வெறும் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதிலும், அர்த்தமில்லாத சொற்களிலும், உதடுகளால் மட்டும் செய்யப்படும் ஆராதனையிலும் தேவன் பிரியமடைவதில்லை (மத்தேயு 6:7). ஜனங்கள் சொன்ன வார்த்தைகளும், அவர்கள் செலுத்திய பலிகளும் தேவனைச் சலிப்படையச் செய்ததாக வேதாகமம் கூறுகிறது; தேவன் சோர்வடைவதில்லை என்றாலும், அவர்களின் இருதயமற்ற ஆராதனை அவருக்கு அருவருப்பாயிற்று. ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களின் கடின இருதயத்தைக் கண்டித்து உரைத்தார்; அது இன்றைய சபைக்கும் பொருந்துகிறது (ஏசாயா 43:22-24).
என்னை நோக்கிக் கூப்பிடவில்லை:
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிடவில்லை. அவர்கள் பாடல்கள், பலிகள், ஆராதனைகள் அனைத்தும் வெறும் பழக்கமாகவும், இயந்திரமயமான செயலாகவும் இருந்தன; அதில் இருதயப் பங்கேற்பு இல்லை. உண்மையில், அர்த்தமில்லாத உதட்டு ஜெபங்கள் கூரையைக் கூட எட்டாது. ஏசாயா இஸ்ரவேலை மட்டுமல்ல, தீர்க்கதரிசனமாக சபையையும் எச்சரிக்கிறார்.
கடவுளைக் கண்டு சோர்வடைந்த இஸ்ரவேல்:
இஸ்ரவேல் தேசம் தேவனைப் பற்றியே சோர்வடைந்து விட்டதாகவும், களைப்படைந்துவிட்டதாகவும் ஆண்டவர் அவர்களைக் குற்றம் சாட்டினார். அவர்கள் ஆண்டவரை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், முழு பலத்தோடும் சேவிக்கவில்லை. அவர்களுக்கு தேவன் ஒரு சுமையாகத் தோன்றினார்; அவருடைய நியாயப்பிரமாணம் ஒரு சுமையாக இருந்தது; பலிகள், ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் என அனைத்தும் அவர்களுக்குச் சுமைகளாகவே அமைந்தன. தேவ அன்பு, அழைப்பு, அக்கறை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அறியாதவர்கள், ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். உண்மையில், சோர்வடைந்தவர்களையும், பாரம் சுமப்பவர்களையும் தம்மிடம் வரும்படியும், இளைப்பாறுதலையும் போதனையையும் பெற்றுக்கொள்ளும்படியும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அழைக்கிறார் (மத்தேயு 11:28).
தூபத்தால் ஏற்பட்ட சோர்வு:
பலிகள் ஆண்டவருக்கு நறுமணம் வீசும் சுகந்த வாசனையாக அமைவதற்குப் பதிலாக, அவை சோர்வை அல்லது குமட்டலை ஏற்படுத்தும் துர்நாற்றமாக மாறிவிட்டன . நோவா செலுத்திய பலி ஆண்டவருக்கு ஒரு சுகந்த வாசனையுள்ள காணிக்கையாக அமைந்தது (ஆதியாகமம் 8:21). பிலிப்பி நகரத்திலிருந்த விசுவாசிகள் தாராளமாக அளித்த காணிக்கைகள், ஆண்டவருக்கு ஒரு சுகந்த வாசனையாக அமைந்தன.
பாவங்களாலும் அக்கிரமங்களாலும் சோர்வுற்ற நிலை:
இஸ்ரவேலர் தங்கள் இருதயத்திலும் மனதிலும் பரிசுத்தத்தோடு அவருடைய சந்நிதிக்கு வரவில்லை. பாவங்களும் அக்கிரமங்களும் கர்த்தரோடு அவர்களுக்குள்ள உறவுக்குத் தடையாக இருந்தன. மனந்திரும்புதல் இல்லாத காணிக்கைகளும் பலிகளும் தேவனுக்குப் பிரியமானவையல்ல; இத்தகைய தகுதியற்ற ஆவிக்குரிய தன்மையை அவர் புறக்கணிக்கிறார். விசுவாசிகள் அவருடைய சந்நிதிக்கு வரும்போது, அவர்களின் உள்நோக்கங்களை தேவன் உற்றுநோக்குகிறார்.
தேவனைப் பிரியப்படுத்தும் துதிகள்:
தாவீது தன் கைகளை உயர்த்தித் துதிக்கிறார்; அவருடைய ஜெபங்கள், மாலைநேரப் பலியைப் போலவே, நறுமண தூபமாக இருக்கின்றன என்று கூறுகிறார். “என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது” (சங்கீதம் 141 : 2).
என்னுடைய அன்றாட ஆராதனை கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கிறதா?
Rev. Dr. J.N. Manokaran