எண்ணங்களின் பலன்

‘உண்ணும் உணவே நீங்கள்’ என்று பழமொழி ஒன்று இருக்கிறது.  சாப்பிடுவதிலிருந்து உற்பத்தியாகும் சக்தியை மனித உடல்கள் பயன்படுத்துகின்றன. இந்தப் பழமொழி ஓரளவு மட்டுமே உண்மை. கர்த்தர் கற்பித்தபடி, வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும் (மாற்கு 7:15-16). ஒருவர் என்ன சாப்பிடுகிறார் என்பது ஒரு மனிதனை வரையறுக்காது, ஆனால் ஒரு மனிதன் என்ன நினைக்கிறான் என்பதுதான் முக்கியம் (நீதிமொழிகள் 23:7). தீர்க்கதரிசி எரேமியா மூலம் கர்த்தர் பேசினார்; “பூமியின் ஜனங்களே, யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன். ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள். அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள். அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்” (எரேமியா 6:19). ஆம், மக்களின் எண்ணங்கள் அவர்கள் மீது துன்பத்தை அல்லது பேரழிவையே கொண்டு வருகின்றது.

வீணான எண்ணங்கள்: 
புறஜாதியினர் தங்கள் வீணான எண்ணங்களின்படி நடக்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 5:17). வேதாகம அறிஞர் ஆடம் கிளார்க் எழுதுகிறார், பயனற்ற மனம் பாக்கஸ் (கிரேக்கப் புராணக்கதையில் வரும் திராட்சரசத்தின் கடவுளான டயோனிசஸ், பின்பு ரோமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டான், அவர்கள் அவனுக்கு பேக்கஸ் என்று மறுபெயர் சூட்டினர்) கடவுளுக்கு பக்தி செலுத்தும் ஒரு சடங்கோடு இணைக்கப்பட்டது, அதில் குடிப்பழக்கம் மற்றும் விருந்துகளுடன் வழிபாடு அடங்கும். பக்தர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல நடந்து கொண்டனர், தலைகளை தோளில் இருந்து தோளுக்குத் தூக்கி, பைத்தியம் பிடித்தது போலவும், பயனற்றவர்கள் போலவும், முட்டாள்களாகவும் நடந்தனர்.

விபச்சார எண்ணங்கள்: 
கர்த்தர் விபச்சார எண்ணங்களுக்கு எதிராக எச்சரித்தார். ஒரு ஆண் ஒரு பெண்ணை தீய நோக்கத்துடன் பார்த்தாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான் (மத்தேயு 5:27-28). அனைத்து வகையான கற்பனை, மோசமான கனவு மற்றும் ஆபாசப் படங்கள் எல்லாம் பாவங்களே.

பெருமையான எண்ணங்கள்: 
மக்கள் தங்களைப் பற்றி உயர்வாக நினைக்கிறார்கள், விசுவாசிகள் உட்பட. இத்தகைய பெருமையான எண்ணங்களுக்கு எதிராக பவுல் எச்சரிக்கிறார். “உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்” (ரோமர் 12:3) என்கிறார் பவுல். 

உயர்ந்த எண்ணங்கள்: 
“தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம்” (2 கொரிந்தியர் 10:5) என்பதாக பவுல் எழுதுகிறார். இவை அறிவுஜீவிகள், தத்துவஞானிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களின் கலகத்தனமான எண்ணங்கள் ஆகும். அவர்களிடையே ஒரு விஷயம் பொதுவானது: அவர்கள் சத்தியத்தை அன்றாட வாழ்விற்காக மாற்றியுள்ளனர் (ரோமர் 1:25). 

பரிசுத்த எண்ணங்கள்: 
புதுப்பிக்கப்பட்ட மனதைக் கொண்ட ஒரு சீஷனால் எது சரியோ, எது மரியாதைக்குரியதோ, எது நீதியானதோ, எது நியாயமானதோ, எது தூய்மையானதோ, எது அழகானதோ, எது பாராட்டுக்குரியதோ, எது சிறப்பானதோ, எது தேவனுக்கு விருப்பமானதோ அதை சிந்திக்க முடியும் (ரோமர் 12:2; பிலிப்பியர் 4:8).

என் எண்ணங்கள் பரிசுத்தமானவையா, அவருடைய மகிமைக்காகப் பலன் தருபவையா? 
 

Rev. Dr. J.N. Manokaran