டெனிம் உடை ஞாயிறு


ஒரு சிறப்பு ஞாயிற்றுக்கிழமைக்கு அனைத்து உறுப்பினர்களும் டெனிம் (பிராண்ட்)  உடைகளுடன் வர வேண்டும் என்று ஒரு திருச்சபை அறிவித்தது.  டெனிம் புடவைகள், டெனிம் வேட்டிகள், டெனிம் சல்வார்கள் உள்ளனவா என்று சிலர் ஆச்சரியப்பட்டனர்.   இந்தியாவில் பணக்கார உயர் வகுப்பினர் பெரும்பாலும் டெனிம் அணிகிறார்கள்.   கடந்த காலங்களில், சில திருச்சபைகள் தங்கள் உறுப்பினர்களை வெள்ளை ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தியது.  ஆனால் மனிதகுலத்தை மீட்க தேவ குமாரன் தன்னை ஏழைக் கோலமெடுத்தார் என்பதை மறந்தனரோ. 

திருச்சபை:  
திருச்சபை ஏழை மற்றும் பணக்காரர் என அனைவருக்குமான இடம். “பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு” (யாக்கோபு 2:2-3) என்று சொன்னால் அது சரியா?. ஒரு திருச்சபை டெனிம் உடை அணிந்தவர்களை மட்டுமே அழைத்தால், அது ஏழைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது மற்றும் ஊழியங்களில் கலந்துகொள்வதிலிருந்து அவர்களை மனந்தளர செய்கிறது.

தொட்டில்:  
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏழையாகப் பிறந்து, சொந்த ஊரில் உறவினர்களால் நிராகரிக்கப்பட்டு, மாட்டுத் தொழுவத்தில், துணிகளால் பொதிந்து வைத்திருந்தனர் (லூக்கா 2:7). சில மொழிபெயர்ப்புகள் அந்த துணிகளைக் குறித்து அவை கோடு கோடான ஆடைகள் அல்லது கடினமான துணி என்றும் குறிப்பிடுகின்றன.   ஒருவேளை,  யோசேப்பும் மரியாளும் டெனிம் உடையில் இருக்கவில்லை போலும், அதுதான் விடுதிக்காரர் புறக்கணித்தார்.

சிலுவை:  
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆடைகளை களைந்து நிர்வாணமாக சிலுவையில் அறையப்பட்டார் (யோவான் 19:23-24). வருத்தம் என்னவெனில், பணிவாகவும், எளிமையாகவும், பதினெட்டு வருடங்கள் தச்சராக கடினமாக உழைத்த ஆண்டவரை ஆராதிப்பவர்கள், ஆடம்பரமான வாழ்க்கையையும் செழிப்பையும் நம்புகிறார்களே.  சிலுவை, குறிப்பாக எஜமானரைப் பின்பற்றி சிலுவையை எடுத்துக்கொள்வது என்பது, அவர்களின் நோக்கத்திலும் புரிதலிலும் இல்லை. 

நெருக்கடி:  
பணக்கார இளைஞன் தனது பரம்பரை, செல்வாக்கு மற்றும் உடைமை ஆகியவற்றில் பெரும் சாதனைகளை செய்ததற்காக மெச்சத்தக்கவர்.  ஆனாலும், அவன் நித்திய ஜீவனைத் தேடி, சரியான கேள்வியுடன் ஜீவனுள்ள தேவனிடம் வந்தான். அவனது மனதில் குழப்பம் மற்றும் அவனது வாழ்க்கையில் நெருக்கடி, செல்வம், ஆடம்பரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் மீதான ஈர்ப்பு ஆகியவற்றை கர்த்தராகிய ஆண்டவர் புரிந்துகொண்டார்.  சிலுவையை எடுத்துக்கொள்வதற்கான அழைப்பில், சொத்து  சுகங்களை விட்டு, சிலுவையை எடுத்துக் கொள்ள முடியாமல் சோகத்துடன் வெளியேறினான். 

இந்த கிறிஸ்துமஸில் எளிமையையும் சிலுவையையும் நான் தெரிந்தெடுக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran