தேவன், மண்பாண்டங்களைப் பயன்படுத்தி எரேமியாவுக்கு இரண்டு செய்திகளைக் கொடுத்தார். முதலில், அவர் ஒரு குயவனின் வீட்டிற்கு சென்று அவன் செயலைக் கவனிக்கும்படி கட்டளையிட்டார். இரண்டாவது, உடைக்கப்பட்ட மண் பானையின் மூலம் ஒரு செய்தி கொடுக்கப்பட்டது (எரேமியா 18:1-11; 19:10-11). ஈரமான மண் திருத்தப்படக்கூடியது; அது மீண்டும் வடிவமைக்கப்படலாம். ஆனால் உடைந்த பானை மீண்டும் பழுது பார்க்க முடியாது அல்லது புதுப்பிக்க முடியாது. மனந்திரும்புதல் இல்லையெனில், மீட்பு இல்லை.
குயவன்:
தேவன் ஒரு குயவன். அவர் மணலைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, சரியான விகிதத்தில் தண்ணீர் சேர்த்து அதைக் களிமண்ணாக மாற்றி, பின்னர் தாம் விரும்பும் ஒரு பாத்திரத்தில் அதை உருவாக்குகிறார். சில சமயங்களில், முதல் முயற்சியிலேயே களிமண் சரியான வடிவத்திற்கு வராது. குயவன் பலமுறை, பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் முயற்சி செய்யலாம்.
களிமண்:
யூதா தேசம் களிமண்ணைப் போல இருந்தது, மேலும் தேவன் அவர்களைத் தம்முடைய மக்களாகவும், உலகத்திற்கான தம்முடைய தூதர்களாகவும், உலகத்திற்கான வேத போதகர்களாகவும் உருவாக்கிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவில்லை. மீண்டும் மீண்டும், அவர்கள் தோல்வியடைந்தனர். தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலம், விக்கிரக ஆராதனை, வழிதவறுதல் மற்றும் தம்முடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றிலிருந்து மனந்திரும்புவதற்கு கர்த்தர் அந்த தேசத்திற்கு மற்றொரு வாய்ப்பைக் கொடுத்தார். அந்த தேசம் மனந்திரும்பத் தவறியது, மேலும் தேவன் அந்த தேசத்தின் மீது நியாயத்தீர்ப்பை அறிவித்தார்.
உடைந்த பானை:
தேவன் எரேமியாவை ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு சில சாட்சிகளின் முன் அதை உடைக்கும்படி கட்டளையிட்டார். அது பென்-ஹின்னோம் பள்ளத்தாக்கில் நடந்தது. டோபெத் என்ற இடத்தில், குழந்தைகள் பலியிடப்பட்ட அந்த அருவருப்பான இடத்தில், எரேமியா அந்த பானையை நொறுக்கினார் (உபாகமம் 12:31).
நியாயத்தீர்ப்பு:
குழந்தை பலி செலுத்தப்பட்ட அந்த இடம், மரித்தோர் நிறைந்த ‘படுகொலைப் பள்ளத்தாக்காக’ மாறும். உடைந்த குடுவையை மீண்டும் சரிசெய்யவோ, பழுதுபார்க்கவோ, அல்லது வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ முடியாது. அது பல துண்டுகளாக உடைந்து, மீண்டும் ஒன்றாகச் சேர்க்கப்படாமல், தூக்கி எறியப்படுகிறது. தேசத்தின் தொடர்ச்சியான பின்வாங்குதலுக்காகவும், கலகத்தனமான கீழ்ப்படியாமைக்காகவும், தேவன் அவர்களை ஒரு களிமண் குடுவையைப் போல உடைப்பார் என்பதே அந்தச் செய்தி தெளிவாக இருந்தது. யூதா தேசத்திடம் மனந்திரும்புதல் இல்லாததால், கிருபையின் காலம் முடிந்துவிட்டது, நியாயத்தீர்ப்பு மட்டுமே ஒரே வழியாக இருந்தது. பரிசுத்த தேவன் தமது நீதியின்படி, எந்தவொரு தேசத்தையும், யாரையும் தண்டித்து நியாயந்தீர்ப்பார். தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள்கூட அவருடைய நியாயத்தீர்ப்புகளிலிருந்து தப்ப முடியாது.
நான் தேவனுடைய எச்சரிக்கைகளுக்கு செவி சாய்த்து மனந்திரும்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran