடன், மலைகள் அகற்றப்படுவது அல்லது மல்பெரி மரங்கள் வேரோடு பிடுங்கி கடலில் நடப்படுவது போன்ற அதிசயங்களை ஒருவர் காணலாம் (மத்தேயு 17:20: 21:21).
நான் சிறிய விசுவாசத்திலிருந்து பக்குவப்பட்ட விசுவாசத்திற்கு வளர்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran