ஜீவன் தந்த நல்ல மேய்ப்பர்

நல்ல மேப்பன் ஆடுகளுக்காய்
ஜீவனைக் கொடுக்கிறார் என்றபடி,
பாதை தவறி ஓடிய ஆட்டுக்குட்டியான
பாவியெனை மீட்டெடுக்க,
பாரச் சிலுவையிலே குற்றுயிராய்த் தொங்கி,
பரிசுத்த இரத்தம் சிந்தி மரித்தீர்.

ஆடுகளுக்காய் ஜீவன் தந்த
அன்பரே,  அற்புதரே ஸ்தோத்திரம்!
உனதரான ஒப்பற்ற தெய்வமே!
உயிர்த்தெழுந்தீர் என்னை நீதிமானாக்க!
இன்றும் அதிசயமாய் நடத்துகின்றீர்
இவ்வுலகில் என் வாழ்வை!

இயேசுவே! நீரே எந்தன் மேய்ப்பர்.
இதயம் ஏற்ற நல் மேய்ப்பர்!
பசும்புற் தரையில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீரன்டை நடத்துகின்றீர்.
ஆத்துமாவைத் தேற்றுகிறீர் 
அமைதியானது என் நெஞ்சம்!

உமது கைக்கோல் தழைகளைப் பறித்துப்போட,
எமது வயிறும் நிறையும், மனமும் குளிரும்.
உமது தடியின் பலத்தை நானறிவேன்,
தேடி வரும் பகை விலங்குகளையும்,
ஊர்ந்து வரும்  சர்ப்பங்களையும்
பதம் பார்த்து, எனக்கு பந்திவைக்கிறீர்.

மரண இருளின் பள்ளத்தாக்கிலும், 
மாறாத உம் அன்பு என்னைத் தேற்றும்.
பட்டியிலே அடையும் மாலை நேரம்,
வாசலிலே அமர்ந்திருப்பீர்.
எண்ணெயால் எமை அபிஷேகிப்பீர்,
என் சிரசும் உடலும் புத்துணர்வு பெறும்!

நிரம்பி வழியும் பாத்திரமாய்,
நன்மையும், கிருபையும் தொடர்ந்திட,
ஜீவனுள்ள நாட்கள் நகரும்.
ஜீவாதிபதியாகிய உம் வீட்டிலே,
நித்திய காலமாய் நிலைத்திருப்பேன்,
நித்தியானந்தரே ஸ்தோத்திரம்!

Author: Sis. Vanaja Paulraj

Sis. Vanaja Paulraj