ஒரு சிறுமி பிறந்ததிலிருந்தே உடல்நலக் குறைவுடன் இருந்தாள். அவள் தந்தையின் கைகளில் நெருக்கமாகத் தூக்கி வைத்தால் மட்டுமே தூங்குவாள்; சில சமயம் தாயின் கைகளிலும் தூங்குவாள். அந்தச் சிறுமி தன் தலையை தந்தையின் மார்பில் சாய்த்துக் கொள்ள விரும்புவாள். தந்தையின் இதயத் துடிப்பின் மென்மையான ஒலி அவளுக்கு அமைதி, ஆறுதல், நிம்மதி அளித்து தூக்கத்தையும் கொடுத்தது. தந்தையின் தொடுதல், அணைப்பு, அன்பு ஆகியவை அவள் நோயை சமாளிக்க உதவின.
தந்தையின் அன்பு:
தந்தை தன் மகளை இதயத்துக்கு அருகில் அணைத்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தினார். வேதாகமம் கற்பிக்கிறது; தேவன் முதலில் நம்மை அன்புகூர்ந்தார். மனிதர்கள் பாவத்தில் விழுந்தவர்கள்; தேவனுடைய அன்புக்குத் தகுதியில்லாதவர்கள்; தண்டனைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உரியவர்கள். இருந்தாலும், தேவன் தன் அன்பை தம் பிள்ளைகள்மேல் பொழிகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது போல, தேவனுடைய அன்பு நீளமும் அகலமும் உயரமும் ஆழமும் கொண்டது; அது அளவிட முடியாதது.
தந்தையின் பிரசன்னம்:
ஒரு குழந்தைக்கு தந்தை அருகில் இருக்கிறார் என்ற நம்பிக்கை தேவை. அதுபோல, பரலோகத் தந்தையின் மார்பில் இருப்பது என்றால், அவருடைய பரிசுத்தமும் மகிமையுமான சந்நிதியால் நிரம்பி இருப்பதாகும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் அருகில் இருக்கும்போது அன்பும், சூடும், ஆறுதலும் அனுபவிக்கிறார்கள்.
தந்தையின் பாதுகாப்பு:
அந்தச் சிறுமி தந்தையின் கைகளில் பாதுகாப்பாக உணர்ந்தாள். அங்கே இருந்தால் தீங்கு எளிதில் அணுக முடியாது. அதுபோலவே, தேவனுடைய ஆடுகளில் ஒருவரையும் தந்தையின் கையிலிருந்து யாரும் பறிக்க முடியாது (யோவான் 10:28). வானத்திலும் பூமியிலும் எந்த அதிகாரமும் எந்த மனிதரும் அவருடைய ஆடுகளை அவருடைய கையிலிருந்து பறிக்க முடியாது. அப்படிச் செய்ய முயற்சிப்பது வீண் முயற்சியாகும்.
தந்தையின் நோக்கம்:
தந்தையின் கைகளில் இருக்கும் அந்தச் சிறுமி வளர்ந்து, முதிர்ச்சி பெற்று, தந்தையின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவாள். அதுபோல, தேவபிதாவின் அணைப்பில் ஓய்வு எடுக்கும் தேவனுடைய பிள்ளை, அவருடைய இதயத் துடிப்பை அறிந்து கொள்வார். வேர்ல்ட் விஷனின் நிறுவனர் ராபர்ட் பியர்ஸ் கூறினார்;
“தேவனுடைய இருதயத்தை உடைக்கும் விஷயங்களால் என் இதயமும் உடையட்டும்”. தேவன் தம் பிள்ளைகளை அன்புகூருவதோடு மட்டுமல்லாமல், தமது சிந்தனை, பாரம், வேதனை, உலகுக்கான இரக்கம் மற்றும் ஆர்வத்தை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு சீஷனும் தேவனுடைய நீதிக்கான கருவியாகப் பயன்படலாம் (ரோமர் 6:13).
நான் தேவனுடைய இருதயத் துடிப்பையும், அவருடைய இருதயத்தின் விருப்பத்தையும் கேட்டு உணருகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran