பயனற்ற விஷயங்களிலிருந்து விலகுங்கள்

ஒரு நபர் வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தபோது, ஓட்டும் இடையே செல்ஃபி எடுக்க விரும்பினார். அந்த முயற்சியில், அவர் ஒரு மரத்தில் மோதி, துயரமாக உயிரிழந்தார். ஒரு செல்ஃபியைவிட, அவரது உயிர் எவ்வளவோ மதிப்புமிக்கது. சங்கீதக்காரன் இவ்வாறாக கூறுகிறான்; “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்” (சங்கீதம் 119:37). துரதிருஷ்டவசமாக, பலர் சில விஷயங்களை மதிப்புமிக்கவையாக எண்ணுகிறார்கள்; ஆனால் அவை உண்மையில் வீணானவை.
விசுவாசிகளுக்கு, மதிப்புள்ளதும் வீணானதும் எது என்பதை வேறுபடுத்தும் அறிவு இன்றியமையாதது.

நல்லதல்லாதவை:
மனிதரின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அல்லது உலகியலான முன்னேற்றத்திற்கோ எதுவும் கொடுக்காதவை தான் நல்லதல்லாதவை. ஒரு நபர், பல மணி நேரங்கள் செல்போனில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளைப் பார்ப்பதில் முழுமையாக ஈடுபட்டு இருப்பாரெனில், அவர் உடல், மனம், உணர்ச்சி மற்றும் பொருளாதார வாழ்வில் ஒருபோதும் முன்னேற முடியாது. அவர் வேலையாக இருப்பவர் போல் தெரிந்தாலும், உண்மையில் சோம்பேறி;
மதிப்பில்லாதவற்றை மௌனமாக நுகரும் ஒரு செயலற்ற நுகர்வோன் மட்டும்தான்.

நித்தியமல்லாதவை:
நிச்சயமாக, மதிப்பில்லாதவை தற்காலிகமானவை, அழிவதற்குரியவை, நித்தியமல்லாதவை. அழகு, செல்வம், புகழ், அதிகாரம் எல்லாம் மங்கி மறைந்துவிடும். நித்தியத்தில் நிலைப்பது எல்லாம் தெய்வீக உறவுகளும், அவரது வார்த்தையைத் தியானிப்பதும்,
அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதுமே மட்டுமே ஆகும் (1 யோவான் 2:17).

பலனளிக்காதவை:
1 கொரிந்தியர் 6:12 ல், “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்” என்பதாக பவுல் எழுதுகிறார். கிறிஸ்துவ வாழ்வில் வளர்ச்சியடைய விரும்பும் ஒருவர்,
விசுவாசத்தை வளர்க்காததும், பலனளிக்காததும் எது என்பதை விவேகத்துடன் அறிந்துகொள்ள வேண்டும். பயனற்ற மற்றும் தேவையற்ற விஷயங்களால் தாக்கப்படும் போது,
அவர்கள் ஆவிக்குரிய தளர்வுக்கு ஆளாகி, மோசமாக தோல்வியடைய வாய்ப்புள்ளது.

ஆவிக்கான வளர்ச்சி இல்லாதவை:
மதிப்பில்லாதவை என்பது, ஒரு விசுவாசியின் ஆவிக்கான வளர்ச்சிக்கு உதவாதவை. எந்த ஒரு பொருள், செயல், அல்லது உறவிலும்,
தேவ அன்பின் வளர்ச்சிக்கு உதவவில்லை என்றால்,
அது விசுவாசத்தை அதிகரிக்கவில்லை என்றால், கர்த்தர் மீதான நித்திய நம்பிக்கையின் மீது நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்தவில்லை என்றால், அது மதிப்பில்லாதது, வீணானது.

தவறானதிற்கு திசைதிருப்புபவை:
நேர்மையான பாதையிலிருந்தும்,
பரிசுத்தமான வாழ்விலிருந்தும்,
தேவ ராஜ்யத்தின் முக்கியமான முன்னுரிமைகளிலிருந்தும்
திசைதிருப்பும் அனைத்தும் மதிப்பில்லாதவையாகும்.

தகுதியானது எது?:
எல்லா மதிப்பும், மாட்சியும், மகிமையும் பெறத் தகுதியானவர் தேவன் ஒருவரே 
(சங்கீதம் 145:3; வெளிப்படுத்தல் 4:11). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய அன்புக்குத் தகுதியானவர்.
ஒரு சீஷன், அவருக்காக தம் உயிரையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நான் கர்த்தராகிய இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்க்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran