தாவீது, “என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என்று கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறான் (சங்கீதம் 86:11). இது ஆழமான ஆவிக்குரியப் பொருள் கொண்ட முக்கியமான ஜெபமாகும். மனித இருதயம் எளிதில் பிளவுபடக்கூடியது; அது உலகியலான ஆசைகளால் சிதறி, கவலைகளால் திசைமாறி, நம்பிக்கையின்மையால் தளர்ந்து, சந்தேகத்தால் கலங்கிப் போகும். ஆனால் கர்த்தரை முழுமனதுடன் பின்பற்றுவோர், தேவனுடைய சித்தத்தின்படி நடப்போர், உலகத்தில் விசுவாச சாட்சிகளாக வாழ்வோர் “ஒருமுகப்பட்ட இருதயம்” உடையவர்களாக இருப்பார்கள். கர்த்தர் தம் சீஷர்களின் இருதயம் பின்வரும் ஐந்து விசுவாச அடிப்படைகளில் ஒருமுகப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
உயர்ந்த நோக்கம்:
மனிதன் தன் முழு மனதையும் ஒரே நோக்கத்தில் ஒன்றிணைக்கவில்லை என்றால், இலக்கு எட்டப்படாது. சாத்தான் மிகுந்த சூழ்ச்சியுடன் விசுவாசிகளை பலவித நோக்கங்களால் திசைதிருப்பி, தேவன் தீட்டியுள்ள பெரிய நோக்கத்தை தகர்க்க முயல்கிறான். எல்லாவற்றிலும் முதன்மையானதும், மிக அவசரமானதும், முக்கியமானதும் தேவனுடைய ராஜ்யமும், தேவனுடைய நீதியும் ஆகும் (மத்தேயு 6:33).
ஒரு விசுவாசியின் இருதயமும் எண்ணங்களும் இந்த ஒரே தேவ நோக்கத்தில் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
உறுதியான தீர்மானம்:
தானியேல் தன் இருதயத்தில் உறுதி செய்து கொண்டான். அரன்மனையின் உணவினால் தன்னை ஆவிக்குரிய விதத்தில் தீட்டுபடுத்திக் கொள்ளமாட்டேன் என்று (தானியேல் 1:8). அவன் அடிமையாக இருந்தாலும், தன் காலத்தின் பேரரசரான அரசனைப் பற்றிய பயமின்றி தீமைக்கு எதிர்த்து நின்றான்.
துரதிருஷ்டவசமாக, இன்றைய காலத்தில் பெரும்பாலான “புதிய ஆண்டுத் தீர்மானங்கள்” சில நாட்களில் வாடி உதிர்ந்த இலைகளைப் போல சுருங்கி விழுந்துவிடுகின்றன. ஆனால், தேவனுக்காக எடுத்த உறுதி நம்பிக்கையுடனும், நிலைத்த மனதுடனும் இருக்க வேண்டும்.
உள்ளார்ந்த நோக்கங்கள்:
மனிதனுக்கு தன் சிந்தனைகளும் நோக்கங்களும் அனைத்தும் தூய்மையானதும் நலமானதாகவும் தோன்றும். ஆனால், தேவன் மனிதனின் இருதயத்தை ஆராய்ந்து, அதன் உள்ளார்ந்த நோக்கங்களையும் உந்துதல்களையும் விசாரிப்பார் (நீதிமொழிகள் 16:2; 21:2). மனிதர் தமது செயல்களை உயர்ந்த நோக்கங்களாகக் காட்டக்கூடும்; அவர்களின் வார்த்தைகள் தேனைப்போல் இனிமையாக இருக்கக்கூடும். ஆனால், அந்த இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மையான நோக்கத்தை எடைபோட்டு அறிபவர் தேவன் ஒருவரே.
உறுதியான முடிவுகள்:
தெய்வீகமான முடிவுகள் இருதயத்திலேயே எடுக்கப்படுகின்றன. இருதயம் பிளவுபட்டிருந்தால், முடிவெடுக்க முடியாத நிலைக்கும் குழப்பத்திற்கும் ஆளாகிறோம். பலர் வாழ்க்கைப் பாதையின் சந்திப்பில் நின்று, எதைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இஸ்ரவேல் மக்கள் கூட, “யாரை பின்பற்றுவது யெகோவா தேவனையா அல்லது பாகாலையா?” என்று இரு மனதோடு தள்ளாடினர் (1 இராஜாக்கள் 18:21). ஒரே மனதுடன் கர்த்தரை பின்பற்றுவோருக்கே தெளிவான வழியும், சரியான முடிவும் கிடைக்கும்.
உள்ளான அன்பு:
தேவனை நேசிப்பது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் இருக்க வேண்டும் (மத்தேயு 22:37). இந்த முழுமையான அன்புக்கு பெரிய சவாலாக நிற்பது பணம் மற்றும் உலக பந்த பாசங்களும் ஆகும்.
கர்த்தருக்கான அன்பு இவ்வளவு ஆழமானதும் தீவிரமானதுமானதாக இருக்க வேண்டும்; அதற்குப் பொருத்தமாக, கணவன்-மனைவி, பெற்றோர், பிள்ளைகள் உள்ளிட்ட மனித உறவுகளுக்கான அன்பு கூட ஒப்பிடும்போது குறைவாகத் தோன்றும் ; அதாவது வெறுப்பு போலப்பட்டாலும் அதுவே உண்மையான விசுவாசத்தின் அளவாகும் (லூக்கா 14:26).
என் இருதயம் ஒருமுகப்பட்டதா?
Rev. Dr. J.N. Manokaran